திராக்கோல் கோட்டை![]() திராக்கோல் கோட்டை என்றும் சில சமயங்களில் தெரெக்கோல் கோட்டை என்றும் அழைக்கப்படும் கோட்டை இந்தியாவின் கோவாவில் அமைந்துள்ளது. கோவாவின் வட முனையில், திராக்கோல் ஆற்றின் கழிமுகத்துக்கு அருகில் கட்டப்பட்டுள்ள இது பனாசியில் இருந்து 42கிமீ தொலைவில் உள்ளது.மராட்டிய மொழியில் திர் கோல் என்பது "சரிவுடன் அமைந்த ஆற்றங்கரை" எனப் பொருள்படும்.[1] வரலாறுஇது 17 ஆம் நூற்றாண்டில் சாவந்த்வாடியின் மன்னரான மகாராசா கென் சாவந்த் போன்சுலேயால் கட்டப்பட்டது.[2] அரபிக் கடலைத் தெளிவாகப் பார்க்கக்கூடிய வகையில், ஆற்றின் வடகரையில் ஒரு குன்றின்மீது இதற்கு அமைவிடம் தெரிவுசெய்யப்பட்டது. சாவந்த்வாடியின் போன்சுலேக்கள் பல உள்ளூர்க் கடற்படைக் கப்பல்களை திராக்கோல் ஆற்றில் பாதுகாப்பாக வைத்திருந்தனர். போர்த்துக்கேயர் ஆதிக்கம்1746ல் போர்த்துக்கேயர், கோவாவின் 44ஆவது வைசுராயான பெட்ரோ மிகுவேல் டி அல்மெய்தாவின் தலைமையில் சாவந்த்வாடி அரசருக்கு எதிராகப் போர் தொடுத்தனர். 1746 நவம்பர் 16 ஆம் தேதி அல்மெய்தா தனது போர்க் கப்பல்களைக் கைசுவா ஆறு வரை கொண்டுவந்து சாவந்த்வாடி அரசரின் கடற்படைக்கு எதிராகக் கடற்போரில் ஈடுபட்டான். இப்போரில் போர்த்துக்கேயர் சாவந்த்வாடியின் கப்பற்படையைத் தோற்கடித்தனர். தொடர்ந்து தரையில் இடம்பெற்ற போர்களின் பின்னர் 1746 நவம்பர் 23 ஆம் தேதி திராக்கோல் கோட்டை போர்த்துக்கேயரிடம் சரணடைந்தது.[3] இதன் பின்னர் இக்கோட்டை போர்த்துக்கேயரின் கடற் பாதுகாப்பின் ஒரு முக்கிய பகுதியாக விளங்கியது. 1764ல் இது பெரிய அளவில் திருத்தி அமைக்கப்பட்டது. இந்தியாவில் போர்த்துக்கேயரின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்கள் 1961 ஆம் ஆண்டில் இந்தியாவுடன் இணைக்கப்படும் வரை இக்கோட்டை போர்த்துக்கேயரின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. 1819 பெப்ரவரி 17 அன்று மராட்டாக்களின் தோல்வியைத் தொடர்ந்து, கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, சாவந்த்வாடி அரசர் போன்சுலே கைமா சாவந்த் பிரித்தானியரின் மேலாண்மையை ஏற்றுக்கொண்டார். இந்த ஒப்பந்தத்தின் பின்னர் திராக்கோல் கோட்டைப் பகுதி பிரித்தானிய நட்புப் பகுதிகளிடையே ஒரு தீவுபோல் அமைந்தமையால், இக்கோட்டை அதன் உத்திசார் முக்கியத்துவத்தை இழந்தது.[4] உள்ளூர்க் கிளர்ச்சிகோவாவில் பிறந்த முதலாவது கோவாவின் வைசுராயான முனைவர் பர்னார்டோ பெரெசு டா சில்வாவின் தலைமையில் போர்த்துக்கேயருக்கு எதிராக 1825ல் இடம்பெற்ற கிளர்ச்சியின்போது, கிளர்ச்சியாளர்களின் தளமாக இக்கோட்டை விளங்கியது. ஒரு இரக்கமற்ற போர்த்துக்கேயக் கட்டளை அதிகாரியான டா சுன்கா என்பவன் கோட்டைக்குள் புகுந்து அங்கிருந்த படையினர் அனைவரினதும் தலைகளைக் கொய்து கம்பங்களில் ஏற்றிவைக்குமாறு பணித்தான்.[1] இக்கிளர்ச்சியின் போது கோட்டை பெரும் சேதத்துக்கு உள்ளாகியது எனினும், கோட்டையும், அங்கிருந்த சிற்றாலயமும் பின்னர் மீளமைக்கப்பட்டன.[2] விடுதலைப் போராட்டம்கோவாவைச் சேர்ந்த விடுதலைப் போராட்டக்காரர்கள் அடிக்கடி இங்கே ஆர்ப்பாட்டங்களை நடத்தியதால் இது ஒரு அடையாளச் சின்னமாக விளங்குகிறது.[1] 1954 ஆகத்து 15 ஆம் தேதி, போர்த்துக்கேய ஆட்சியை எதிர்த்து வன்முறைசாராப் போராட்டம் நடத்தியவர்கள் இக் கோட்டையுள் புகுந்து இந்தியக் கொடியை ஏற்றினர். எனினும் அடுத்த நாளே அவர்கள் அனைவரும் கைதுசெய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர்.[1][5] தற்போதைய நிலைதற்போது அழிந்த நிலையில் உள்ள இக்கோட்டை திராக்கோல் கோட்டை மரபுரிமை () என்னும் பெயரில் ஒரு சுற்றுலா விடுதியாக மாற்றப்பட்டுள்ளது. இங்குள்ள தேவாலயம் வழமையாகப் பொதுமக்களின் பயன்பாட்டுக்காகத் திறக்கப்படுவதில்லை எனினும், ஆண்டுத் திருவிழா போன்ற சிறப்புக் காலங்களில் மட்டும் திறந்துவிடப்படுகிறது.[2] குறிப்புகள்
மேலும் படங்கள்
|
Portal di Ensiklopedia Dunia