உத்தமர் கோயில்திருச்சிராப்பள்ளி கோட்டை இரயில் நிலையத்திலிருந்து சுமார் 8 கிலோமீட்டர்கள் தொலைவிலும், ஸ்ரீரங்கத்திலிருந்து சுமார் 4 கிலோமீட்டர்கள் தொலைவிலும் உள்ள, மும்மூர்த்திகளும் குடி கொண்ட, 108 வைணவத் திருத்தலங்களுள் சோழ நாட்டு மூன்றாவது திருத்தலம்.
பெயர்ச்சிறப்பு
மும்மூர்த்திகளையும் தன்னிடத்தே கொண்டுள்ள இத்திருத்தலம் பல சிறப்புப் பெயர்களையும் கொண்டுள்ளது.
கடம்ப மரங்கள் அதிகமிருந்தமையால், கடம்பனூர் என வழங்கப்பெற்று பிறகு அது கரம்பனூர் எனவும், திருக்கரம்பனூர் எனவும் ஆனது என்பர்.
இதுவே வடமொழியில் நீப ஷேத்திரம் என்றானது.
புருஷோத்தமர் எழுந்தருளியுள்ள திருத்தலமானதால், உத்தமர் கோயில் எனப் புகழ் பெற்றது.
சிவன் பிரம்மனின் கபாலம் ஏந்தி பிட்சை கேட்ட திருக்கோலத்தில் எழுந்தருளியமையால், பிட்சாடனர் கோயில் எனலாயிற்று.
மும்மூர்த்திகளும் காட்சியளிக்கும் காரணத்தால் மும்மூர்த்தி ஷேத்திரம் எனவும் இது வழங்கப்படுகிறது.[1]
வரலாற்றுச் சிறப்புகள்
பல மன்னர்களும் இத்தலத்திற்குக் கொடையளித்ததாக இங்கு காணப்படும் குறிப்புகள் வெளியிடுகின்றன. இவர்களுள் சோழ மன்னன் கேசரி வர்மனும், பாண்டிய மன்னன் சுந்தரபாண்டியனும் அடங்குவர்.
முற்காலத்தில் இத்திருத்தலம் கதவுகளே அற்று இருந்ததாகவும், அதனால் எந்நேரமும் இறைவனைத் தொழுதிட இயன்றிருந்தது எனவும் பெரியவாசன் பிள்ளையின் குறிப்பொன்று கூறுகிறது.
சந்நதிகள்
பெருமாள் சந்நதி; தாயார் சந்நதி; சிவன் சந்நதி; பார்வதி சந்நதி; பிரம்மன் சந்நதி; சரசுவதி சந்நதி என மொத்தம் இங்கு ஆறு சன்னதிகள் இக்கோயிலில் உண்டு ஆகும்.
தல வரலாறு
இத்தலத்திற்குப் பல வரலாறுகள் உள்ளன. பிரம்ம புராணத்திலேயே இக்கோயில் பற்றிய குறிப்பு காணப்படுகிறது.
தம்மிடம் மிக்க பக்தி செலுத்தி வரும் பிரம்மனைச் சோதிக்க விஷ்ணு கடம்ப மரமாக உருவெடுத்து இங்கு வந்ததாகவும், அவ்வுருவிலும் பிரம்மன் அவரை அறிந்து கொண்டு தொடர்ந்து வழிபட்டமையால், மனம் மகிழ்ந்த விஷ்ணு அவருக்கு இங்கு தனி வழிபாட்டு சந்நதி கொள்ளுமாறு செய்ததாகவும் கூறுவர். இந்தியாவில் மிகச் சில இடங்களிலேயே பிரம்மன் மற்றும் சரசுவதி ஆகியோருக்கு தனிக் கோயில்களோ, சந்நதிகளோ உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இக்கோயிலில், சிவன் பிச்சாடனாராக உருக்கொண்டமைக்கும் ஒரு வரலாறு உள்ளது. தன்னைப் போல் பிரம்மனிற்கும் ஐந்து தலைகள் உள்ளதைச் சகிக்காத சிவன் பிரம்மனுடைய ஒரு தலையை வெட்டி எறிந்ததாகவும், அதனால் அவருக்கு பிரம்மஹத்தி தோசம் வந்ததாகவும், அதன் காரணமாக சிவனின் கையிலிருந்த பிரம்மனின் கபாலம், அப்போது அவரது கையோடு ஒட்டிக் கொண்டதாகவும், சிவன் கையில் ஒட்டிக் கொண்ட பிரம்மனின் கபாலத்தில் இலக்குமியைக் கொண்டு பிச்சையிடச் செய்ததால் அச்சாபம் நீங்கியது.
திருமங்கையாழ்வார் தமது பெரிய திருமொழியில் ஒரே ஒரு பாசுரத்தால் கரம்பனூர்ப் பெருமாளுக்கு மங்களாசாஸனம் செய்வித்தார். திருமங்கையாழ்வாரின் பாசுரம் ஒன்று கீழே.
இத்தலத்தில் எழுந்தருளியுள்ள நீலகண்டப் பெருமானைப் பற்றிய பதிகங்களை அப்பர், சுந்தரர், திருஞான சம்பந்தர் ஆகிய நாயன்மார்கள் இயற்றியுள்ளனர். அவற்றின் குறிப்பு பின்வருமாறு:
திருஞானசம்பந்தர் - ஆரிடம்பாடி - 3 - 14
திருநாவுகக்கரசர் - உடையர் - 5 - 41
சுந்தரர் - காருலாவிய - 7 - 36
சிவப்பிரகாச சுவாமிகள் அருளிய பிட்சாடனர் நவமணிமாலையின் ஒரு பகுதியினைக் கீழே காணலாம்: