இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள்.
புஷ்கரம் என்பதற்கு மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளும் அந்தந்த ராசிகளுக்கு உரித்தான புண்ணிய ஆறுகளில் வாசம் செய்து மக்களுக்கு நன்மை பயப்பதாகும். துலாம் ராசி காவிரி நதிக்குரியதாகும்.[1] ராசிக்குப் பொருத்தமான புண்ணிய நதி என்ற நிலையில் 12 செப்டம்பர் 2017இல் குரு பகவான், துலாம் ராசியில் பிரவேசிப்பதால், காவிரி ஆற்றில், புஷ்கரம் கொண்டாடப்படுகிறது.[2] தற்பொழுது நடைபெறும் குருப் பெயர்ச்சியானது 144 ஆண்டுக்கொரு முறை வருகின்ற மகா குருப் பெயர்ச்சியாகும்.[3] குரு பகவான் மேஷம் முதல் மீனம் முதல் ராசிகளைக் கடக்கின்ற சமயத்தில் கங்கை, நர்மதா, சரஸ்வதி, யமுனா, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, தாமிரபரணி, சிந்து , துங்கபத்திரை , பிரம்மபுத்ரா, பிராணஹிதா எனப்படுகின்ற 12 ஆறுகளிலும் அநதந்த ராசிகளில் இவ்விழா நடைபெறுகின்றது.[4] 177 ஆண்டுகளுக்குப் பிறகு இவ்விழா நடைபெறுகிறது.[5] இதற்கு முன்னர் 12 செப்டம்பர் 1840இல் இவ்விழா நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.[6]
2017 புஷ்கரம்
கர்நாடகாவில், தலைக்காவிரி துவங்கி பல்வேறு இடங்களில், புஷ்கரம் நடக்கிறது. தமிழ்நாட்டில் 144 ஆண்டுகளுக்குப் பின் இவ்விழா கொண்டாடப்படுகிறது. 12 செப்டம்பர் 2017இல் தொடங்கும் காவிரி மகா புஷ்கரம் என்னும் புனித நீராடல் 23 செப்டம்பர் 2017 வரை நடைபெறுகிறது.[2][7] இவ்விழா வட இந்தியாவிலும், ஆந்திரப்பிரதேசத்திலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்ட போதிலும் காவிரி புஷ்கரத்திற்கான சிறப்பு ஏற்பாடுகள் 1981இல் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டன. அரங்கநாதசாமி கோயிலின் ஸ்தலத்தாரான பராசர சுதர்சன பட்டர்சாமி, புஷ்கரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதனை அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில் முயற்சிகள் மேற்கொண்டார்.[8] இவ்விழாவிற்காக மேட்டூர் அணையிலிருந்து 10,000 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.[9]
இந்தியாவில் புஷ்கரங்கள்
இந்தியாவில் ராசியின் அடிப்படையிலும், நதிகளின் அடிப்படையிலும் புஷ்கரங்கள் 12 இடங்களில் கொண்டாடப்படுகின்றன.[4][10]
மயிலாடுதுறையில் புஷ்கரத்திற்காக ஆற்றில் தயாராகும் நீர்த்தேக்கம்
இவ்விழா நாள்களில் காவிரியில் புனித நீராடினால் பாவங்கள் நீங்கி புண்ணியம் கிடைக்கும் என்று நம்புகின்றனர். ஆகையால் இக்காலகட்டத்தில் சங்கராச்சாரியார்கள், ஆதீனங்கள், மடாதிபதிகள், ஜீயர்கள், துறவியர்கள் மற்றும் பக்தர்கள் உள்ளிட்டோர் நீராடுவதற்காக மயிலாடுதுறையில் துலாக்கட்டத்தில் நீராடுவர். விழா நாள்களில் பக்தர்கள் நீராடுவதற்காக குளம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.[3] புஷ்கரத்திற்காக நிரந்தரத் நீர்த்தேக்கம் அமைக்கும் பணி நடைபெற்று வரும்போது காவிரி ஆற்றின் நடுவில் நந்திக்கோயிலைச் சுற்றி மூன்றடி ஆழத்தில் ஒன்பது பழங்காலக் கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.[12] விழாவிற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.[13] நீர்த்தேக்கத்தில் நீர் நிரப்பட்டுள்ளது.[14] அன்னை காவிரி அம்மையின் சிலை துலாக்கட்ட காவிரிக்கரையில் அமைக்கப்பட்டது. விழா நடைபெறும் இடமான துலாக்கட்டத்தில் ஸ்ரீஅன்னை காவிரி அம்மனின் சிலை அமைக்கப்பட்டது.[15] விழாவின் முதல் நாளில் (12 செப்டம்பர் 2017) பக்தரகள் புனித நீராடினர்.[16] நிறைவு நாளான 24 செப்டம்பர் 2017 அன்று ஒரு இலட்சம் பேர் துலாக்கட்டத்தில் நீராடினர். [17]
குத்தாலம்
நிகழ்ச்சிக்காக காவிரி ஆற்றை சுத்தம் செய்யும் பணி பல்வேறு கட்சிகள், அமைப்புகள் மூலம் 20 நாட்களாக நடைபெற்றது.[18] 12 செப்டம்பர் 2017 மற்றும் 20 செப்டம்பர் 2017 ஆகிய நாள்களில் மகா ஆரத்தி நடைபெற்றது.[19][20]
ஸ்ரீரங்கம் மற்றும் திருச்சி
திருச்சியில் காவிரியில் பக்தர்கள் நீராடுகின்ற ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் இந்நிகழ்ச்சி 12 செப்டம்பர் 2017 முதல் 24 செப்டம்பர் 2017 வரை நடைபெறுகிறது.[21][22] ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் இவ்விழாவில் 25 ஜீயர்கள் பங்கேற்க உள்ளனர்.[23] விழாவிற்கான முகூர்த்தக் கால் 24 ஆகஸ்டு 2017இல் நடப்பட்டது.[24][25] ஸ்ரீரங்கத்தில் புஷ்கரம் விழா 12 செப்டம்பர் 2017இல் தொடங்கியது.[26][27] ஸ்ரீரங்கத்தில் கடந்த 12 நாள்களில் இவ்விழாவின்போது 20 லட்சம் பேர் நீராடினர். [28]
கும்பகோணம்
காவிரி ஆற்றில் பகவத் படித்துறையில் 19 செப்டம்பர் 2017இல் காவிரியில் புனித நீராடலும், மாலையில் மகா ஆரத்தியும் நடைபெறவுள்ளது.[29]
திருவையாறு
காவிரி புஷ்கர விழாவை முன்னிட்டு உலக நன்மை மற்றும் மழை பெய்ய வேண்டி திருவையாறு காவிரி ஆற்றில் புஷ்ய மண்டப படித்துறையில் 21 மார்ச் 2017இல் நடைபெற்றது.[30] 18 செப்டம்பர் 2017இல் விழா நடைபெறுகிறது.[31]
காரைக்கால்
காவிரி பாயக்கூடிய நண்டலாறு, நாட்டாறு, வாஞ்சியாறு, நூலாறு, அரசலாறு, திருமலைராஜனாறு, பிராவடையனாறு ஆறு கிளை ஆறுகளைக் கொண்டுள்ள காரைக்கால் பகுதியில் முதன்முறையாக இவ்விழா நடத்தப்படுகிறது. திருநள்ளாறு அருகே அகலங்கண்ணு என்னுமிடத்தில் அமைக்கப்பட்டுள்ள நீர்த்தேக்கத்தில் 12 செப்டம்பர் 2017 அன்று விழா தொடங்கியது.[32] பக்தர்கள் அங்கு புனித நீராடினர்.[33] அகலங்கண்ணு பகுதியில் தீர்த்தவாரியுடன் 24 செப்டம்பர் 2017 அன்று நிறைவுற்றது. [34]
பவானி
ஈரோடு மாவட்டத்தில் பவானி கூடுதுறையில் இவ்விழா 20 செப்டம்பர் 2017 தொடங்கி 24 செப்டம்பர் 2017 வரை கொண்டாடப்படுகிறது. விழாவின்போதுநாமக்கல், சேலம், கரூர், திருப்பூர், கோவை உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்களும் கூடுதுறையில் புனித நீராடுகின்றனர்.[35]