சஃப்தர்சங் வானூர்தி நிலையம்
சஃப்தர்சங் வானூர்தி நிலையம் (Safdarjung Airport, (ஐஏடிஏ: N/A, ஐசிஏஓ: VIDD)) இந்தியத் தலைநகர் புது தில்லியில் உள்ள வானூர்தி நிலையமாகும். இது இதே பெயருள்ள சஃப்தர்சங் அண்டையலில் உள்ளது. பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு காலத்தில் வில்லிங்டன் வான்களம் என நிறுவப்பட்ட இது வானூர்தி நிலையமாக 1929இல் இயங்கத் தொடங்கியது. மும்பையின் ஜுஹு வானூர்தி நிலையத்திற்கு அடுத்து இந்தியாவின் இரண்டாவது வானூர்தி நிலையமாக இது துவங்கப்பட்டது. தில்லியின் முதல் மற்றும் ஒரே வானூர்தி நிலையமாகவும் விளங்கியது. இரண்டாம் உங்கப் போரின் போது இது மிகவும் பயன்படுத்தப்பட்டது. இந்திய-பாகிஸ்தான் போர், 1947 போதும் இது பெரிதும் இயக்கத்தில் இருந்தது. லூட்டியன்சு வடிவமைத்த புது தில்லியின் எல்லையில் அமைந்திருந்த இந்த வானூர்தி நிலையத்தை தற்போது விரிவடைந்த நகரம் முற்றிலும் சூழ்ந்துள்ளது. 1962 வரை நகரின் முதன்மை வானூர்தி நிலையமாக விளங்கிய சஃப்தர்சங் வானூர்தி நிலையத்திலிருந்து வான்சேவைகள் 1960களின் பிற்பகுதிகளிலிருந்து புதியதாகக் கட்டப்பட்ட இந்திரா காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையத்திற்கு மாற்றப்பட்டது. இந்த வானூர்தி நிலையத்தில் தாரை வானூர்தி போன்ற புதிய பெரிய வானூர்திகள் வந்து செல்ல வசதிகள் இல்லை.[1] [2] 1928இல் இங்கு தில்லி பறக்கும் சங்கம் நிறுவப்பட்டது; இரு டி ஆவிலாந்து மோத் இரக வானூர்திகள் ‘தில்லி’, ‘ரோசனாரா’ எனப் பெயரிடப்பட்டு பயிற்சிகளுக்கு பயன்பட்டு வந்தன. 2001ஆம் ஆண்டு வரை இது இயக்கத்தில் இருந்தது. இருப்பினும் சனவரி 2002இல் செப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள் பிறகான பாதுகாப்பு நடவடிக்கைகளால் அரசு இங்கிருந்து பறப்பதை தடை செய்துள்ளது. தற்போது இச்சங்கம் இங்கு வானூர்தி பராமரிப்பு கல்வியை வழங்கி வருகின்றது.[3] தற்போது பிரதமர், குடியரசுத் தலைவர் உள்ளிட்ட மிக முதன்மையான நபர்கள் இங்கிருந்து உலங்கு வானூர்தி மூலம் இந்திரா காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம் செல்லப் பயன்படுத்துகின்றனர்.[4] 190 ஏக்கர் பரப்பளவுள்ள வானூர்தி நிலைய வளாகத்தில்[4] உள்ள இராசீவ் காந்தி பவனில் குடிசார் வான்பயண அமைச்சகமும் இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையத் தலைமையகமும் இயங்குகின்றன. மேற்சான்றுகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia