ஆயிரம் தூண் ஆலயம்
ஆயிரம் தூண் ஆலயம் அல்லது ருத்திரேஷ்வர் கோயில் (Thousand Pillar Temple)[1] தெலங்கானா மாநிலம், வாரங்கல் நகரில் ஹனுமக் கொண்டா என்ற இடத்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புடைய இந்துக் கோயிலாகும்.[2] இக்கோயில் சிவன், திருமால், சூரிய தேவன் ஆகிய மூன்று கடவுளருக்குமானது. காகத்திய வம்ச மன்னர் ருத்ர தேவன் என்பவரால் பொ.ஊ. 1175க்கும் பொ.ஊ. 1324க்கும் இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டது. இந்த "ஆயிரம் தூண் ஆலயம்" காகத்திய வம்சத்தின் கட்டிடக் கலைகளில் தலைசிறந்ததாய் கருதப்படுகிறது.[3] வாரங்கல் கோட்டை, இராமப்பா கோயில் ஆகியவற்றுடன் ஆயிரம் தூண் ஆலயமும் இந்தியாவிலுள்ள உலகப் பாரம்பரியக் களங்களின் பட்டியலில் யுனெஸ்கோவால் தற்காலிகமாக இணைக்கப்பட்டுள்ளது.[4] இக்கோயிலை நிரந்தர உலகப் பாரம்பரிய களமாக 25 சூலை 2021 அன்று யுனெஸ்கோ அறிவித்துள்ளது.[5][6][7] அமைப்புநட்சத்திர அமைப்பில் கட்டப்பட்டுள்ள இந்த ஆலயத்தில் நிறைய சன்னதிகளும் லிங்கங்களும் நிறுவப் பட்டுள்ளன. ஆலயத்தில் உட்புறம் மூன்று சந்நிதிகள் உள்ளன. சிவன், விஷ்ணு, சூரியன் மூவருக்கும் சந்நிதிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆயிரம் தூண்களால் அமைக்கப்பட்டு இருந்தாலும் ஆலயத்தின் எந்த மூலையில் இருந்து பார்த்தாலும் மத்தியில் உள்ள பெரிய சிவலிங்கத்தை எந்த தூண்களும் மறைக்காமல் இருக்கும்படியான அமைப்பில் கட்டப்பட்டது. ஆலயத்தின் முன்புறம் ஒற்றைக் கல்லினால் ஆன பெரிய கருங்கல் நந்தி ஒன்று இன்றும் பளபளப்பாய் காணப்படுகிறது. கல்லிலே செதுக்கப்பட்ட யானை வரிசையும் துளைத்து செதுக்கப்பட்ட ஜன்னல் அமைப்புகளும் காக்கத்திய வம்சத்தின் கட்டிடக் கலையின் நுணுக்கத்திற்குச் சான்றாக உள்ளது. தக்கணப் பிரதேசத்தைப் படையெடுத்த துக்ளக் மன்னரால் இந்தக் கோவில் சிதைக்கப்பட்டது. 2004 இல் இந்திய அரசால் சிதிலமடைந்த தூண்கள் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துஇக்கோயிலுக்குச் செல்ல சாலைவழிப் போக்குவரத்து உள்ளது. இத்தலத்துக்கு அருகில் வாரங்கல் தொடருந்து நிலையம் மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மேற்கோள்கள்
வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia