இந்த பக்கம் காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த பக்கம் தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையை புதுப்பிக்கவும். மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து பேச்சுப் பக்கத்தைப் பார்க்கவும்.
2025 இந்தியா–பாக்கித்தான் மோதல்கள் (2025 India–Pakistan strikes) நிகழ்வின் ஒரு பகுதியாக 2025 ஆம் ஆண்டு மே மாதம் 7 ஆம் தேதியன்று அதிகாலை 1.30 மணியளவில் சிந்தூர் படை நடவடிக்கை என்ற குறியீட்டுப் பெயரில் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. பயங்கரவாத உள்கட்டமைப்பை குறிவைத்ததாக இந்தியா கூறியது. இந்தியத் தாக்குதல்கள் பொதுமக்கள் பகுதிகளை (பள்ளிவாசல்கள் உட்பட) குறிவைத்ததாகவும்,[9][10] ஒரு குழந்தை உட்பட 26 பாக்கித்தானிய பொதுமக்களைக் கொன்றதாகவும் பாக்கித்தான் கூறியது.[11] இந்தியத் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுத்த பாக்கித்தான் நடத்திய பீரங்கித் தாக்குதல்களில் மூன்று இந்திய பொதுமக்கள் கொல்லப்பட்டதாக இந்தியா கூறியது.
சிந்தூர் படை நடவடிக்கை
சிந்தூர் படை நடவடிக்கை என்பது இந்திய இராணுவம், இந்திய தரைப்படை, விமானப்படை ஆகியவை இணைந்து கூட்டாக பாக்கித்தான் மற்றும் பாக்கித்தான் ஆக்கிரமிப்பு காசுமீரில் 2025 ஆம் ஆண்டு மே மாதம் 7 ஆம் தேதியன்று நள்ளிரவு 1.30 மணியளவில் நடத்திய தாக்குதலைக் குறிக்கிறது.[12] இந்தியாவில் பயங்கரவாதச் செயல்களுக்கு உதவி வந்த செய்சு இ முகம்மது, லசுகர் ஏ தொய்பா உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளின் தலைமையகங்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இந்தியா தெரிவித்துள்ளது. பாக்கித்தான் ஆக்கிரமிப்பு காசுமீர் பகுதியில் உள்ள முர்தி, கோட்லி, முசாபரபாத்து, பகவல்பூர் உள்ளிட்ட இடங்களை குறிவைத்து இந்தத் துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.[13][14][15]
பின்னணி
2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 22-ஆம் தேதி காசுமீரின் அனந்தநாக் மாவட்டம்பகல்காம் பகுதியில் பாக்கித்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாக்கித்தானை தலைமையிடமாக கொண்ட லசுகர்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான 'தி ரெசிசுடண்ட் பிரண்ட்டு' பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதன்காரணமாக, இந்தியா - பாக்கித்தான் இடையே போர் மேகம் சூழ்ந்தது. அந்தத் தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக, பாக்கித்தான் மற்றும் பாக்கித்தான் ஆக்கிரமிப்பு காசுமீர் பகுதிகளில் சிந்தூர் நடவடிக்கை என்ற பெயரில் இந்திய இராணுவம் வான்வழி தாக்குதலை மேற்கொண்டது. பாக்கித்தானில் உள்ள ஒன்பது பயங்கரவாத முகாம்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.[16][17]
பாதுகாப்பு நடவடிக்கைகள்
சிந்தூர் நடவடிக்கையின் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வட இந்தியாவில் 5 வானூர்தி நிலையங்கள் மூடப்பட்டன. சம்மு - காசுமீரின் சிறீநகரில் உள்ள வானூர்தி நிலையம் மூடப்பட்டது. லே, சம்மு, அமிர்தசரசு, தரம்சாலா ஆகிய நான்கு வானூர்தி நிலையங்களும் மூடப்பட்டன.