எம். தம்பிராஜா
டான் ஸ்ரீ, டத்தோ, டாக்டர் எம். தம்பிராஜா (M.Thambirajah பிறப்பு: டிசம்பர் 2, 1942) மலேசிய இந்தியர்கள் கல்வித் துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்று போராடி வருபவர்.[4] ஸ்ரீ முருகன் நிலையம் எனும் சமூகக் கல்வி மையத்தை உருவாக்கியவர்.[5][6] கடந்த 30 ஆண்டுகளில், மலேசியாவில் 16,000 இந்தியப் பட்டதாரிகள் உருவாவதற்கு மூல காரணமாக இருந்தவர்.[7][8][9] ஒவ்வோர் ஆண்டும், பத்துமலையில் பல இலட்சம்[10] இந்திய மாணவர்களை ஒன்று திரட்டி கல்வி யாத்திரை[11] எனும் ஓரணித் தியான வழிமுறைகளை விதைத்து வருகின்றவர்.[12] மலேசியாவில் இந்தியச் சமுதாயம் ஒதுக்கப்பட்ட ஒரு சமுதாயமாக மாறிவிடக்கூடாது.[13] அரசியல், பொருளாதாரத் துறைகளில் முன்னுக்கு வர வேண்டும் என்றால், மலேசிய இந்தியர்கள் கல்வித் துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்று ஸ்ரீ முருகன் நிலையத்தை உருவாக்கியவர்.[14] கல்விதான் மலேசிய இந்தியர்களின் ஆயுதம், ஒவ்வொரு வீட்டிலும் ஒரு பட்டதாரி இருக்க வேண்டும் எனும் கொள்கையை முன் வைத்துப் போராடி வருகிறார்.[15][16] மலாயாவிற்குச் சஞ்சிக் கூலிகளாக வந்த இந்தியர்களின் பிள்ளைகள், கூலிகளாகவே இருந்து விடக்கூடாது என்று மலேசிய இந்தியர்களிடம் கல்வி விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றவர்.[17] தொலைதூரங்களில் வாழும் ஏழை இந்திய மாணவர்கள் தங்கிப் படிப்பதற்கு ஆசிரமங்களையும்,[18] கல்வி மையங்களையும்[19] கட்டி வருகின்றார்.[20] அந்த ஆசிரமங்களில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் உள்ளூர், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் படிப்பதற்குத் தயார் படுத்தப்படுகின்றனர்.[21] அவருக்கு உதவியாக பல நூறு பட்டதாரி மாணவர்கள் ஆயுள்காலச் சேவைகளை வழங்கி வருகின்றனர்.[22][23] வாழ்க்கைச் சுருக்கம்டாக்டர் தம்பிராஜா 1942ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2-ஆம் தேதி, புக்கிட் தெங்ஙா, செபராங் பிறையில், ஓர் எளிமையான குடும்பத்தில் பிறந்தவர். தகப்பனாரின் பெயர் முனியாண்டி. தாயாரின் பெயர் ஆரம்மா. இவருக்கு மு. துரைவேல், மு. புஷ்பராஜா, மு. பன்னீர் செல்வம் என மூன்று சகோதரர்கள். மு. சரோஜினி, மு. தேவி, மு. ஜோதிமணி, மு. செல்வமணி என நான்கு சகோதரிகள். இவர்களில் பன்னீர் செல்வம் என்பவர் ஒரு மருத்துவர். கல்வி வாழ்க்கைதம்பிராஜா தன்னுடைய தொடக்கக் கல்வியைத் தமிழ், ஆங்கிலப் பள்ளிகளில் பயின்றார். உயர்நிலைக் கல்வியை, 1958ஆம் ஆண்டு, புக்கிட் மெர்தாஜாம் உயர்நிலைப் பள்ளியில் முடித்துக் கொண்டார். 1960இல் இங்கிலாந்தில் லிவர்பூலில் உள்ள கிர்க்பி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில்[24] ஆசிரியர் பயிற்சியைத் தொடங்கி இரண்டு ஆண்டுகளில் முடித்தார். 1950களில் மலாயாவில் பெரும்பாலான ஆங்கிலமொழி ஆசிரியர்கள், கிர்க்பி அல்லது பிரின்ஸ்பர்ட் கல்லூரிகளில் பயிற்சி பெற்றவர்கள் ஆகும். மலாயாவில் ஆங்கில மொழிக்கு என்று தனிப் பயிற்சிக் கல்லூரிகள் அப்போது இல்லை. 1963ஆம் ஆண்டுதான் உள்நாட்டு ஆங்கிலமொழிப் பயிற்சிக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. கிர்க்பி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிமலேசியாவிற்கு, கிர்க்பி கல்லூரி இதுவரை 1500 ஆசிரியர்களையும், 405 ஆசிரியர் பயிற்றுநர்களையும் உருவாக்கி உள்ளது. இந்த ஆசிரியர் பயிற்றுநர்கள்தான் பின் நாளில் மலாயா ஆசிரியர்ப் பயிற்சிக் கல்லூரிகளின் விரிவுரையாளர்களாகச் சேவை செய்தார்கள். பல ஆயிரம் மொழி ஆசிரியர்களை உருவாக்கினார்கள். நூற்றுக் கணக்கான இந்தியர்கள் ஆங்கிலமொழி ஆசிரியர்களாகப் பணிகளில் அமர்த்தப்பட்டனர். 1962ஆம் ஆண்டு, மலாயாவுக்குத் திரும்பிய தம்பிராஜா, சுங்கை பட்டாணியில் உள்ள இப்ராஹிம் உயர்நிலைப் பள்ளிக்கு அனுப்பப் பட்டார். அங்கு ஓர் ஆண்டு காலம் பணி புரிந்தார். பின்னர், 1963ஆம் ஆண்டு, கூலிம் நகரில் உள்ள சுல்தான் பாட்லிஷா பள்ளிக்கு மாற்றலாகிப் போனார். 1966ஆம் ஆண்டு வரை கெடாவில் ஆசிரியராகப் பணி புரிந்தார். பட்டப்படிப்பு1969ஆம் ஆண்டு, மலாயா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து வரலாற்றுத் துறையில் பட்டம் பெற்றார். மேலும் படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட அவர், 1971 ஆம் ஆண்டு, அமெரிக்காவில் உள்ள வாசிங்டன் பல்கலைக்கழகத்திற்குச் சென்று அங்கே முதுகலைப் படிப்பை முடித்துக் கொண்டார். 1972ஆம் ஆண்டு மலாயா பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறை விரிவுரையாளராகப் பணியாற்ற வாய்ப்பு கிட்டியது. உருசியப் புரட்சி, சோவியத் வரலாறு, சோவியத் வெளியுறவுக் கொள்கை, தென்கிழக்கு ஆசியாவில் இடதுசாரியினரின் கொள்கை போன்ற பாடங்களில் விரிவுரைகள் ஆற்றினார். 1974இல் தான் படித்த அதே வாசிங்டன் பல்கலைக்கழகத்திற்கு மீண்டும் சென்று, முனைவர் பட்டத்தையும் படித்து முடித்தார். 1980களில் மலேசிய உயர்நிலைப் பள்ளிகளில் இவர் எழுதி வெளியிட்ட Malaysia Dalam Sejarah எனும் வரலாற்றுப் பாட நூல் பயன்படுத்தப்பட்டது. அவர் சட்டம் பயில இங்கிலாந்து செல்வதற்கு முன் அந்தப் பாட நூல் எழுதப்பட்டது. மலேசியாவில் உள்நாட்டு ஆவண அமைப்பில் எழுதப்பட்ட முதல் நூல் எனும் பெருமையும் அதற்கு உண்டு. அதைத் தவிர History for Primary Schools எனும் பாட நூலையும் அவர் எழுதியுள்ளார். ஸ்ரீ முருகன் நிலையம்இந்தக் கால கட்டத்தில்தான் ஸ்ரீ முருகன் நிலையம் உருவாவதற்கான அடித்தளம் போடப்பட்டது. ஒரு சமுதாயம் உயர்ந்து வளர்வதற்கும், தாழ்ந்து போவதற்கும் கல்விதான் அஸ்திவாரம் என்பதை தம்பிராஜா முழுமையாக நம்பினார். எதிர்காலத்தில் இந்தியர்கள் பின் தள்ளப்படும் அவலநிலை மலேசியாவில் ஏற்படலாம் என்று சந்திக்கின்ற எல்லா இந்தியர்களிடம் சொல்லி வந்தார்.[25] கல்வி இல்லை என்றால் ஒரு சமுதாயம் முன்னேற முடியாது. அந்தச் சமுதாயம் ஓரங்கட்டப்பட்டு விடும் என்பதைத் தமிழ்க் கல்வியாளர்களிடம் வலியுறுத்தி வந்தார். அரசியல் தலைவர்களிடமும் அழுத்தம் திருத்தமாய்ச் சொன்னார். சிலர் உதவிகள் செய்ய முன்வந்தனர். பலர் அவரை விட்டு விலகிச் சென்றனர். அப்போது தம்பிராஜாவுக்கு மனதில் இனம் புரியாத இறுக்கம் ஏற்பட்டது.[26] 1969 மே கலவரம்அந்தச் சமயத்தில், அதாவது 1970 – 1980களில் மலேசிய இந்தியச் சமுதாயம் பொருளாதாரத் துறையில் மிக மிகப் பின் தங்கிய நிலையில் இருந்தது.[27] 1969 மே மாத கலவரத்திற்குப்[28][29] பிறகு, மலேசியாவில் இருந்த பல இந்தியச் செல்வந்தர்களுக்கு இரண்டும் கெட்டான் நிலை ஏற்பட்டது. இருக்கிற நிலபுலன்களை, முடிந்த வரையில் விற்றுவிட்டு தாயகம் திரும்பினர். சிலர் தங்கள் நிலங்களை மிகக் குறைந்த விலைக்கு விற்றனர்.[30] மலாயாவில் வாழ்ந்த இந்தியர்கள் 1969-1970களில் ஏறக்குறைய 450 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள நிலங்களை மலேசியச் சீனர்களுக்கு விற்றுச் சென்றுள்ளனர். அப்போது 450 மில்லியன் ரிங்கிட் என்பது பெரிய பணத்தொகை ஆகும். மலேசியாவில் இந்தியர்களின் பொருளாதார மூலதனம் குறைந்து போனதற்கு அதுவும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது. அந்தக் கட்டத்தில் பல ஆயிரம் சீனர்களும் சீனாவிற்குத் திரும்பிச் சென்றனர். மலேசிய இந்தியர்களின் பின்னடைவுகள்1969 மே மாத கலவரத்திற்குப் பிறகு, மலேசியாவின் அரசியல் நிர்வாகம் முழுமையாக மலாய்க்காரர்களின் கைவசம் மாறியது. சீனர்களிடம் பொருளாதார பலம் இருந்தது. 1890-1900களில் இந்தியாவில் இருந்து பிரித்தானியர்களால் கொண்டு வரப்பட்ட தென்னிந்தியர்கள், காலம் காலமாக ரப்பர் தோட்டங்களையும், பொது மராமத்துக் கடைநிலைப் பணிகளை மட்டுமே நம்பி வாழ்ந்து வந்தனர்.[31] மலேசிய இந்தியச் சமூகத்தவரின் பிள்ளைகளுக்கு உயர்க் கல்விகளுக்கான வாய்ப்புகள் முழுமையாக வழங்கப்படவில்லை. ஒவ்வொரு தோட்டத்திலும் தமிழ்ப்பள்ளிகள் இருந்தாலும் ஆறாம் வகுப்பிற்கு மேல் படிக்க வசதிகள் ஏற்படுத்தித் தரப்படவில்லை. மலேசிய இந்தியச் சமுதாயத்தின் பின்னடைவுகளுக்கு அதுவும் ஒரு முக்கிய காரணமாகும்.[32] மலேசிய இந்தியச் சமூகத்தவர் புறக்கணிக்கப்படுகின்றனர் என்பதை மையமாகக் கொண்டு, 2007 நவம்பர் மாதம், கோலாலம்பூரில் ஒரு பெரிய பேரணியும் நடைபெற்றது.[33] சமுதாய விழிப்புணர்வு1960களில், மலேசிய இந்தியச் சமூகத்தின் மூன்றாம் தலைமுறையினர் தலையெடுத்தனர். அவர்களில் ஒரு சிலர் உயர்க் கல்வி பெற்றவர்களாகவும் இருந்தனர். பெரும்பாலும் தோட்டப்புறங்களில் இருந்து நகர்ப்புறங்களுக்குப் புலம்பெயர்ந்தவர்களின் பிள்ளைகள்தான் படித்தவர்களாக இருந்தார்கள்.[34] அவர்கள்தான் தங்களுடைய சமூகத்திற்கு ஏற்பட்டு வரும் அவலநிலைகளைக் கண்டறிந்தனர். ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டது.[35] தங்களுடைய சமுதாயத்தை எப்படியாவது காப்பாற்றியாக வேண்டும் எனும் இலட்சியத்தை உருவாக்கிக் கொண்டனர். அந்த வகையான விழிப்புணர்வும், இந்திய சமூகத்திற்கு கல்வித் துறையில் ஏதாவது செய்ய வேண்டும் எனும் எண்ணமும் தம்பிராஜாவிடம் மேலோங்கி நின்றது. பல்கலைக்கழகத்தில் பாடம் நடத்திக் கொண்டு இருக்கும் போது, இந்திய மாணவர்களிடம் அதைப் பற்றியே நிறைய பேசினார். அவர்களிடம் விவாதமும் செய்தார்.[36] மலாயா பல்கலைக்கழகத் தமிழ் மொழிக் கழகம்தம்பிராஜாவிடம் பயின்ற மாணவர்களிடையே சமுதாய விழிப்புணர்வுகள் மிளிரத் தொடங்கின. சில மாணவர்களுக்கு உணர்வுகள் துடித்தன. ஒரு நாள், மலாயா பல்கலைக்கழகத்தின் 42 மாணவர்கள் ஒன்று கூடினர். மாணவர்கள் அனைவரும் மலாயா பல்கலைக்கழகத்தின் தமிழ் மொழிக் கழகத்தைச் சேர்ந்தவர்கள். அப்போது மலாயா பல்கலைக்கழகத் தமிழ் மொழிக் கழகத்தின் தலைவராக டத்தோ ஆ. தெய்வீகன் இருந்தார்.[37] இவர் தற்சமயம், மலேசியா,சிலாங்கூர் மாநிலக் காவல் துறையின் துணைத் தலைவர் ஆகும்.[38] மலேசியக் காவல் துறையின் மிக உயரிய பதவிகளில் பணியாற்றும் தமிழர்களில் இவரும் ஒருவர் ஆவார். அந்த மாணவர்கள் அனைவரும் தெய்வீகன் தலைமையில் டாக்டர் தம்பிராஜாவைப் போய்ப் பார்த்தனர்.[39] டத்தோ ஆ. தெய்வீகன்தம்பிராஜாவிற்கு உதவியாக மற்றும் ஒரு விரிவுரையாளர் டாக்டர் எம். இராஜேந்திரன் என்பவர் இருந்தார். இருவருமே மலாயா பல்கலைக்கழகத்தின்[40] வரலாற்றுத் துறை விரிவுரையாளர்கள். மாணவர்களும் விரிவுரையாளர்களும் கலந்துரையாடினர்.இந்திய சமுதாயத்தைக் கல்வியின் வழி, எப்படி உயர்த்திக் காட்டுவது என்று கருத்துகளைப் பரிமாறிக் கொண்டார்கள். அந்தச் சந்திப்பு நிகழ்ச்சியின் உறைகலனாக அமைந்ததுதான் ஸ்ரீ முருகன் நிலையம். தெய்வத்தின் பெயரிலேயே ஒரு கல்விக் கோயிலை உருவாக்கினார்கள். 1982 செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி, மலாயா பல்கலைக்கழக ‘டி’பயிலரங்கில் ஸ்ரீ முருகன் நிலையம் தோற்றுவிக்கப்பட்டது. எஸ்.டி.பி.எம். பயிற்சி மையம்மலேசிய இந்தியர்களின் வரலாற்றில் ஒரு முக்கியமான நாள் என்று சொல்லப்படுகிறது. அதன் பின்னர் ஆயிரக் கணக்கான இந்திய ஏழை மாணவர்கள் பட்டதாரிகளானார்கள். அடுத்து வந்த ஆறு மாதங்களில் விரிவுரைக் கூறுகள், தேர்வு வழிகாட்டிகள், பயிற்சி உபகரணங்கள் தயாரிக்கப்பட்டன. அவர்களின் முதல் இலக்கு STPM தேர்வு எழுதும் மாணவர்கள்தான். STPM என்றால் Sijil Tinggi Pelajaran Malaysia. மலேசிய உயர்க்கல்விச் சான்றிதழ் என்று பொருள். பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கு முன்னால் மாணவர்கள் இரு ஆண்டுகள் உயர்க்கல்வி பயில வேண்டும். அதைத்தான் எஸ்.டி.பி.எம். என்பார்கள். ஸ்ரீ முருகன் கற்பித்தல் திட்டங்கள்அவர்கள் எஸ்.டி.பி.எம். பயிற்சி மையத்தைத் தொடங்குவதற்கு காரணங்கள் உள்ளன. 1970, 1980களில் எஸ்.டி.பி.எம். மாணவர்களின் அடைவு நிலைகள் மிகவும் பின் தங்கிய நிலையில் இருந்தன. உள்நாட்டுப் பல்கலைக்கழகங்களில், இந்திய மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை நிறைவு செய்யவே மாணவர்கள் இல்லாமல் போய்விட்டனர். ஒவ்வொரு எஸ்.டி.பி.எம். பாடத்திற்கும் 25 பாடம் கற்பித்தல் திட்டங்கள். பாடத் திட்டங்களைப் பல்கலைக்கழக மாணவர்களும், விரிவுரையாளர்களும், அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களும் சேர்ந்து தயாரித்தார்கள். தம்பிராஜா தலைமை ஆலோசகராக இருந்தார். வேலை செய்பவர்கள்தான் வேண்டும்பாடத் திட்டங்களில் பயிற்சிகள், பயிலரங்குகள், முன்மாதிரி விடைகள், பழைய தேர்வுத் தாட்கள், பதில் நுட்பக் கூறுகள், உத்திகள், குறிப்புகள், சுயமாகப் பயிலும் திட்டங்கள், ஊக்குவிப்பு உரைகள் போன்றவையும் அடங்கும். We need workers not talkers[41] என்பதே அவர்களின் தலையாய நோக்கமாகவும் இருந்தது. ‘எங்களுக்கு வேலை செய்பவர்கள்தான் வேண்டும். பேசுபவர்கள் அல்ல’என்பதே அதன் பொருளாகும்.[42][43] முதல் எஸ்.டி.பி.எம். வகுப்பு செப்டம்பர் 1982 லிருந்து 1983 ஏப்ரல் வரை நடைபெற்றது. பெட்டாலிங் ஜெயா ஜாலான் 12/19இல், ஒரு வீடு வாடகைக்கு எடுக்கப்பட்டு வகுப்பு நடத்தப்பட்டது. அதே 1983ஆம் ஆண்டில், பெட்டாலிங் ஜெயா, செந்தூல், கிள்ளான், சிரம்பான் ஆகிய நகரங்களில் வகுப்புகள் திறக்கப்பட்டன. அப்படியே படிப்படியாக வளர்ந்து வந்ததுதான், இப்போது உலகமே வியந்து பார்க்கும் ஸ்ரீ முருகன் நிலையம்.[44][45] ஸ்ரீ முருகன் நிலையத்தில் கல்வி பயின்ற மாணவர்கள் பலர், அரசு தேர்வுகளில் பல சாதனைகளைப் படைத்துள்ளனர்.[46][47][48][49] 16,000 பட்டதாரிகள்ஸ்ரீ முருகன் நிலையத்திற்கு இப்போது 200க்கு மேற்பட்ட கல்வி மையங்கள் உள்ளன. அவற்றில் 20,000 மாணவர்கள் பயில்கின்றனர். ஸ்ரீ முருகன் நிலையத்தில் படித்து, இதுவரையில் 16,000 பேர் பட்டதாரிகளாக வெளி வந்துள்ளனர்.[50] ஓர் ஆண்டிற்கு ஏறக்குறைய 800 பட்டதாரிகளை, ஸ்ரீ முருகன் நிலையம் உருவாக்கி வருகிறது. இது ஒரு பெரிய சாதனை. அது மலேசிய இந்தியர்களின் கல்வித் தரத்தை உலகளாவிய நிலையில் அறியச் செய்யும் சாதனை.[51][52][53] இது தவிர, ஆண்டுதோறும் ஒரு சிறந்த தாயாரைத் தேர்ந்து எடுத்து அவரைக் கௌரவிப்பும் செய்கிறது.[54] மலேசிய அரசாங்கமும், மாநில அரசாங்கங்களும் ஸ்ரீ முருகன் நிலையத்திற்கு, பல வகைகளில் நிதியுதவிகள் செய்து வருகின்றன.[7] ஸ்ரீ முருகன் நிலையத்தின் ஜீவநாடிகளாக அதன் துணை இயக்குநர்கள் இயங்கி வருகின்றனர். அவர்களில் ஒருவர் டாக்டர் பிரகாஷ் ராவ்.[55][56] தற்சமயம் மலேசியத் துணையமைச்சர் டத்தோ டத்தோ எஸ்.கே. தேவமணியின் அரசியல் செயலாளராகவும் பணியாற்றி வருகிறார். மேலும் இருவர் துணை இயக்குநர்களாக அரிய சேவைகளைச் செய்து வருகின்றனர். மலேசியக் கல்வியாளர்கள் எல். கிருஷ்ணன், கே. சுரேந்திரன் ஆகிய இருவரும் ஸ்ரீ முருகன் நிலையத்தின் துணை இயக்குநர்கள். டத்தோ எஸ்.கே. தேவமணியும் மூத்த துணை இயக்குநர் ஆகும். நூற்றுக்கணக்கான பட்டதாரிகள், நாடளாவிய நிலையில், ஸ்ரீ முருகன் நிலையத்தில் தன்னார்வத் தொண்டுகள் செய்து வருகின்றனர். அவர்களில் எம். தமிழ்ச்செல்வம், எம். புகனேஸ்வரி போன்றவர்களின் சேவைகள் பாராட்டத் தக்கவை. இவர்கள் மலேசியப் பல்கலைக்கழகங்களில், மிகவும் அரிதாகக் கிடைக்கும் 1st Class Honors பெற்றவர்கள். ஸ்ரீ முருகன் நிலையத்தைத் தோற்றுவித்த பின்னர் தம்பிராஜா, சட்டம் பயில இங்கிலாந்து சென்றார். 1987இல் லண்டன் பல்கலைக்கழகத்தில் எல்.எல்.பி. பட்டம் பெற்றார். Certificate of Legal Practice என்று அழைக்கப்படும் வழக்கறிஞர்த் தொழில் செய்வதற்கான சான்றிதழை, 1988ஆம் ஆண்டு மலாயா பல்கலைக்கழகத்தில் இருந்தும் பெற்றார். மலேசியாவில் உள்ள காவல் துறைக் கல்லூரிகளில், விரிவுரையாளராகப் பணியாற்றிய அனுபவம் தம்பிராஜாவுக்கு உண்டு. 1976 ஆம் ஆண்டில் இருந்து 1989 ஆம் ஆண்டு வரை, மலேசியக் காலாட் படை அதிகாரிகள் கல்லூரியிலும், கோலாகுபு பாரு காவல் துறைக் கல்லூரியிலும் இவர் விரிவுரைகள், பயிலரங்குகள், மாநாடுகளை நடத்தியுள்ளார். விருதுகள்இவருடைய சேவைகளைப் பாராட்டி சிலாங்கூர் சுல்தான் 1999 ஆம் ஆண்டு SMS விருதையும், பினாங்கு கவர்னர் 2001 ஆம் ஆண்டு DPMS எனும் டத்தோ விருதையும், மாட்சிமை தங்கிய பேரரசர் PSM எனும் டான்ஸ்ரீ விருதையும் வழங்கி கௌரவித்துள்ளனர். இவருடைய மனைவியின் பெயர் இந்திராணி அருணாசலம். இவர் ஓய்வு பெற்ற ஓர் ஆசிரியர். இரண்டு பிள்ளைகள். மூத்தவர் டாக்டர் சுமித்ரா. இளையவர் ஆனந்த். மருமகனின் பெயர் டாக்டர் கௌரவ் குப்தா. ஒரே ஒரு பேத்தி. பெயர் லைலா. ஸ்ரீ முருகன் நிலையத்தின் சேவைகள் பாராட்டுக்குரியவை. மலேசிய இந்திய சமூகத்திற்காகப் போராடி வருகிறது.[57] அவர்களின் ஒழுங்கு முறைகள் உலக மக்களை வியக்க வைக்கிறது.[58] தன்னார்வத்தையும் தாண்டி நிற்கும் சமூகத் தொண்டுகள்.[59][60] மலேசிய அரசாங்கம் பல வகைகளில் ஸ்ரீ முருகன் நிலையத்திற்கு உதவிகள் செய்து வருகிறது.[61] காணொளிகள்கல்வி யாத்திரை http://www.youtube.com/[62] பிரதமர் நஜீப் http://www.youtube.com/watch?v=2CFoxAXjjfA&feature=relmfu/ ஆண்டு விழா http://www.youtube.com/watch?v=2hNvrPfxA_c&feature=related மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia