பொதிகை தொலைக்காட்சி அல்லது டிடி 5தூர்தர்சன் வழங்கும் அலைவரிசைகளில் முதன்மையானதும் இந்தியாவில் தரைவழி தொலைக்காட்சிகளில் மிக பரவலாக கிடைக்கின்ற ஓர் அலைவரிசையும் ஆகும்[1].
வரலாறு
அரசுத்துறை தொலைக்காட்சி நிறுவனமாகிய தூர்தர்சன் பல்வேறு மொழிகளுக்காகத் தனித்தனி செயற்கைக்கோள் அலைவரிசைகளை அறிமுகப்படுத்தியபோது சென்னை மண்டலத்தில் தமிழ் மொழி நிகழ்ச்சிகளுக்காக ஏப்ரல் 15, 1993ஆம் ஆண்டு “டிடி-5" என்ற தொலைக்காட்சி பிணையத்தை நிறுவியது. இதன் சேவைகள் இந்தியாவிலும் உலகின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாகப் பார்க்கப்படுகிறது. எண்களுக்கு மாறாக உள்ளூர் பெயர்களைக் கொடுக்கும் தூர்தர்சனின் கொள்கையின்படி பார்வையாளர்களிடமிருந்து பொருத்தமான பெயர் ஒன்றை பரிந்துரைக்க வேண்டப்பட்டது. இதன் அடிப்படையில் தமிழ் பிறந்ததாகக் கருதப்படும் பொதிகை மலையினை ஒட்டி "டிடி பொதிகை " என தமிழர் திருநாள் சனவரி 15,2000இல் மறுபெயரிடப்பட்டது.
நிகழ்ச்சிகள்
காலை வணக்கம், நெடுந்தொடர்கள், அரட்டை மற்றும் கேள்விபதில் நிகழ்ச்சிகள், செய்திகள், செவ்வியல் இசை நிகழ்ச்சிகள் என பலவகைப்பட்ட நிகழ்ச்சிகளை வழங்குகிறது. அரசுத்துறை நிறுவனமாதலால் அரசின் கொள்கைகளுக்கேற்ப சமூக நலம் பயக்கும் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகின்றன. குறைந்த செலவில் தயாரித்து தனியார் தொலைக்காட்சிகளுடன் போட்டியிட வேண்டிய கட்டாயத்திலும் தனித்தன்மை வாய்ந்த தனது நிகழ்ச்சிகளால் பெரும் பார்வையாளர் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது.
வேளாண் மக்களுக்கும் சிற்றூர் மக்களுக்கும் அரசு கொள்கைகளையும் நடப்பு நிலவரங்களையும் கொண்டு செல்ல சிறந்த ஊடகமாகச் செயல்படுகிறது.