சமந்தபத்திரர் என்பவர் பொ.ஊ. 2ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த திகம்பர ஆச்சாரியர் (துறவிக் குழுத் தலைவர்)ஆவார்.[1][2] இவர் சமணக் கொள்கையான அநேகாந்தவாதத்தின் முன்னோடியாவார். ரத்னகரந்த சிராவகாசாரம் என்பது சமந்தபத்திரரின் புகழ்பெற்ற நூலாகும். சமந்தபத்திரர், உமாசுவாமிக்குப் பின்னரும், பூச்சியபாதருக்கு முன்பும் வாழ்ந்துள்ளார்.
வாழ்க்கை
சமந்தபத்திரர் பொ.ஊ. 150இலிருந்து 250 வரை வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இவர், தென்னிந்தியாவில் சோழர் ஆட்சிக்காலத்தில் வாழ்ந்துள்ளார். இவர் ஒரு கவிஞரும், அளவையியலாளரும் (logician), புகழ்பாடுனரும் (eulogist), தேர்ந்த மொழியியலாளரும் ஆவார்.[3] இவரே தென்னிந்தியாவில் சமண மதத்தைப் பரப்பியவராகக் குறிப்பிடப்படுகிறார்.[4]
சமந்தபத்திரர், தனது துறவு வாழ்வின் முற்பகுதியில் பசுமக (அடங்காப்பசி) என அறியப்பட்ட நோயினால் தாக்கப்பட்டார்.[5] திகம்பரத் துறவிகள் ஒருநாளைக்கு ஒருவேளைக்கு மேல் சாப்பிடக் கூடாது என்பதால், இவர் மிகுந்த வேதனைக்குள்ளானார். இறுதியில், தமது ஆசிரியரிடத்தில், சல்லேகனை எனும் உண்ணாநோன்பிருந்து உயிர்விடும் வழக்கத்தை மேற்கொள்ள அனுமதி கேட்டார்.[6] எனினும், அதற்கு அனுமதி மறுத்த இவரது ஆசிரியர், துறவு வாழ்விலிருந்து விலகி, அந்நோயைக் குணப்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.[5] அந்நோயைக் குணப்படுத்திக்கொண்டபின், மீண்டும் துறவியான சமந்தபத்திரர் பெரும் சமண ஆச்சாரியராக உருவெடுத்தார்.[7]
கருத்துக்கள்
சமந்தபத்திரர் குந்தகுந்தரின் இரு னயங்களை உறுதிப்படுத்தினார். அவை, வியவகாரனய ('உலகியல்') மற்றும் நிச்சயனய (கடைமுடிவு, முற்றறிவு) என்பனவாகும். எனினும், உலகியல் பார்வை என்பது பொய்யல்ல என வாதிட்ட அவர், மொழி மற்றும் கருத்துக்களால் மெய்யறிவின் ஒரு சார்புத் தோற்றம் மட்டுமே வெளிப்படுத்தப்படுவதாகவும், அதேவேளை முற்றறிவு என்பது மெய்யறிவின் நேர் வடிவமெனவும் குறிப்பிட்டார்.[8] சமந்தபத்திரர் சமணக் கொள்கையான சியாத்வாதத்தினையும் வளர்த்தெடுத்தார்.[சான்று தேவை]
எழுதிய நூல்கள்
சம்பத் ராய் செயின் என்பவரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட ரத்னகரந்த சிராவகாசாரம் (1917)
ஆச்சாரிய சமந்தபத்திரரால் எழுதப்பட்ட சமண நூல்கள்:[9]
ரத்னகரந்த சிராவகாசாரம்[10] (150 வரிகள்)- ரத்னகரந்த சிராவகாசாரம் சிராவகரின் (சமண இல்லறத்தோர்) ஒழுக்க நெறிகள் பற்றி விரிவாக விவரிக்கின்றது.[4]
கந்தகசுதிமகாபாசிய, தத்துவார்த்த சூத்திரத்தின் சிறப்பு வாய்ந்த உரையாகும். கந்தகசுதிமகாபாசியத்தின் மங்களசரணம் (கடவுள் வாழ்த்து) தவிர்ந்த ஏனைய பகுதிகள் இன்றும் வழக்கில் உள்ளது.[11] மங்களசரணம், தேவகம தோத்திரம் அல்லது ஆப்த-மீமாம்சை என்று அறியப்படுகிறது.[4][12]
ஆப்தமீமாம்சை- 114 வரிகளைக் கொண்ட இவ்வாய்வுக் கட்டுரை சமணக் கருத்தியலான முற்றறிவு மற்றும் முற்றறிவாளரின் இயல்புகள் பற்றி விளக்குகிறது.[4][13]
சுயம்புதோத்திரம் (பொ.ஊ. 5ம் நூற்றாண்டு)[14] - இருபத்து நான்கு தீர்த்தங்கரர்கள் பற்றிய சமக்கிருத வழிபாடு.[15] - 143 வரிகள்.[4] இது பின்னர் ஆக்ராவைச் சேர்ந்த தியானத்திரை (1676-1726) என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டது.[14]
யுக்தியனுசாசனம் - தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரர் புகழைப் பாடும் அறுபத்து நான்கு வரிகள் கொண்ட நூல்.[4]
சினசதகம் (துதிவித்யா)[16](116 வரிகள்)- இருபத்து நான்கு சினர்களின் புகழ்பாடும் சம்க்கிருத மொழியில் அமைந்த கவிதை நூல்.[17]
ஆச்சாரிய சமந்தபத்திரரின் புகழ் ஏனைய அனைத்துக் கவிஞர்கள், அறிஞர்கள், வாதம் புரிவோர் மற்றும் போதகர்களையும் விஞ்சி நிற்கின்றது; அவர்களின் தலையில் சூடத்தக்க இரத்தினம் போன்றவர்.