சிஜியாசுவாங் (Shijiazhuang, [ʂɨ̌.tɕjá.ʈʂwáŋ]; எளிய சீனம்: 石家庄) வடக்குச் சீனாவிலுள்ள ஏபெய் மாகாணத்தின்தலைநகரமும் மிகப் பெரும் நகரமும் ஆகும்.[1] மாவட்டநிலை நகரமாக நிர்வகிக்கப்படும் சிஜியாசுவாங் பெய்ஜிங்கிற்கு தென்மேற்கே 266 கிலோமீட்டர்கள் (165 mi) தொலைவிலுள்ளது.[2] இந்த நகரத்தின் நிர்வாகத்தில் எட்டு மாவட்டங்களும் இரண்டு நகர்களும் 12 கவுன்ட்டிகளும் உள்ளன.
2015 கணக்கெடுப்பின்படி இதன் மக்கள்தொகை 10,701,600[3] இதில் 4,303,700 பேர் ஏழு மாவட்டங்கள் அடங்கிய நடுவ (அல்லது மெட்ரோ) பகுதியில் வாழ்கின்றனர்.[4] சிஜியாசுவாங் மக்கள்தொகை பெருநிலச் சீனாவில் 12ஆவது ஆகும்.[5]
1949இல் சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட பின்னர் சிஜியாசுவாங் குறிப்பிடத்தக்க வளர்ச்சி கண்டுள்ளது. பெருநகரப் பகுதியின் மக்கள்தொகை கடந்த 30 ஆண்டுகளில் நான்கு மடங்காக ஆகியுள்ளது. 2008 முதல் 2011 வரை செயலாக்கப்பட்ட மூன்றாண்டுத் திட்டத்தின்படி நகரம் சீரமைக்கப்பட்டு பசுமை பகுதிகளும் புதிய கட்டிடங்களும் சாலைகளும் கட்டமைக்கப்பட்டுள்ளன. தொடர்வண்டி நிலையம், வானூர்தி நிலையம், நிலத்தடி தொடருந்து சேவை திறக்கப்பட்டுள்ளன.[6]
தைஹாங் மலைகளுக்கு கிழக்கில் சிஜியாசுவாங் அமைந்துள்ளது; இந்த மலைத்தொடர் வடக்குத் தெற்காக 400 km (250 mi) பரவியுள்ளது. இதன் சராசரி உயரம் 1,500 முதல் 2,000 m (4,900 முதல் 6,600 அடி) ஆகும். இதனால் சிஜியாசுவாங்கில் மலையேற்றம், மிதிவண்டி தடங்கள், வெளிப்புற விளையாட்டுக்கள் பரவலாக உள்ளன.