தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு
தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு (Continuous and Comprehensive Evaluation - CCE) என்பது இந்தியாவில் 2009 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு கல்வியியல் மதிப்பீட்டு முறையாகும். இந்த மதிப்பீட்டு முறை குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படியான கட்டாயத்தினால் நடைமுறைக்கு வந்தது. இந்த அணுகுமுறையானது இந்தியாவில் நடுவண் இடைநிலைக் கல்வி வாரியத்தாலும் இந்தியாவிலுள்ள மாநில அரசுகளாலும் 1 முதல் 10 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. இது மாணவர்களை தொடர்ந்தும் முழுமையாகவும் மதிப்பீடு செய்யும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டது. 2017-ஆம் ஆண்டில், இந்த நடைமுறையானது 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வைச் சந்திக்க இருக்கும் மாணவர்களுக்கு நீக்கப்பட்டது.[1] கர்நாடக அரசு இந்த மதிப்பீட்டு முறையை 1 முதல் 9 முடிய உள்ள வகுப்புகளுக்கு அறிமுகப்படுத்தினர். பின்னர் 12-ஆம் வகுப்பிற்கும் அறிமுகப்படுத்தப்பட்டது.[2] தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டின் முக்கிய நோக்கமானது, பள்ளியில் இருக்கும் போது குழந்தையின் ஒவ்வொரு தன்மையையும் மதிப்பீடு செய்வதாகும். மாணவர் ஆண்டு முழுவதும் பல தேர்வுகளுக்கு உட்கார வேண்டியிருக்கும் என்பதால், தேர்வுகளின் போது/முன் குழந்தை மீதான அழுத்தத்தைக் குறைக்க இது உதவும் என்று நம்பப்பட்டது, இதில் எந்தத் தேர்விலும் உள்ளடக்கப்பட்ட பாடத்திட்டம் ஆண்டு இறுதியில் மீண்டும் தேர்வில் சேர்க்கப்படமாட்டாது. தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறையானது, அதன் உண்மையான வடிவத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டால் பாரம்பரியமான கரும்பலகையுடனான விரிவுரை முறை கற்பித்தலில் இருந்து மகத்தான மாற்றங்களைக் கொண்டுவருவதற்காக ஏற்படுத்தப்பட்டதாகக் கூறப்பட்டது. இந்த முறையின் ஒரு பகுதியாக, மாணவர்களின் மதிப்பெண்கள் தர நிலைகளாக மாற்றப்பட்டன, அவை கல்விசார் பாடத்திட்டத்துடன் இணைந்து மற்றும் கல்வி சார் இணை பாடத்திட்ட மதிப்பீடுகளின் மூலம் மதிப்பீடு செய்யப்பட்டன. கல்வித் திட்டத்தின் முடிவில் ஒற்றைத் தேர்வுக்குப் பதிலாக ஆண்டு முழுவதும் சிறிய அளவிலான சோதனைகளை மேற்கொள்வதன் மூலம் தொடர்ச்சியான மதிப்பீட்டின் மூலம் மாணவர் மீதான பணிச்சுமையைக் குறைப்பதே இதன் நோக்கமாகும். பணி அனுபவத் திறன், சாமர்த்தியம், புத்தாக்கம், நிலைத்தன்மை, குழுப்பணி, பொதுப் பேச்சு, நடத்தை போன்றவற்றின் அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. இது கல்வியில் சிறந்து விளங்காத மாணவர்கள் கலை, மனிதநேயம், விளையாட்டு, இசை, தடகளம் போன்ற துறைகளில் திறமையை வெளிப்படுத்த உதவியதுடன், அறிவுத் தாகம் கொண்ட மாணவர்களை ஊக்குவிக்கவும் உதவியது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia