சம்பானேர்-பாவாகேத் தொல்லியல் பூங்கா
சம்பானேர்-பாவாகேத் தொல்லியல் பூங்கா (Champaner-Pavagadh Archaeological Park) குஜராத் மாநிலம் பஞ்சமஹால் மாவட்டத்தில் அமைந்த வரலாற்றுப் புதையலாகும். சுமார் 800 மீட்டர் உயரம் கொண்ட பாவாகேத் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள பகுதியே சாம்பானர்- பாவாகேத் என்றழைக்கப்படுகிறது. இங்கு மலை உச்சியில் உள்ள காளிகா மாதா கோவில் மிகவும் சிறப்பு வாய்ந்தது. மலை அடிவாரத்தில் உள்ள அரண்மனை கட்டிடங்கள், மசூதிகள் போன்றவை 8 ஆம் நூற்றாண்டு முதல் 14ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டவையாகும். சோலங்கி மன்னர்கள், பிறகு கிக்சி சவுகான்கள் வசம் இருந்து வந்த இந்தப்பகுதியை குஜராத் இளம் சுல்தானாக விளங்கிய மஹமூத் பகாடா 1484 ஆம் ஆண்டு கைப்பற்றியுள்ளார். சாம்பானார் பகுதியை புனரமைத்து நூற்றுக்கணக்கான புதிய கட்டங்களை எழுப்பியுள்ளார். இதற்கு அவர் செலவிட்டது 23 ஆண்டுகள். மேலும் இந்தப் பகுதிக்கு முகம்மதாபாத் எனப் பெயரிட்டு அவுரங்காபாத்தில் இருந்து தலைநகரத்தைச் சாம்பனாருக்கு மாற்றியிருக்கிறார். சாம்பனார் பகுதி, 1535 ஆம் ஆண்டில் மொகலாய மன்னர் ஹுமாயூன் வசம் சென்றது. சாம்பனார்- பாவாகேத்தில் தற்போது எஞ்சி நிற்பது காளிகாமாதா கோவில், ஐந்து மசூதிகள், மற்றும் சில கட்டடங்கள் மட்டுமே. இந்து, முஸ்லிம் கட்டடக்கலைப் பண்பாட்டிற்கு எடுத்துக்காட்டாக விளங்கி வரும் சாம்பனார்- பாவாகேத் தொல்லியல் பூங்கா 2004 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவின் உலகப் பண்பாட்டுச் சின்னங்கள் பட்டியலில் இடம் பிடித்தது. உசாத்துணை
வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia