பவுசியா அசீம் (Fouzia Azeem, 1 March 1990 – 15 சூலை 2016), கந்தீல் பலோச் (Qandeel Baloch) என்ற பெயரில் பெரிதும் அறியப்பட்டவர், பாக்கித்தானிய விளம்பர அழகி, நடிகை, பெண்ணிய செயற்பாட்டாளர் மற்றும் சமூக ஊடக புகழாளராக இருந்தவர். இவருடைய ஒளிதப் பதிவுகளில் தனது தினசரி வாழ்க்கையையும் சர்ச்சைக்குரிய பிரச்சினைகளையும் விவாதித்து வந்தமையால் கவனத்தை ஈர்த்தார்.[1]
பலோச் 2013இல் பாக்கித்தான் ஐடல் என்ற நனவு தொலைக்காட்சி பாட்டுப் போட்டியில் பங்கேற்றபோது ஊடகங்களில் அறியப்பட்டார்; இவரது கலைக்காணல் தீயாகப் பரவி இணையப் புகழாளர் ஆனார்.[2][3] பாக்கித்தானில் இணையத்தில் தேடப்பட்ட முதல் பத்து பேரில் ஒருவராக இருந்தார்; அவரது ஒளிதப் பதிவுகளுக்காக ஒரு சிலரால் பாராட்டப்பட்டும் வேறு சிலரால் விமரிசிக்கப்பட்டும் வந்தார்.[4]
சூலை 15, 2016 மாலையில் முல்தானில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் உறங்கிக் கொண்டிருக்கும்போது மூச்சடைக்கப்பட்டு கொல்லப்பட்டார்.[5][6][7] அவரது உடன்பிறப்பு வசீம் "குடும்பத்தின் மாண்புக்கு அவப்பெயர் கொண்டு வந்ததால்" கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.[8][9][10]
வாழ்க்கை வரலாறு
பலோச் பாக்கித்தானிய பஞ்சாபில் உள்ள டேரா காசி கானில்[11] பிறந்தார். சிந்து ஆற்றங்கரையில் உள்ள சா சதர் தின் என்ற நகரைச் சேர்ந்தவர்.[11] இவருக்கு ஆறு சகோதரர்களும் ஆறு சகோதரிகளும் உள்ளனர். இவர் முதலில் பேருந்து பணிப்பெண்ணாக வேலையிலமர்ந்தார்.[12]
பலோச் சமூக ஊடகங்களில் வெளியிட்ட படங்கள், ஒளிதங்கள், கருத்துக்கள் மூலமாக புகழ்பெற்றார். பெரும்பாலும் பழைமைவாத பாக்கித்தானிய சமூகத்தில் இவை மிகவும் துணிவானதாக கருதப்பட்டன.[4] சில பன்னாட்டு செய்தி ஊடகங்கள் இவரை கிம் கர்தாசியனுடன் ஒப்பிடப்படுகின்றார்.[13] இருப்பினும் உள்நாட்டு செய்தியாளர்கள் "சமூகத்தின் அளவுகோல்களுக்கு எதிராக இருந்ததாலும்" தனது வாழ்வைத் தான் விரும்பியவாறு வாழ்ந்ததாலும் கர்தாசியனை விடக் குறிப்பிடத்தக்கவராக கருதினர்.[14]
சர்ச்சைகள்
சூன் 2016இல் பலோச் மூத்த சமயவியலாளர் முஃப்தி அப்துல் காவியை ஓர் தங்குவிடுதி அறையில் சந்தித்து தனது சமயத்தைக் குறித்த ஐயங்களைத் தீர்த்துக் கொண்டார்; ஆனால் இவர்களது ஒளிப்படங்கள் இணையத்தில் பரவியதால் சமூக ஊடகங்களில் பெரும் சர்ச்சை எழுந்தது.[15][16][17] பலோச் முப்தியின் கையொப்பமிட்ட தொப்பியை அணிந்திருந்தார்.[18] இந்த சந்திப்பிற்குப் பிறகு பாகித்தானின் சமயக் குழுவொன்றிலிருந்து முப்தி இடைநீக்கம் செய்யப்பட்டார்.[19]
இதற்கு முன்னதாக மார்ச் 19, 2016 அன்று இந்தியாவிற்கு எதிரான இருபது20 போட்டியொன்றில் பாக்கித்தான் வென்றால் அணித்தலைவர் சாகித் அஃபிரிடி முன்பாக ஆடைகளைக் களைந்து நடனமாடுவதாக சூளுரை விடுத்தார்; இதற்கான முன்னோட்டத்தை சமூக ஊடகங்களில் வெளியிட, அது தீயாகப் பரவியது. ஆனால் பாக்கித்தான் அந்த ஆட்டத்தில் தோல்வியுற்றது.[20][21] இதனால் சில இந்திய ஊடகங்கள் இவரது சர்ச்சைமிக்க குணங்களை பூனம் பாண்டேயுடன் ஒப்பிட்டன.[22][23]
இணையத்தில் தனது புகழ் பரவ, பலோச் பாக்கித்தானிய சமூகத்தில் பெண்களின் நிலை குறித்து கருத்துரைக்கத் தொடங்கினார். அவர் இறப்பதற்கு ஒரு வாரம் முன்புதான் பேன் (தடை) என்ற இசை ஒளிதத்தை வெளியிட்டிருந்தார்; இதில் பாக்கித்தானில் பெண்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளை கேலி செய்திருந்தார்.[19]
சர்ச்சைக்குரிய தொலைக்காட்சித் தொகுப்பாளர் முபாசிர் லுக்மேனுக்கு அளித்த நேர்காணலில் தனது உணர்வூட்ட நாயகராக சன்னி லியோனே, ராக்கி சாவந்த், பூனம் பாண்டேயை குறிப்பிட்டிருந்தார்.[24] மேலும் பல நிறுவனங்களும் நபர்களும் ஊடகவியலாளர்களும் தங்கள் அளவீட்டுப் புள்ளிகளை உயர்த்திக் கொள்ளவே தன்னை அவர்களது நிகழ்ச்சிகளில் பங்கேற்க அழைப்பதாக்க் கூறினார்.[25]
பாதுகாப்புக் கோரல்
காவியுடன் சூன் 2016இல் சந்தித்த பிறகு பலோச் தனக்கு கொலை மிரட்டல் வந்திருப்பதாக அறிவித்தார்.[19][26] அதே வேளையில் பலோசின் முன்னாள் கணவர் ஊடகங்களில் தங்கள் திருமணம் குறித்தும் தங்கள் உறவு குறித்தும் தனிப்பட்டத் தகவல்களை பகிர்ந்து கொண்டார். தனது கணவர் தன்னைத் துன்புறுத்துவதாகக் கூறிய பலோச் பொதுவெளியில் திருமணச் சங்கடங்கள் குறித்து அழுதார்.[14] சூலை 14, 2016, செய்தியாளர் ஒருவருடன் தொலைபேசியில் பேசியபோது தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை எனத் தெரிவித்தார்.[19] தவிரவும் காவல்துறையிடம் பாதுகாப்பு வழங்க வேண்டியிருந்த போதிலும் எந்த எதிர்வினையும் பெறவில்லை எனக் குற்றம் சாட்டினார். எனவே பாக்கித்தானில் இருப்பதை பாதுகாப்பாக கருதாத பலோச் ஈகைத் திருநாள் விடுமுறை முடிந்ததும் பெற்றோருடன் வெளிநாட்டிற்கு செல்லவிருப்பதாகவும் கூறியிருந்தார்.[12]
தனிவாழ்க்கை
2008இல் பலோச் ஆசிக் உசைனைத் திருமணம் புரிந்து இருவருக்கும் ஒரு மகன் பிறந்தார்.[27][28] ஓராண்டிலேயே தனது கணவர் துன்புறுத்துவதாக மணமுறிவு பெற்றார்.[12][29] பலோச் இரண்டாவது திருமணத்திலிருந்தும் முறிவு பெற்றதாக உறுதி செய்யப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன.[30]
மரணம்
சூலை 15, 2016இல் முல்தானில் தங்கள் பெற்றோர் வீட்டில் உறங்கிக் கொண்டிருக்கையில் பலோச்சை அவரது சகோதரர் வசீம் கழுத்தை நெருக்கிக் கொலை செய்தார்.[12][30] இந்தக் கொலையை அவரது தந்தை அசீம் அறிவித்தார்.[12][31][32] முதலில் இது துப்பாக்கிச் சூட்டால் நிகழ்ந்த கொலை எனப்பட்டது; ஆனால் பிணக்கூறு ஆய்வு அறிக்கையில் தூங்கும் போது கழுத்து நெரிபட்டு இறந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.[33] கொலை சூலை 15–16 இரவில், ஏறத்தாழ 11:15 மணியிலிருந்து 11:30 மணிக்குள் நடந்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. அவரது உடல் கண்டுபிடிக்கப்படுகையிலேயே அவர் இறந்து 15 முதல் 36 மணி நேரம் ஆகிவிட்டிருந்தது.[34] பலோச்சின் உடலிலிருந்த காயங்களிலிருந்து அவரது வாயும் மூக்கும் அடைக்கப்பட்டு மூச்சுத் திணறலால் இறந்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.[14][35] காவல்துறை இதனை கௌரவக் கொலை என்று பதிவு செய்தனர்.[36]
தீர்ப்பு
இந்த கௌரவக் கொலையைச் செய்ததாக பலோச்சையின் சகோதரர் முகமது வாசிமுக்கு முல்டான் நீதிமன்றம் 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27 ஆம் திகதி ஆயுள் தண்டனை வழங்கியது. மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய இருவர் விடுவிக்கப்பட்டனர்.[37][38]