மேற்கு பாக்கித்தான்
மேற்கு பாக்கித்தான் மாநிலம் 14 அக்டோபர் 1955இல் மேற்குப் பகுதியில் இருந்த மாகாணங்கள், இராச்சியங்கள் மற்றும் பழங்குடி பகுதிகளை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டது. இது 12 நிர்வாகப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு லாகூரை தலைநகராகக் கொண்டிருந்தது. கிழக்கு வங்காள மாகாணம் கிழக்கு பாக்கித்தான் எனப் பெயரிடப்பட்டு அதன் தலைநகரமாக தாக்கா அமைந்தது. ஒன்றிய அரசாங்கம் 1959இல் கராச்சியிலிருந்து இராவல்பிண்டிக்கும் (இஸ்லாமாபாத் கட்டுமானம் நிறைவுறும் வரை தற்காலிகமாக), ஒன்றிய சட்டவாக்க அவை தாக்காவிற்கும் மாற்றப்பட்டது. மேற்கு பாக்கித்தான் மக்கள் அனைவரும் ஒரே இனத்தவர் போல காணப்பட்டாலும் புதிய மாநிலத்தில் பல்வேறு இனக்குழுக்களும் மொழிகளும் கலந்திருந்தன. "ஓரலகுக் கொள்கைத் திட்டம்" ஓர் பகுத்துணர்ந்த நிர்வாகச் சீரமைப்பாக கருதப்பட்டது. இதனால் செலவுகள் குறையும் என்றும் பல மாகாண முன்முடிவுகள் முடி்வுக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் 1958ஆம் ஆண்டு நிகழ்ந்த இராணுவப் புரட்சி பல சிக்கல்களை ஏற்படுத்தியது. முதலமைச்சர் பதவி கலைக்கப்பட்டது, படைத்துறை நாட்டுத்தலைவர் மேற்கு பாக்கித்தானின் செயலாட்சி அதிகாரங்களை கைப்பற்றிக் கொண்டார். இறுதியில் மேற்கு பாக்கித்தான் மாகாணம் சூலை, 1970இல் கலைக்கப்பட்டது. திசம்பர் 1970இல் நடந்த பொதுத் தேர்தலில் சேக் முஜிபுர் ரகுமான் தலைமையிலான அவாமி லீக் நாடாளுமன்றத்திற்கான பெரும்பாலான இடங்களில் (கிழக்கு பாக்கித்தானிற்கு ஒதுக்கப்பட்ட 162 இடங்களில் இரண்டைத் தவிர ஏனைய இடங்கள் அனைத்திலும் வென்றிருந்தது) வென்று கிழக்குப் பாக்கித்தானிற்கு தன்னாட்சி கோரினார். ஆனால் படைத்துறைத் தலைவரும் நாட்டுத் தலைவருமான யாக்யா கான் தன்னாட்சி அரசு அமைய ஒப்பவில்லை. மார்ச் 25, 1971 மேற்கு பாக்கித்தானிற்கும் கிழக்கு பாக்கித்தானிற்கும் இடையே உள்நாட்டுப் போர் எழுந்தது. இது பாக்கித்தானிய படைகளுக்கும் முக்தி வாகினிக்கும் இடையேயான போராக இருந்தது. இதனால் ஏற்பட்ட ஏதிலிகள் சிக்கலால் இந்தியா தலையிட்டது. இதன் முடிவில் பாக்கித்தான் படைகள் சரண் அடைந்தன. இப்போரின் போது கிழக்கு பாக்கித்தானில் வங்காள மக்கள் இனப்படுகொலையை எதிர்கொண்டனர். கிழக்கு பாக்கித்தான் தனி நாடாக வங்காளதேசம் என திசம்பர் 16, 1971 இல் உருவானது. மேற்கு பாக்கித்தான் என்ற சொல்லும் தேவையற்றதாயிற்று.
இவற்றையும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia