கிழக்கு மாகாண சபை (Eastern Provincial Council, EPC) என்பது இலங்கையின்கிழக்கு மாகாணத்திற்கானசட்டவாக்க அவை ஆகும். இலங்கை அரசியலமைப்பின் படி, கிழக்கு மாகாண சபை கிழக்கு மாகாணத்தின் வேளாண்மை, கல்வி, சுகாதாரம், வீடமைப்புத் திட்டம், உள்ளூராட்சிகள், சாலைவழிப் போக்குவரத்து, சமூக சேவை போன்றவற்றின் நிருவாகங்களைக் கவனிக்கும். இவற்றை விட காவல்துறை அதிகாரம், காணி போன்றவற்றுக்கும் அரசியலமைப்பின் படி இதற்கு அதிகாரங்கள் உள்ளன, ஆனாலும் நடுவண் அரசு இவற்றுக்கான அதிகாரங்களை மாகாண அரசுக்கு வழங்க மறுத்து வருகின்றது. கிழக்கு மாகாண சபையில் 37 பேர் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
வரலாறு
1987 சூலை 29 இல் கையெழுத்திடப்பட்ட இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் படி அதே ஆண்டு நவம்பர் 14 இல் இலங்கை நாடாளுமன்றம் தனது அரசியலமைப்பில் 13வது திருத்தம் மற்றும் மாகாணசபைச் சட்டம் இல. 42 (1987) ஆகியவற்றை அறிவித்தது.[1] 1988 பெப்ரவரி 3 இல் ஒன்பது மாகாணசபைகள் உருவாக்கப்பட்டன. இந்த ஒன்பது மாகாணசபைகளில் இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் படி கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்கள் ஒன்றிணைக்கப்பட்டு ஒரு நிருவாகத்தின் கீழ் கொண்டுவர இணக்கம் காணப்பட்டது. இவ்விணைப்பு நிரந்தர இணைப்பாக இருப்பதற்கு கிழக்கு மாகாணத்தில் 1988 திசம்பர் 31 இற்குள் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.[2] 1988 செப்டம்பர் 2 இல் இரு மாகாணங்களும் வடக்கு கிழக்கு மாகாண சபையாக இணைக்கப்பட்டன.[3] இந்த இணைந்த மாகாணசபைக்கான முதலாவது தேர்தல் 1988 நவம்பர் 19 இல் நடத்தப்பட்டது. இந்தியாவின் ஆதரவில் இயங்கிய ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி இத்தேர்தலில் வெற்றி பெற்றது. தமிழர் விடுதலைக் கூட்டணி இத்தேர்தலில் பங்கேற்கவில்லை.
1990, மார்ச்சு 1 அன்று, இந்திய அமைதி காக்கும் படையினர் இலங்கையை விட்டுப் புறப்படும் தறுவாயில், வடகிழக்கு மாகாணசபையின் முதலமைச்சர் அ. வரதராஜப் பெருமாள் மாகாணசபைக் கூட்டத்தில் தமிழீழத்தைப் பிரகடனப்படுத்தி விட்டு நாட்டை விட்டு வெளியேறினார்.[4] இதனை அடுத்து அன்றைய அரசுத்தலைவர் பிரேமதாசா வட-கிழக்கு மாகாணசபையைக் கலைத்து, நடுவண் அரசின் நேரடி ஆட்சியைக் கொண்டு வந்தார்.
வட-கிழக்கு இணைப்புத் தொடர்பான பொது வாக்கெடுப்பு எப்போது இடம்பெறவில்லை. தற்காலிக இணைப்பு ஒவ்வோர் ஆண்டும் அரசுத்தலைவர்களால் தற்காலிக இணைப்பாக நீடிக்கப்பட்டு வந்தது.[5] இலங்கைத் தேசியவாதிகளால் இந்த இணைப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு வந்தது. இவர்களின் நீண்ட கால எதிர்ப்பினை அடுத்து, 2006 சூலை 14 இல் மக்கள் விடுதலை முன்னணி கிழக்கு மாகாணத்துக்கெனத் தனியே மாகாணசபை நிறுவ வேண்டும் என இலங்கை உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது.[3] இவ்வழக்கு விசாரணையை அடுத்து அன்றைய அரசுத்தலைவர் ஜெயவர்தனாவினால் அறிவிக்கப்பட்ட இணைப்பு சட்டவிரோதமானது எனக் கூறி அதனை செல்லுபடியற்றதாக்குவதாக 2006 அக்டோபர் 16 இல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.[3] இதனை அடுத்து 2007 சனவரி 1 இல் வடகிழக்கு மாகாணசபை இரண்டாகப் பிரிக்கப்பட்டது. கிழக்கு மாகாணசபை கொழும்பின் நேரடி நிருவாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு, 2008 மே 10 இல் முதலாவது தேர்தல் நடைபெற்றது.