விஜய் தனது இரசிகர் மன்றமான, விஜய் மக்கள் இயக்கத்தை புதுக்கோட்டையில் 2009 ஆம் ஆண்டு சூலை மாதம் 26 ஆம் தேதியன்று தனது ரசிகர்களை ஒருங்கிணைப்பதற்காகவும் அவர்களது நற்பணி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும் தொடங்கினார்.[11][12]2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவையும் அவரது கூட்டணி கட்சித் தலைவர்களையும் ஆதரித்து விஜய் மற்றும் அவரது தந்தை சந்திரசேகரும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டனர். விஜய் ரசிகர் நற்பணி மன்ற ரசிகர்களும் தேர்தல் களத்தில் வேலை செய்தனர். இத்தேர்தலில் வெற்றி பெற்ற ஜெயலலிதா, விஜய் மற்றும் அவரது ரசிகர் மன்றத்திற்கு நன்றி தெரிவித்தார்.[சான்று தேவை]. 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்று போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்ந்த வேட்பாளர்கள் 170 தொகுதிகளில் போட்டியிட்டு 115 தொகுதிகளில் வெற்றி பெற்று மாமன்ற உறுப்பினர்களாக தேர்வாகினர்.[13][14]. 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதியன்று 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற கட்சி துவங்கப்பட்டு, தேர்தல் ஆணையத்தில் அதிகாரபூர்வமாகப் பதிவு செய்ய விண்ணப்பிக்கப்பட்டது.
தேர்தல்
தமிழக வெற்றிக் கழகம் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாது என்றும், எந்தக் கட்சிக்கும் ஆதரவு அளிக்காது என்றும் விஜய் தெரிவித்தார்.[15] 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றதிற்கு வழிவகுப்பது தனது கட்சியின் இலட்சியம், நோக்கம் என்றும் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கிற திருக்குறள் வரிகளுக்கு ஏற்ப தன் கட்சியின் முழக்கமாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.[16]
முதல் மாநில மாநாடு
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள வி. சாலை என்ற இடத்தில் 2024 அக்டோபர் 27 அன்று நடைபெற்றது.[17] ஏறத்தாழ 80,000 இருக்கைகள் வரை போடப்பட்டிருந்த நிலையில் இருக்கைகளைத் தாண்டியும் தொண்டர்களின் கூட்டம் இருந்ததாக ஊடகங்கள் தெரிவித்தன.[18] மாநாட்டின் முக்கிய நிகழ்வாக 100 அடி நீளமுள்ள கொடிக்கம்பத்தில் தனது கட்சியின் கொடியை ஏற்றிய பின் நடிகர் விஜய் தொண்டர்களிடம் உரையாற்றினார். கட்சியின் கொள்கைகளைப் பற்றி விரிவாகப் பேசிய அவர் தமிழ் தேசியமும், பெரியாரின் திராவிடமும் தனது கட்சியின் இரு முக்கிய கொள்கைகள் என அறிவித்தார்.[19] இம்மாநாட்டில், எட்டு இலட்சம் பேர் பங்கேற்றதாக மாலைமலர் செய்தி வெளியிட்டது.[20] இரு மொழிக் கொள்கை, சமூக நீதி, சமத்துவம், மதச்சார்பின்மை, சமூகவுடைமை (சோசலிசம்) மற்றும் மக்களாட்சி (ஜனநாயகம்) போன்ற கொள்கைகளை கட்சி நிலைநிறுத்தும் என்று விஜய் கூறினார்.[3][4]பெரியார், அம்பேத்கர், காமராசர், வேலு நாச்சியார் மற்றும் அஞ்சலி அம்மாள் ஆகியோரை சித்தாந்த வழிகாட்டிகளாக தமிழக வெற்றிக் கழகம் ஏற்றுக்கொண்டதாக அவர் பகிர்ந்து கொண்டார். இருப்பினும், பெரியாரின் இறைமறுப்பு சித்தாந்தத்தை தவிர்த்து பிற (பெண்களுக்கு அதிகாரமளித்தல், பகுத்தறிவு சிந்தனை, சமூக நீதி, சமத்துவம்) கொள்கைகளில் கவனம் செலுத்தபோவதாகக் கூறினார்.[21][22]