வட இலங்கை முசுலிம்களின் கட்டாய வெளியேற்றம்
வட இலங்கை முசுலிம்களின் கட்டாய வெளியேற்றம் என்பது வட மாகாணம், இலங்கையைத் தாயகமாகக் கொண்ட முசுலிம்களை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உத்தரவுக்கமைய வெளியேற்றப்பட்டமையைக் குறிக்கும். 72 மணித்தியாலங்களுக்குள் யாழ்ப்பாண முசுலிம்கள் மட்டுமல்லாமல் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு (தண்ணீரூற்று) உட்பட இலங்கையின் வட மாகாணம் இருந்த முசுலிம்கள் பெரும்பாலானவர்கள் விடுதலைப் புலிகளால் 1990 இல் வெளியேற்றப்பட்டனர். இந்த வெளியேற்றமானது சிறுபான்மை மக்களின் உரிமைகளை முன்னிறுத்தி மேற்கொள்ளப்படும் ஈழப்போராட்டத்துக்கு ஒரு பாரிய பின்னடைவு எனக் கூறப்படுகிறது. இது தமிழீழ விடுதலைப் புலிகள் இழைத்த பாரிய ஈடுசெய்ய முடியாத தவறு என்பதை அவர்களே பின்னர் ஒத்துக்கொண்டார்கள். இவ்வெளியேற்றத்தில் அகதிகளாக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான (கிட்டத்தட்ட 58,500 [1] பரணிடப்பட்டது 2006-10-09 at the வந்தவழி இயந்திரம்) முசுலிம்களில் ஒரு பகுதியினர் ஈழப்போர் 2009 ஆம் ஆண்டில் முடிவடைந்ததை அடுத்து தமது தாயகப் பகுதிகளில் மீள்குடியேறியுள்ளனர். பலர் இன்னமும் புத்தளம், அனுராதபுரம் பகுதியில் பல முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். வவுனியா சாலம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் ஊடாக மேற்கொள்ளப்பட்ட கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு நடவடிக்கைகளை அடுத்து அரச அதிபரிடம் இப்பகுதியானது பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. பின்னணி1981 செப்டம்பர் 21 இல் இலங்கை முசுலிம்களுக்கெனத் தனியான அரசியல் கட்சி சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு என்ற பெயரில் உருவாக்கப்பட்டதை அடுத்து இலங்கை முசுலிம்கள் தமிழரில் இருந்து வேறுபட்ட இனம் என்ற கோட்பாடு மீண்டும் தலைதூக்கியது.[1] இதனால், தமிழீழம் என்ற நாடு உருவாகினால் தாம் அந்த நாட்டில் சிறுபான்மையினராக ஆகி விடுவோம் என்ற அச்சம் முசுலிம்களிடம் எழுந்தது.[2] தமிழீழக் கோட்பாட்டை முசுலிம் காங்கிரசு கட்சி பலமாக எதிர்த்து வந்தது.[2] அத்துடன் இலங்கை அரசு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள முசுலிம்களின் பகுதிகளில் முசுலிம் ஊர்க்காவல் படைகளை உருவாக்கி அவர்களுக்கு ஆயுதங்களையும் அளித்தமை இரு இனங்களிடையே மேலும் முறுகல் நிலையை வளர்த்தது. இதனால் ஆங்காங்கே இரு இனத்தவரிடையேயும் வன்முறைகள் வெடித்தன. யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் "முசுலிம்கள் துரோகிகள் என்றும், காட்டிக்கொடுப்பவர்கள் என்றும் தமிழ் மக்களிடையே ஒரு தேய்வழக்கு வழங்கி வந்தது" என எழுதியுள்ளது.[3] கட்டாய வெளியேற்றம்முதலாவது கட்டாய வெளியேற்றம் சாவகச்சேரியில் இடம்பெற்றது. சுமார் 1,500 முசுலிம்கள் வெளியேற்றப்பட்டனர். இதன் பின்னர் கிளிநொச்சி, மன்னார் முசுலிம்களும் தமது பூர்வீக இடங்களை விட்டு வெளியேற்றப்பட்டனர். யாழ்ப்பாண முசுலிம்கள் 1990 அக்டோபர் 30 இல் வெளியேற்றப்பட்டனர். வாகனங்களில் வந்திருந்த விடுதலைப் புலிகள் அனைத்து முசுலிம்களையும் யாழ்ப்பாணம் ஒசுமானியா கல்லூரியில் கூடும்படி கட்டளை இட்டனர். அங்கு கூடியிருந்தோரை இரு மணி நேரத்தினுள் நகரை விட்டு வெளியேறும்படி உத்தரவிடப்பட்டது. இதனை அடுத்து அனைத்து முசுலிம்களும் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேறினர். 1881 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் யாழ்ப்பாணத்தில் 14,844 முசிலிம்கள் வசித்து வந்திருந்தனர். தாம் உடுத்திருந்த உடுப்புடனும் ஆகக்கூடியது 50 ரூபாய் பணத்துடனும் வெளியேற அனுமதிக்கப்பட்டனர். இதன் பின்னர் இவர்கள் இருந்த குடியிருப்புகள் அனைத்தும் சூறையாடப்பட்டன. வட மாகாணத்தில் இருந்து 14,400 முசுலிம் குடும்பங்கள் (கிட்டத்தட்ட 72,000 பேர்) வெளியேற்றப்பட்டனர்.[4] இவர்களில் மன்னாரில் இருந்து 38,000 பேரும், யாழ்ப்பாணம், கிளிநொச்சியில் இருந்து 20,000 பேரும், வவுனியாவில் இருந்து 9,000 பேரும், முல்லைத்தீவில் 5,000 பேரும் அடங்குவர்.[5] இவர்களில் பலர் புத்தளம் மாவட்டத்திலும், ஏனைய பகுதிகளிலும் குடியமர்த்தப்பட்டனர். மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia