கிளிப்பர் நடவடிக்கை
கிளிப்பர் நடவடிக்கை (Operation Clipper) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நேச நாடுகளுக்கும், நாசி ஜெர்மனிக்கும் நடந்த ஒரு சண்டை. சிக்ஃபிரைட் கோடு போர்த்தொடரின் ஒரு பகுதியான இதில் நேசநாட்டுப் படைகள் ரோயர் பகுதியின் கெய்லென்கிர்ச்சென் வீக்கப்பகுதியைக் (salient) கைப்பற்றின. கெய்லென்கிர்ச்சென் பகுதி வர்ம் ஆற்றுக்கு அருகே ஆஃகன் நகரிலிருந்து தெற்கே 20 கி. மீ தொலைவில் உள்ளது. இது ஜெர்மானிய அரண்நிலையான சிக்ஃபிரைட் கோட்டின் ஒரு பகுதியாகும். பிரிட்டானிய 2வது ஆர்மியின் படைநிலைகளுக்கும் அமெரிக்க 9வது ஆர்மியின் படைநிலைகளுக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்திருந்த இந்த வீக்கப்பகுதி நேசநாட்டுப் படைப் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தது. எனவே இதனைக் கைப்பற்ற நேசநாட்டுத் தளபதிகள் முடிவு செய்தனர். கிளிப்பர் நடவடிக்கை என்று குறிப்பெயரிடப்பட்ட கெய்லென்கிர்ச்செனைக் கைப்பற்றும் முயற்சி, நவம்பர் 18ம் தேதி தொடங்கியது. ரோயர் பகுதி, ஊர்ட்கென் காடு ஆகிய பகுதிகளைக் கைப்பற்றும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இது மேற்கொள்ளப்பட்டது. நவம்பர் 18, 1944ல் பிரிட்டானிய 30வது கோர் கெய்லென்கிர்ச்சென் மீதான தாக்குதலைத் தொடங்கியது. கன மழையினூடே இரு தரப்புகளுக்கிடையே சண்டை நடைபெற்றது. இரு நாட்கள் சண்டைக்குப்பின் கெய்லென்கிர்ச்சென் வீக்கபகுதியை நேசநாட்டுப் படைகள் கைப்பற்றின. தொடர் மழை பெய்து கொண்டிருந்ததால் அதன் சுற்றுப்புறப் பகுதிகளை உடனே கைப்பற்ற முடியவில்லை. நவம்பர் 23ம் தேதி முன்னேற்றமின்மையால் கிளிப்பர் நடவடிக்கையை நேசநாட்டுத் தளபதிகள் முடித்துக் கொண்டனர். |
Portal di Ensiklopedia Dunia