செ. சுந்தரலிங்கம்
செல்லப்பா சுந்தரலிங்கம் (Chellappah Suntharalingam, 1895 ஆகத்து 19 - 1985 பெப்ரவரி 11) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், கல்விமானும், வழக்கறிஞரும் ஆவார். இவர் நாடாளுமன்ற உறுப்பினராகவும், அமைச்சரவை உறுப்பினராகவும் இருந்தவர். தமிழீழம் என்ற கோட்பாட்டை முன்வைத்த தலைவர்களில் முக்கிய இடம் வகிப்பவர். ஆரம்ப வாழ்க்கையாழ்ப்பாணம் உரும்பிராயைச் சேர்ந்த செல்லப்பா, மீனாட்சி ஆகியோருக்குப் பிறந்தவர் சுந்தரலிங்கம். யாழ்ப்பாணம் பரி யோவான் கல்லூரி, கொழும்பு புனிய யோசப் கல்லூரி ஆகியவற்றில் கல்வி பயின்ற சுந்தரலிங்கம், 1914 ஆம் ஆண்டில் இலண்டன் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் சிறப்புப் பட்டம் பெற்றார். பின்னர் ஒக்சுபோர்டு பல்கலைக்கழகத்தின் பேர்லியல் கல்லூரியில் கணிதத்தில் பட்டப் பின்படிப்பும் பயின்று, இலங்கை திரும்பிய சுந்தரலிங்கம், இந்தியக் குடிமைப் பணியில் இணைந்தார். 1920 ஆம் ஆண்டில் இங்கிலாந்து பாரிஸ்டர்களுக்கான பார் கழகத்தில் சேர்ந்து வழக்கறிஞராகத் தேர்ந்து இலங்கையில் பணியாற்றினார். கொழும்பு ஆனந்தா கல்லூரி அதிபராகவும், கொழும்பு பல்கலைக்கழகத்தில் கணிததுறைத் தலைவராகவும் பின்னர் பணியாற்றினார். சுந்தரலிங்கத்திற்கு நான்கு சகோதரர்கள். செ. நாகலிங்கம், இலங்கை மீயுயர் நீதிமன்ற நீதிபதியாகவும், 1954 இல் பதில் மகாதேசாதிபதியாகவும் இருந்தவர்; அடுத்தவர் செ. பஞ்சலிங்கம் ஒரு மருத்துவர், செ. அமிர்தலிங்கம் மீன்பிடித் திணைக்களப் பணிப்பாளராகப் பணியாணியவர், அடுத்தவர் செ. தியாகலிங்கம் ஒரு பிரபல வழக்கறிஞர். கனகசபை என்பவரின் மகள் கனகாம்பிகை அம்மாள் என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு ஞானலிங்கம், சத்தியலிங்கம், லிங்காம்பிகை, லிங்காவதி, லிங்காமணி, லிங்கேசுவரி என ஆறு பிள்ளைகள். அரசியல் வாழ்க்கைசுந்தரலிங்கம் அரசியலில் ஈடுபாடு கொண்டு 1940 ஆம் ஆண்டில் தனது பணியில் இருந்து ஓய்வு எடுத்தார். இலங்கை அரசாங்க சபைக்கு 1943, 1944 தேர்தல்களில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். பின்னர் 1947 இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வவுனியாவில் சுயேட்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்று இலங்கையின் முதலாவது நாடாளுமன்றத்துக்குத் தெரிவானார்.[1] அன்றைய ஐக்கிய தேசியக் கட்சி அரசில் இணைந்து 1947 செப்டம்பர் 26 இல் தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சரானார். இலங்கையின் 11 விழுக்காடு மக்களுக்கு (இந்தியத் தமிழருக்கு) குடியுரிமையைப் பறித்த சர்ச்சைக்குரிய இலங்கைக் குடியுரிமைச் சட்டத்துக்கு ஆதரவாக அன்று வாக்களித்தார். ஆனாலும், 1948 திசம்பர் 10 இல் சமர்ப்பிக்கப்பட்ட "இந்தியப் பாக்கித்தானிய குடிமக்கள் குடியுரிமைச் சட்டம்" நாடாளுமன்றத்தில் வாக்களிப்புக்கு விடப்பட்ட போது வெளிநடப்புச் செய்தார். அன்றைய இலங்கை பிரதமர் டி. எசு. சேனநாயக்கா இவரது நடத்தை குறித்துக் கேள்வி எழுப்பியதை அடுத்து, தனது அமைச்சர் பதவியைத் துறந்தார். 1951 ஆம் ஆண்டில் இலங்கையின் தேசியக்கொடியாக சிங்களக் கொடி ஏற்றுக் கொள்ளப்பட்டதைக் கண்டித்து சுந்தரலிங்கம் மூன்று மாதங்களுக்கு மேல் நாடாளுமன்ற நடவடிக்கைகளில் பங்குபற்றாமல் இருந்ததால், தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார்.[2] இதையடுத்து 1951 அக்டோபர் 31 இல் நடந்த இடைத்தேர்தலில் போட்டியின்றித் தெரிவு செய்யப்பட்டார்.[3] 1952 தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் தெரிவானார்.[4] இலங்கையில் தனிச் சிங்களச் சட்டம் கொண்டுவரப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து 1955 முதல் நாடாளுமன்றத்தை ஒன்றியொதுக்கல் செய்தார். மூன்று மாதங்கள் நாடாளுமன்றத்தில் பங்கெடுக்காமையால் தனது உறுப்பினர் பதவியை இழந்தார். இதன் பின்னர் இடம்பெற்ற இடைத்தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார்.[3] 1956 தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்றார்.[5] 1959 ஆம் ஆண்டில் "ஈழத் தமிழர் ஒற்றுமை முன்னணி" என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார். இக்கட்சி தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்யப்படாததால் 1960 மார்ச்சு தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்டு தா. சிவசிதம்பரம் என்ற சுயேட்சை வேட்பாளரிடம் தோற்றார்.[6] 1962 சூன் மாதத்தில் மூதூர் தேர்தல் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு 423 வாக்குகள் பெற்றுக் கட்டுப்பணத்தை இழந்தார்.[7] 1963 ஆம் ஆண்டில் சுந்தரலிங்கம் Eylom: Beginning of the Freedom Struggle; Dozens Documents என்ற நூலை வெளியிட்டு தனித் தமிழீழம் கேட்ட முதலாவது தமிழர் என்ற பெருமையைப் பெற்றார்.[8] சுந்தரலிங்கம் 1965 தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டு மூன்றாவதாவே வந்தார்.[9] 1970 தேர்தலில் காங்கேசன்துறை தொகுதியில் தமிழரசுக் கட்சித் தலைவர் சா. ஜே. வே. செல்வநாயகத்துடன் போட்டியிட்டுத் தோற்றார்.[10] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia