2024 ஐக்கிய இராச்சியப் பொதுத் தேர்தல்
2024 ஐக்கிய இராச்சியப் பொதுத் தேர்தல் (United Kingdom general election) 2024 சூலை 4 வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தத் தேர்தலில் ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றத்தின் கீழவையான மக்களவைக்கு 650 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இது ஐக்கிய இராச்சியத்தின் 58வது பொதுத் தேர்தல் ஆகும். பிரதமர் இரிசி சுனக்கு தலைமையிலான ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி, கீர் இசுட்டார்மர் தலைமையிலான எதிர்க்கட்சியான தொழிற் கட்சியால் மகத்தான வாக்குகளில் தோற்கடிக்கப்பட்டது. இந்தத் தேர்தல் 2005 பொதுத் தேர்தலுக்குப் பிறகு தொழிற்கட்சிக்கு கிடைத்த முதல் வெற்றியுடன், கன்சர்வேட்டிவ் கட்சியின் பதினான்கு ஆண்டு பதவிக்காலம் முடிவுக்கு வந்தது. தொழிற்கட்சி 172-இடங்கள் பெரும்பான்மையுடன் மொத்தம் 411 இடங்களைப் பெற்றது. இருப்பினும், அக்கட்சியின் வாக்குப் பங்கு 33.7% என்பது பிரித்தானியத் தேர்தல் வரலாற்றில் எந்த ஒரு பெரும்பான்மை அரசாங்கத்தையும் விட சிறியது. 2005-இற்குப் பிறகு முதன்முறையாக இங்கிலாந்திலும், 2010-இற்குப் பிறகு இசுக்காட்லாந்திலும் தொழிற்கட்சி மிகப்பெரிய கட்சியாக மாறியது, வேல்சில் மிகப்பெரிய கட்சி என்ற தகுதியைத் தக்க வைத்துக் கொண்டது.[3] சுயேச்சையான பாலத்தீன சார்பு வேட்பாளர்களிடம் தொழிற்கட்சி ஐந்து இடங்களை இழந்தது, பெரும்பாலும் இசுரேல்-அமாசுப் போரில் இசுரேலுக்கு அதன் உத்தியோகபூர்வ ஆதரவுதான் இதற்கான காரணம் எனக் கூறப்படுகிறது.[4] கன்சர்வேடிவ் கட்சி அதன் வரலாற்றில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது, மொத்தம் 121 இடங்களுடன், 23.7% வாக்குகளைப் பெற்றுள்ளது. கன்சர்வேட்டிவ் கட்சி 244 இடங்களை இழந்தது, இதில் பன்னிரண்டு தொகுதிகளில் முன்னாள் பிரதமர் லிசு டிரசு மற்றும் அமைச்சர்கள் போட்டியிட்டனர்.[5] வேல்சில் தன்னிடம் இருந்த அனைத்து இடங்களையும் அது இழந்தது.[6] கன்சர்வேடிவ் எதிர்ப்பு தந்திரோபாய வாக்களிப்பு,[7] தொழிற்கட்சி-கன்சர்வேட்டிவ் வாக்குகளின் ஒருங்கிணைந்த 57.4% தொழிற்கட்சியின் எழுச்சிக்குப் பிறகு மிகக் குறைவானது போன்ற காரணங்களால் சிறிய கட்சிகள் இந்தத் தேர்தலில் சிறப்பாக செயல்பட்டன. எட் டேவி தலைமையிலான தாராளவாத சனநாயகக் கட்சி, மொத்தம் எழுபத்திரண்டு இடங்களை வென்றதன் மூலம் மிக முக்கியமான வெற்றிகளைப் பெற்றது. இது அக்கட்சியின் வரலாற்றில் மிகச் சிறந்த முடிவாகும்.[8] அத்துடன் மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சியாக ஆகியது. ஐக்கிய இராச்சிய சீர்திருத்தக் கட்சி மூன்றாவது அதிக வாக்குப் பங்கை அடைந்து ஐந்து இடங்களை வென்றது. இங்கிலாந்து-வேல்சின் பசுமைக் கட்சி நான்கு இடங்களை வென்றது, இரு கட்சிகளுக்கும் இது வரலாற்றில் சிறந்த நாடாளுமன்ற முடிவுகள் ஆகும். வேல்ஸில், பிளெயிட் சிம்ரு கட்சி நான்கு இடங்களை வென்றது. இசுக்காட்லாந்தில், [[இசுக்கொட்டிய தேசியக் கட்சி] 48 இடங்களிலிருந்து 9 ஆகக் குறைக்கப்பட்டது, அத்துடன் மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சி என்ற தகுதியையும் இழந்தது.[9] தனித்துவமான அரசியல் கட்சிகளைக் கொண்ட வடக்கு அயர்லாந்தில், சின் பெயின் தனது ஏழு இடங்களைத் தக்க வைத்துக் கொண்டது, அதனால் மிகப்பெரிய கட்சியாக மாறியது. சனநாயக ஒன்றியக் கட்சி தன்னிடம் இருந்த 8 இடங்களில் ஐந்து இடங்களை மட்டுமே வென்றது. சமூக சனநாயகத் தொழிற்கட்சி இரண்டு இடங்களையும், வடக்கு அயர்லாந்தின் கூட்டணிக் கட்சி, அல்ஸ்டர் ஒன்றியக் கட்சி, பாரம்பரிய ஒன்றியக் குரல், ஒரு சுயேச்சை வேட்பாளர் தலா ஒரு இடத்தையும் வென்றனர். கருத்துக் கணிப்புகளில் கன்சர்வேட்டிவ்களை விட அதிக முன்னிலையுடன் தொழிற்கட்சி தேர்தலில் நுழைந்தது. அத்துடன் கட்சியின் வெற்றியின் சாத்தியமான அளவு பரப்புரைக் காலத்தில் விவாதத்திற்குரிய விடயமாக இருந்தது.[10][11] பொருளாதாரம், சுகாதாரம், கல்வி, உள்கட்டமைப்பு மேம்பாடு, குடியேற்றம், எரிசக்தி ஆகியவை முதன்மைப் பரப்புரைத் தலைப்புகளாக இருந்தன. 2023 ஆம் ஆண்டு வெஸ்ட்மின்ஸ்டர் தொகுதிகளின் காலமுறை மறுஆய்வுக்குப் பிறகு செயல்படுத்தப்பட்ட புதிய தொகுதி எல்லைகளைப் பயன்படுத்தி முதன்முதலில் இந்தத் தேர்தல் நடத்தப்பட்டது. பெரிய பிரித்தானியாவில் நேரில் வாக்களிக்க புகைப்பட அடையாளம் தேவைப்பட்ட முதல் பொதுத் தேர்தல் இதுவாகும்.[b] அத்துடன் நாடாளுமன்றக் கலைப்பு மற்றும் அழைப்பு சட்டம் 2022 இன் கீழ் முதன் முதலாக தேர்தல் நடைபெற்றது[12] இறுதி முடிவுகள்
குறிப்புகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia