2020 பீகார் சட்டப் பேரவைத் தேர்தல் என்பது மூன்று கட்டங்களாக 235 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெறும் தேர்தல். முதல் கட்டம் 28 அக்டோபர் அன்று 71 தொகுதிகளுக்கும் இரண்டாம் கட்டம் நவம்பர் 3 அன்று 93 தொகுதிகளுக்கும் மூன்றாம் கட்டம் நவம்பர் 7 அன்று 78 தொகுதிகளுக்கு நடைபெறும். நவம்பர் 10 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும். நவம்பர் 29 அன்று இப்போதுள்ள சட்டப் பேரவை முடிவுக்கு வருவதால் அதற்கு முன்பு தேர்தல் நடத்தி புதிய சட்டப் பேரவை உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க இந்திய தேர்தல் ஆணையம் செப்டம்பர் 25 அன்று தேர்தல் நடைபெறும் என அறிவித்தது. சென்ற தேர்தலில் ஐக்கிய சனதா தளம் மகாபந்தன் என்ற பெரும் கூட்டணியில் போட்டியிட்டு முதல்வர் பதவியை பெற்றது. எனினும் 2017இல் அக்கூட்டணியை விட்டு விலகி பாசகவின் தேசிய சனநாயக கூட்டணியில் இணைந்தது. இத்தேர்தல் முடிவில் பாரதிய ஜனதா கட்சி தலமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று ஐக்கிய ஜனதா தளத்தின் முதல்வர் வேட்பாளர் நிதிஷ் குமார் பிகார் மாநில முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பட்டியல்
செப்டம்பர் 25 அன்று இந்திய தேர்தல் ஆணையம் பீகார் சட்டப் பேரவைக்கு தேர்தல் நடைபெறும் என அறிவித்தது.[1]
தேசிய சனநாயகக் கூட்டணியிலுள்ள ஐக்கிய சனதாதளத்தின் நிதிசு குமார் பீகாரின் முதல்வராக உள்ளார். சென்ற 2015 ஆம் ஆண்டு தேர்தலில் ஐக்கிய சனதா தளம் பாசக உள்ள தேசிய சனநாயகக் கூட்டணியை எதிர்த்து மாபெரும் கூட்டணி எனப்படும் மகாகாத்பந்தன் கூட்டணியில் போட்டியிட்டது. அப்போது ராசுட்ரிய லோக் சமதா கட்சி, இந்துசுத்தானி அவாமி மோர்ச்சா என்ற இரு சிறிய கட்சிகள் தேசிய சனநாயகக் கூட்டணியில் பாசகவுடன் இருந்தன. 2017ஆம் ஆண்டு ஐக்கிய சனதாதளம் கூட்டணியை முறித்ததால் மகாகாத்பந்தன் கூட்டணி ஆட்சியை இழந்தது, பாசக ஆதரவு தெரிவித்தது அதனால் நிதிசு குமாரின் ஆட்சி தப்பி தேசிய சனநாயகக் கூட்டணியின் ஆட்சி மலர்ந்தது. 2018 ஆம் ஆண்டு ராசுட்ரிய லோக் சமதா கட்சி, இந்துசுத்தானி அவாமி மோர்ச்சா ஆகியவை தேசிய சனநாயகக் கூட்டணியிலிருந்து விலகின.
2020 ஆகத்தில் இந்துசுத்தானி அவாமி மோர்ச்சா மீண்டும் தேசிய சனநாயகக் கூட்டணியில் இணைந்தது. பின்பு அக்டோபர் 2020 விக்காசீல் இன்சான் இக்கூட்டணியில் இணைந்தது.
2015 ஆம் ஆண்டு தேசிய சனநாயகக் கூட்டணியில் இருந்த லோக் சனசக்தி கட்சி ஐக்கிய சனதாதளத்தை கடுமையாக தாக்கிக்கொண்டிருந்தமையால் இக்கூட்டணியில் சலசலப்பு உருவாகியது. இதனால் பாசகவின் தேசிய தலைவர்கள் லோக் சனசக்தியின் தலைவர் சிராக் பாசுவானை டெல்லிக்கு அழைத்து பேசியதின் விளைவால் லோக் சனசக்தி தேசிய சனநாயகக் கூட்டணியில் இருந்து விலகி சனதாதளம் போட்டியிடும் அனைத்து தொகுதிகளில் மட்டும் போட்டியிடுவது என்றும் பாசகவை எதிர்த்து போட்டியிடுவதில்லை என்றும் முடிவாகியது. இதைத்தொடர்ந்து பல பாசக தலைவர்கள் லோக் சனசக்தியில் இணைந்தார்கள். குறிப்பாக மாநில துணை தலைவரும் தற்போது சட்டப் பேரவை உறுப்பினராக உள்ள இருவர் ஐக்கிய சனதாதளத்தை எதிர்க்க இணைந்தார்கள். பாசக அதிகாரபூர்வமாக லோக் சனசக்தியுடனான உறவை அக்டோபர் 2020 முறித்தது.
அரசியல் விமர்சிகர்கள் தனியாக போட்டியிடுவதால் லோக் சனசக்தி கட்சி சில தொகுதிகளை கூடுதலாக வெல்லமுடியாது எனவும் அவர்கள் போட்டியிடுவது ஐக்கிய சனதா தளத்தின் வெற்றி வாய்ப்பை பாதிக்கவே என்றும் , தேர்தல் முடிவில் ஐக்கிய சனதா தளம் அதிக தொகுதிகள் பெற்று அவர்கள் கை மேலோங்குவதை தடுக்கவே பாசக இதை பின்னால் இருந்து இயக்கிறது என்று கருதுகிறார்கள். அதே சமயம் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக நிதிசு குமாரையே காட்டுகிறார்கள்.
மகாகாத்பந்தன் என்ற பெருங்கூட்டணியில் ஐந்து கட்சிகள் உள்ளன. ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலுள்ள ராசுட்டிரிய சனதா தளமும் இந்திய தேசிய காங்கிரசும் முதன்மையானவை. இடதுசாரி கட்சிகளும் இதில் உள்ளன.[7][8]
சென்ற 2015ஆம் ஆண்டு தேர்தலில் இக்கூட்டணியில் ஐக்கிய சனதா தளமும் இணைந்திருந்தது. இக்கூட்டணி அமைத்த அரசில் ஐக்கிய சனதா தளத்தின் நிதிசு குமார் முதல்வராக பொறுப்பேற்றிருந்தார். 2017ஆம் ஆண்டு இக்கூட்டணியில் இருந்து விலகி ஐக்கிய சனதா தளம் தேசிய சனநாயக கூட்டணியில் இணைந்ததை தொடர்ந்து இக்கூட்டணி அரசு ஆட்சியை இழந்தது. 2018இல் விக்காசீல் இன்சான் கட்சியும் இந்துசுத்தானி அவாமி மோர்ச்சாவும் 2019 சனவரியில் ராசுட்டிரிய சமதா கட்சியும் இக்கூட்டணியில் இணைந்தன .[9][10] ஆனால் 2020 ஆகத்து-அக்டோபரில் இவ்மூன்று கட்சிகளும் இக்கூட்டணியில் இருந்து விலகின.[11][12][13] 2015 தேர்தலில் தனியாக போட்டியிட்டு ஓர் தொகுதியில் கூட வெற்றி பெற முடியாததால் இம்முறை சமாச்வாதி கட்சி போட்டியிடாமல் இராசுட்டிரிய சனதா தளத்திற்கு ஆதரவு தருவதாக 2020 செப்டம்பர் அறிவித்தது.[14]
இத்தேர்தலில் இக்கூட்டணியுடன் இணைய இடதுசாரிகளான விடுதலைக்கான இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்-லெனினியம்), இந்தியப் பொதுவுடமைக் கட்சி , இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) உடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.[15][16] இதைத்தொடர்ந்து சாதி அடிப்படையில் மட்டும் தொகுதிகளை பிரிக்காமல் சோதனை முயற்சியாக சாதியும் வர்க்கமும் என்ற அடிப்படையில் தொகுதிகளை பிரிக்கலாம் என்று முடிவானது.[17] மண்டல் ஆணைக்குழுவின் பரிந்துரை நடைமுறைக்கு வந்ததும் பொதுவுடமை கட்சிகளின் செல்வாக்கு குறையத்தொடங்கியது. ஆனாலும் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்-லெனினியம்), இந்தியப் பொதுவுடமைக் கட்சி தன் செல்வாக்கை சில பகுதிகளில் இழக்காததால் 2015 தேர்தலில் கூட்டணி இல்லாமல் போட்டியிட்டதில் அதிக தொகுதிகளை கைப்பற்றிய கட்சியாக இருந்தது.[18][19] அக்டோபர் 3 சார்கண்ட் முக்தி மோர்ச்சா உடன் தொகுதி உடன்பாடு எட்டப்பட்டது [20] ஆனாலும் அக்டோபர் 7 சார்கண்ட் முக்தி மோர்ச்சா விலகிக்கொண்டது.