கடையநல்லூர் (Kadayanallur), இந்தியாவின்தமிழ்நாடுமாநிலத்தில் அமைந்துள்ள தென்காசி மாவட்டத்தில் இருக்கும் ஒரு முதல் நிலை நகராட்சி ஆகும். உற்பத்தி பொருட்கள் கைத்தறி ஆடைகள், தீப்பெட்டி, தானியங்கள், மட்பாண்டங்கள், திராட்சை பழம், கொய்யா பழம்,நெல் சாகுபடி ஆகும். 2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி நகரின் மக்கள்தொகை 90,364 ஆகும். திசம்பர் 06, 2008 முதல் கடையநல்லூரை முதல் நிலை நகராட்சியாய் தரம் உயர்த்தப்பட்டு சட்டம் இயற்றி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. 2019 ஜூலை 19 அன்று திருநெல்வேலி மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு தென்காசி மாவட்டம் உருவாக்கப்பட்டது. அன்றுமுதல் கடையநல்லூர் நகராட்சி தென்காசி மாவட்டத்தில் இணைந்தது.
இங்கு உள்ள "கடைகாலீஸ்வரர்" கோயிலால் இவ்வூர் இப்பெயர் பெற்றது. இந்நகர் மலைகளின் அடிவாரத்தில் உள்ள குற்றாலம்அருவி மற்றும் தென்காசிக்கு அருகில் உள்ளது. மே முதல் ஆகஸ்ட் மாதம் வரை பொழிகின்ற மழைச்சாரலுக்கும் மற்றும் நெல் வயல்களுக்கும் பெயர் பெற்றது. கடையநல்லூர் நகரம் முந்தைய திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
போக்குவரத்து
கடையநல்லூர் ஊரானது திருமங்கலம் - கொல்லம் தே. நெ. 208 தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது . இவ்வூர் வழியாக ஆயிரக்கணக்கான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து கடையநல்லூர் வழியாக தென்காசி, செங்கோட்டைக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் அருகில் உள்ள சங்கரன்கோவில், செங்கோட்டை, புளியங்குடி, சுரண்டை, சேர்ந்தமரம்,கோவில்பட்டி, திருநெல்வேலி, இராஜபாளையம், மதுரை,அம்பாசமுத்திரம் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கேரள மாநிலப் பேருந்துகளும் புனலூர், கொல்லம்,திருவனந்தபுரம் பகுதிகளுக்கும் மேலும் செங்கோட்டை மற்றும் சென்னை இடையிலான வெளியூர் செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இந்திய இரயில்வே துறையின் கீழ் அமைந்துள்ள இரயில்வே நிலையமும் கடையநல்லூரில் அமைந்துள்ளது.
பெயர்க் காரணம்
கலியுகத்திலே தனது பக்தர்களுக்கு அருள்புரிய கருதிய காலகேதார நாதர் ஒரு திருவிளையாடல் மூலமாக உலகிற்கு வெளிப்பட்டார். தெற்கு நோக்கி தீர்த்த யாத்திரை செய்து வந்த சிவனடியார் ஒருவர் இப்புண்ணிய ஸ்தலத்திற்கு அருகே வரும்போது தாக மிகுதியால் இப்பகுதி இடையர்களிடம் தண்ணீர் வேண்ட அவர்கள் மூங்கில் பாத்திரமாகிய கடைகாலில் பால் கொடுத்து கனியோடு உபசரித்தனர். அவர்கள் சென்றபிறகு தான் குடித்த கடைகாலை மண்மூடியிருந்த சுயம்புலிங்க மூர்த்தியான காலகேதார நாதர் மேலாக கவிழ்த்து வைத்து சென்றுவிட்டார் முனிவர். மீண்டும் இவ்விடத்திற்கு வந்த இடையர்கள் கடைகாலை எடுக்க முயன்று முடியாமல் போக கோடாரியால் வெட்ட ரத்தம் கசிந்தது. பயந்து போன இடையர்கள் இப்பகுதி மன்னனான ஜெயத்சேனபாண்டியனிடம் முறையிட்டார்கள். மன்னனும் இவ்விடத்திற்கு வந்து, தான் பார்வை குறைபாடு உள்ளவன் ஆதலால், தன் கைகளால் கடைகாலை தொட்டு பார்த்தபோது அவனுக்கு கண்ணொளி பிறந்தது. இது ஈசன் அருளே என்று எண்ணி கண்கொடுத்த கமலநாதா, கடைகாலீஸ்வரா என சிவபெருமானை மனமுருக வேண்டினான் மன்னன். அப்போது நிலத்தடியில் இருந்த காலகேதார நாதர் கடைகாலீஸ்வரராக வெளிப்பட்டார். ஆலய நிர்மாணம் செய்யும்படி அரசரின் வாக்கு எழுந்தது. அதன்படி ஆலயம் செய்து அதனைச் சுற்றி நகர நிர்மாணமும் செய்தார் மன்னர். அந்நகரமான கடைகால்நல்லூர் தற்போது மருவி கடையநல்லூர் என வழங்கப்பட்டு வருகிறது.[சான்று தேவை]
புவியியல்
கடையநல்லூர் 9°05′N77°21′E / 9.08°N 77.35°E / 9.08; 77.35[3] என்ற புவியியல் ஆள்கூறுகளில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து சராசரி உயரம் 191 m (627 அடி). நகரின் மொத்தப் பரப்பு 52.25 skm. மழைக்காலம் தவிர, பொதுவாக வறண்ட வானிலை நிலவுகிறது.
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1,47,034 பேர் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் இந்துக்கள் 55.98 %, முஸ்லிம்கள் 43.42%, கிறித்தவர்கள் 0.48% ஆவார்கள். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 988 பெண்கள். தேசிய சராசரியான 929-ஐ விட அதிகம். கடையநல்லூர் மக்களின் சராசரி கல்வியறிவு 85.54% ஆகும்.
கல்விக்கூடங்கள்
ருக்மணி கல்வியியல் கல்லூரி, தென்காசி-மதுரை மெயின்ரோடு, மங்களாபுரம், கடையநல்லூர்
மசூது தைக்கா உயர் நிலைப்பள்ளி, மெயின் ரோடு.
தாருஸ்ஸலாம் உயர் நிலைப்பள்ளி, வாணியர் தெரு.
ஹிதாயதுல் இஸ்லாம் உயர் நிலைப்பள்ளி, மெயின் பஜார்.
அரசினர் ஆண்கள் மேனிலைப்பள்ளி, கிருஷ்ணாபுரம்.
அரசினர் பெண்கள் உயர் நிலைப்பள்ளி, மெயின் ரோடு.
ரத்னா உயர் நிலைப்பள்ளி, முத்துக் கிருஷ்ணாபுரம்.
உலகா மேனிலைப்பள்ளி, முத்துக் கிருஷ்ணாபுரம்.
ஃபாத்திமா மருந்தியல் கல்லூரி மெயின் ரோடு முதலியன குறிப்பிடத்தக்கன.