மயிலந்தனைப் படுகொலைகள்
மயிலந்தனைப் படுகொலைகள் (Mylanthanai massacre) 1992 ஆம் ஆண்டு ஆகத்து 9 ஆம் நாள் இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டம், மயிலந்தனை என்ற கிராமத்தில் இடம்பெற்றது. 39 தமிழ் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்[1]. நேரில் கண்ட சாட்சியங்களின் அடிப்படையில் புனாணை இராணுவ முகாமைச் சேர்ந்த இலங்கை இராணுவத்தினரே இப்படுகொலைகளை நிகழ்த்தியதாக வழக்குத் தொடுக்கப்பட்டது[2], ஆனாலும் கொழும்பு நீதிமன்றம் ஒன்றில் சான்றாயர் குழு ஒன்று இவர்கள் அனைவரையும் குற்றமற்றவர்கள் எனக் கூறி விடுதலை செய்தது[3]. இறந்தவர்களின் உறவினர்கள் சார்பில் மேன்முறையீடு செய்ய அனுமதிக்கப்படவில்லை. நிகழ்வு1992, ஆகத்து 8 ஆம் நாள் சனிக்கிழமை அன்று யாழ்ப்பாண மாவட்டம், அராலித்துறையில் யாழ்ப்பாண மாவட்ட இராணுவக் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் டென்சில் கொப்பேக்கடுவ கண்ணிவெடித் தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்ட அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை ஆகத்து 9 ஆம் நாள் இராணுவத்தினர் மயிலந்தனைத் தாக்குதலை நடத்தினர்[4]. இந்திரகலா சின்னத்துரை (வயது 28) என்பவரின் நேரடிச் சாட்சியத்தின் படி, இராணுவத்தினர் துப்பாக்கிகள், கத்திகள், மற்றும் கோடாலிகள் கொண்டு பெண்கள், குழந்தைகள் உட்படப் பலரைத் தாக்கிக் கொன்றனர். ஒரு வயதுக் குழந்தை ஒன்றும் கொல்லப்பட்டது[5]. 35 பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். மேலும் நால்வர் மருத்துவமனையில் இறந்தனர். 34 பேர் படுகாயமடைந்தனர். அரசு விசாரணை1993 ஆம் ஆண்டு ஏப்ரல் 2 ஆம் நாள் மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றத்தில் அடையால அணிவகுப்பு இடம்பெற்று, 24 இராணுவத்தினர் உயிர் தப்பியோரினால் அடையாளம் காணப்பட்டனர்[2]. பின்னர் இவ்வழக்கு பொலன்னறுவை நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்களின் பாதுகாப்புக் கருதி சட்டமா அதிபர் இவ்வழக்கை கொழும்பு நீதிமன்றத்துக்கு மாற்றினார். இதனால் சாட்சிகள் கொழும்பு சென்று சாட்சி சொல்வதற்குப் பெரும் சிரமப்பட்டனர். 199 செப்டம்பரில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது[2]. மட்டக்களப்பில் இருந்து 30 இற்கும் அதிகமான சாட்சிகளுடன் பிண ஆய்வாளரும் விசாரணையில் கலந்து கொண்டனர். தீவிர விசாரணையின் பின்னர் தீர்ப்புக் கூறும் முடிவு சான்றாயர் (jury) குழுவுக்கு கொடுக்கப்பட்டது. வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட எந்த ஒரு இராணுவத்தினரும் குற்றம் இழைக்கவில்லை என சான்றாயர் குழு ஏகமனதாகத் தீர்ப்பளித்தது. மீண்டும் இதனைப் பரிசீலிக்குமாறு நீதிபதி கேட்டுக் கொண்ட போதும், சான்றாயர்கள் அவர்களைக் குற்றமற்றவர்கள் எனக் கூறினர். கொல்லப்பட்டவர்கள் சார்பாக மேன்முறையீடு செய்வதற்கு சட்டமா அதிபர் ஒப்புதல் அளிக்கவில்லை[2][6]. குற்றம் சாட்டப்பட்ட 18 இராணுவத்தினரும் நவம்பர் 27 ஆம் நாள் விடுதலை செய்யப்பட்டனர். மனித உரிமைக் குழுக்களும், கொல்லப்பட்டவர்களின் உறவினர்களும் இது குறித்து அதிருப்தி தெரிவித்தனர்[2][7]. மேலும் பார்க்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia