கோவா (மாநிலம்)
கோவா (Goa, (/ˈɡoʊə/ (ⓘ)) என்பது இந்தியாவின் தென்மேற்கு கடற்கரையில் கொங்கண் மண்டலத்தில் உள்ள ஒரு மாநிலமாகும். இது புவியியல் ரீதியாக தக்காணப் பீடபூமியிலிருந்து மேற்குத் தொடர்ச்சி மலைகளால் பிரிக்கப்பட்டுள்ளது. [8] [9] இது வடக்கில் மகாராட்டிரம் மற்றும் கிழக்கு மற்றும் தெற்கில் கர்நாடகம் ஆகியவற்றுக்கு இடையில் அமைந்துள்ளது. அரபிக்கடல் இதன் மேற்கே கடற்கரையை உருவாக்குகிறது. இது பரப்பளவில் இந்தியாவின் மிகச்சிறிய மாநிலமாகவும், மக்கள்தொகை அடிப்படையில் நான்காவது சிறிய மாநிலமாக உள்ளது. கோவா இந்தியாவின் அனைத்து மாநிலங்களைவிட தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது. [10] இது நாட்டின் மொத்த தனிநபர் உள்நாட்டு உற்பத்தியை விட இரண்டரை மடங்கு அதிகமாக உள்ளது. [11] இந்தியாவின் பதினோராவது நிதிக் குழு, கோவாவை அதன் உள்கட்டமைப்பு வசதிகள் காரணமாக சிறந்த இடத்தில் உள்ள மாநிலமாக அறிவித்தது. மேலும் இந்தியாவின் தேசிய மக்கள்தொகை ஆணையம் இதை இந்தியாவில் சிறந்த வாழ்க்கைத் தரம் கொண்ட மாநிலமாக மதிப்பிட்டது (ஆணையத்தின் “12 குறிகாட்டிகள்” அடிப்படையில்). [11] மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணில் இந்திய மாநிலங்களில் இது மூன்றாவது மிக உயர்ந்த சுட்டெண் தரவரிசையில் உள்ளது. மாநிலத்தின் தலைநகராக பனஜி உள்ளது. மாநிலத்தில் உள்ள மிகப்பெரிய நகரமாக வாஸ்கோட காமா உள்ளது. கோவாவில் உள்ள வரலாற்று நகரமான மட்காவ் போர்த்துகேயர்களின் கலாச்சார செல்வாக்கை இன்னும் வெளிப்படுத்துவதாக உள்ளது. போர்த்துகேயர்கள் 16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வணிகர்களாக முதன்முதலில் துணைக்கண்டத்திற்கு பயணம் செய்து, விரைவில் அதைக் கைப்பற்றினர். பின்னர் கோவா போர்த்துகேயப் பேரரசின் ஒரு வெளிநாட்டுப் பிரதேசமாக மாறியது. பின்னர் இது போர்த்துகேய இந்தியா என்று அறியப்பட்டது. மேலும் 1961 இல் இந்தியாவுடன் இணைக்கப்படும் வரை சுமார் 450 ஆண்டுகள் பேர்த்துகேயர்களின் ஆட்சியிலேயே இருந்தது. [12] [13] கோவாவின் உத்தியோகபூர்வ மொழி, அதன் பெரும்பான்மையான மக்களால் பேசப்படும் கொங்கணி ஆகும். கோவாவின் வெண் மணல் கடற்கரைகள், சுறுசுறுப்பான இரவு வாழ்க்கை, வழிபாட்டுத் தலங்கள், உலக பாரம்பரிய பட்டியலில் இடம் பெற்றுள்ள கட்டிடக்கலை ஆகியவற்றால் ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான சர்வதேச மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். இது வளம் மிகுந்த தாவரங்கள் மற்றும் விலங்கினங்களையும் கொண்டுள்ளது. ஏனெனில் இது வடமேற்கு தொடர்ச்சி மலை மழைக்காடுகளுக்கு மிக அருகில் உள்ளது. இது உலகின் அரிய பல்லுயிர் வெப்பப்பகுதிகளில் ஒன்றாகும். சொற்பிறப்பியல்பொ.ஊ. 1510 இல் கோவாவின் பாமினி - பிஜாப்பூர் கட்டுப்பாட்டில் இருந்த நகரத்தை அபோன்சோ டி அல்புகெர்க்கே கைப்பற்றினார். போர்த்துகேய இந்தியாவின் தலைநகராக இந்த நகரம் மாறிய பிறகு, அந்த நகரத்தின் பெயரானது அதை அடுத்துள்ள பிரதேசங்களுக்கும் சேர்த்து வழங்கப்பட்டது. "கோவா" என்ற நகரத்தின் பெயரின் தோற்றம் குறித்து தெளிவாக அறியப்படவில்லை. பழங்கால இலக்கியங்களில், கோவா கோமாஞ்சலா, கோபகப்பட்டனம், கோபகப்பட்டம், கோபகபுரி, கோவபுரி, கோவேம், கோமந்தகம் போன்ற பல பெயர்களால் அறியப்பட்டது. [14] கோவாவின் மற்ற வரலாற்றுப் பெயர்களாக சிந்தாபூர், சந்தாபூர், மஹாஸ்சபடம் போன்றவை இருந்தன. [15] வரலாறுவரலாற்றுக்கு முந்தைய காலம்கோவாவில் காணப்படும் பாறை கலைச் செதுக்கல்கள் இந்தியாவில் மனித வாழ்க்கையின் ஆரம்பகால அடையாளங்களில் ஒன்றாகும். மேற்குப் பாயும் குஷாவதி ஆற்றின் அருகே உஸ்கலிமால் மற்றும் கஜூரில் லசெம்புரைக்கல் தளங்கள் மற்றும் கருங்ல் பாறைகளில் பாறை ஓவியங்கள் உள்ளன. 10,000 ஆண்டுகளுக்கு முந்தைய பாறைசெதுக்கல்கள், கல்-கோடாரிகள் உள்ளிட்ட கற்கருவிகள் கோவாவின் காசூர், மௌக்சிம், மண்டோவி - சுவாரி வடிநிலம் உள்ளிட்ட பல இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. டாபோலிம், அட்கான், ஷிகாவோ, படோர்பா, அர்லி, மௌலிங்குனிம், திவார், சாங்கும், பிலெர்ன், அக்வெம்-மார்கோன் போன்ற இடங்களில் பழங்கற்கால மக்களின் வாழ்க்கை குறித்த சான்றுகள் உள்ளன. செம்புரைக்கல் பாறை சேர்மங்களை கரிமக் காலக்கணிப்பு செய்வதில் உள்ள சிரமங்களின் காரணமாக அவற்றின் சரியான காலத்தை தீர்மானிப்பதில் சிக்கல்கள் உள்ளன. [16] இந்தோ-ஆரிய மற்றும் திராவிட புலம்பெயர் பழங்குடியின மக்கள் உள்ளூர் மக்களுடன் ஒன்றிணைந்து, ஆரம்பகால கோவா கலாச்சாரத்திற்கான அடித்தளத்தை உருவாக்கியபோது, ஆரம்பகால கோவா சமூகம் தீவிர மாற்றத்திற்கு உள்ளானது. [17] ஆரம்பகால வரலாறுபொ.ஊ.மு. 3 ஆம் நூற்றாண்டில், கோவா மௌரியப் பேரரசின் ஒரு பகுதியாக இருந்தது. இது பௌத்த பேரரசரான, மகதத்தின் அசோகரால் ஆட்சி செய்யப்பட்டது. புத்த பிக்குகள் கோவாவில் பௌத்தத்தின் அடித்தளத்தை அமைத்தனர். பொ.ஊ.மு. 2 ஆம் நூற்றாண்டுக்கும் பொ.ஊ. 6 ஆம் நூற்றாண்டுக்கும் இடையில், இப்பகுதி கோவாவின் போஜாக்களால் ஆளப்பட்டது. கார்வாரைச் சேர்ந்த சூட்டுகள், கோலாப்பூரின் சாதவாகனர்கள் (பொ.ஊ.மு. 2 ஆம் நூற்றாண்டு முதல் பொ.ஊ. 2 ஆம் நூற்றாண்டு வரை), மேற்கு சத்ரபதிகள் (பொ.ஊ. 150), மேற்கு மகாராட்டிரத்தின் அபிராக்கள், குஜராத்தின் யாதவ குலங்களின் போஜாக்கள் மற்றும் கொங்கன் மௌரியர்கள் காலச்சுரிகளின் சிற்றரசர்களாக ஆட்சி செய்தனர். [18] அவர்களின் ஆட்சிக்கு பின்னர் 578 மற்றும் 753 க்கு இடையில் பாதமியின் சாளுக்கியர்களும், பின்னர் 753 முதல் 963 வரை மல்கெடாவின் இராஷ்டிரகூடர்களின் கைகளுக்கு ஆட்சி அதிகாரம் சென்றது. 765 முதல் 1015 வரை, கொங்கணின் தெற்கு சில்ஹாரர்கள் சாளுக்கியர்கள் மற்றும் இராட்டிரகூடர்களின் சிற்றரசர்களாக கோவாவை ஆட்சி செய்தனர்.[19] அடுத்த சில நூற்றாண்டுகளில், கோவாவை கல்யாணி சாளுக்கியர்களின் சிற்றரசர்களாக கடம்பர்கள் அடுத்தடுத்து ஆண்டனர். அவர்கள் கோவாவில் சமண சமயத்தை ஆதரித்தனர்.[20] 1312ல், கோவா தில்லி சுல்தானகத்தின் கீழ் வந்தது. என்றாலும் இப்பகுதியில் இராச்சியத்தின் பிடி பலவீனமாக இருந்தது, மேலும் 1370 வாக்கில் இது விஜயநகரப் பேரரசின் முதலாம் ஹரிஹரரின் வசம் வந்தது. விஜயநகர மன்னர்களிடம் இருந்து 1469 ஆம் ஆண்டு குல்பர்காவின் பாமினி சுல்தான்களால் கையகப்படுத்தப்படும் வரை இப்பகுதியை அவர்களே வைத்திருந்தனர். பாமினி சுல்தான்களின் வம்சம் சிதைந்த பிறகு, இப்பகுதி பீஜாப்பூரின் அடில் ஷாஹிகளின் கைகளில் விழுந்தது, அவர் போர்த்துகீசியர்களால் பழைய கோவா (அல்லது வெல்ஹா கோவா) என்று அழைக்கப்பட்ட நகரத்தை துணை தலைநகராக நிறுவினார்.[21]
போர்த்துகேய காலம்![]() 1510 ஆம் ஆண்டில், போர்த்துகீசியர்கள் ஆளும் பிஜப்பூர் சுல்தான் யூசுப் அடில் ஷாவை தங்களது உள்ளூர் கூட்டாளியான டிமோஜியின் உதவியுடன் தோற்கடித்தனர். [22] இதன் பிறகு அவர்கள் வெல்ஹா கோவாவில் (பழைய கோவா) நிரந்தரமாக தங்கள் குடியேற்றத்தை நிறுவினர். இதுவே கோவாவில் போர்த்துகேய குடியேற்றத்துவ ஆட்சியின் தொடக்கமாகும். இந்த நிலை கோவா 1961 இல் இந்தியாவுடன் இணைக்கப்படும் வரையிலான நான்கரை நூற்றாண்டு காலம் நீடித்தது. 1560 இல் நிறுவப்பட்ட கோவா சமயக் குற்றவிசாரணை என்னும் முறையான தீர்ப்பாயம், 1812 இல் ஒழிக்கப்பட்டது. [23] பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்த, கோவாவின் பிரதேசம் இரண்டு பிரிவுகளால் ஆனதாக இருந்தது. அவை வெல்ஹாஸ் கான்கிஸ்டாஸ் (பழைய வெற்றி பகுதிகள்)-பார்டெஸ், இல்ஹாஸ் டி கோவா, சால்செட் ஆகிய பகுதிகளை மையமாக கொண்டவை. இவை பதினாறாம் நூற்றாண்டு முதல் போர்த்துகேய நிர்வாகத்தின் கீழ் இருந்தவை. அடுத்து நோவாஸ் கான்க்விஸ்டாஸ் (புதிய வெற்றி பகுதிகள்)—பிச்சோலிம், கனகோனா, பெர்னெம், கியூபெம், சத்தாரி சங்குயெம் போன்றவை. இவை பதினெட்டாம் நூற்றாண்டில் தங்கள் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளாக அடுத்தடுத்து சேர்க்கப்பட்ட பிரதேசங்களாகும். 1843 ஆம் ஆண்டில், போர்த்துகேயர்கள் தலைநகரை வெல்ஹா கோவாவிலிருந்து ( பழைய கோவா ) சிடேட் டா நோவா கோவாவிற்கு (புதிய கோவா நகரம்) மாற்றினர். இது இன்று பனஜி (பஞ்சிம்) என அழைக்கப்படுகிறது. 18 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், போர்த்துகேய விரிவாக்கங்கள் மூலமாக பெறப்பட்ட இந்தியாவில் உள்ள மற்ற சில பகுதிகளை இழந்தது. பின்னர் போர்த்துகேயர்களின் எல்லைகள் உறுதிப்படுத்தப்பட்டு கோவா, தாமன் மற்றும் தியூ என உருவாக்கப்பட்டது. இவற்றுடன் சில்வாசாவும் உள்ளடக்கியதாக இருந்தது. இவை போர்த்துக்கேய மொழியில் எஸ்டடோ டா இந்தியா என்று அழைக்கப்பட்டது. சமகால காலம்1947 இல் இந்தியா ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து விடுதலைப் பெற்ற பிறகு, இந்திய துணைக் கண்டத்தில் உள்ள போர்த்துகேயப் பகுதிகளை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு இந்திய ஒன்றியம் கோரிக்கை விடுத்தது. போர்ச்சுகல் அது குறித்து பேச்சுவார்த்தை நடத்த மறுத்தது. 19 திசம்பர் 1961 அன்று, இந்திய இராணுவம் விஜய் நடவடிக்கை மூலம் படையெடுத்தது. இதன் விளைவாக கோவா மற்றும் தமன் தியூ தீவுகள் இந்திய ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டன. கோவா, தாமன் மற்றும் தியூவுடன் இணைந்து இந்தியாவின் ஒன்றியப் பகுதியாக ஒழுங்கமைக்கப்பட்டது. 16 ஜனவரி 1967 அன்று கோவா, தாமன் மற்றும் தியூ யூனியன் பிரதேசத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்க கோவாவில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது . சுதந்திர இந்தியாவில் நடத்தப்பட்ட ஒரே பொது வாக்கெடுப்பு இதுவாகும். இந்த வாக்கெடுப்பு கோவா மக்கள் தங்கள் பகுதியை ஒன்றிய ஆட்சிப் பகுதியாக தொடர்வதா அல்லது மகாராட்டிர மாநிலத்துடன் இணைவதா என்பதை முடிவெக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. வாக்கெடுப்பில் பெரும்பான்மையானவர்கள் ஒன்றிய ஆட்சிப் பகுதியாக தொடர்வதைத் தேர்ந்தெடுத்தனர். [24] [25] 30 மே 1987 இல், ஒன்றிய ஆட்சிப் பகுதி பிரிக்கப்பட்டது. அதன் பிறகு கோவா இந்தியாவின் இருபத்தைந்தாவது மாநிலமாக மாற்றப்பட்டது. தாமன் மற்றும் தியூ ஆகியவை ஒன்றிய ஆட்சிப் பிரதேசமாகவே இருந்துவருகின்றன. புவியியல் மற்றும் காலநிலைநிலவியல்![]() ![]() கோவா 3,702 km2 (1,429 sq mi) பரப்பளவைக் கொண்டுள்ளது. இது 14°53′54″ N மற்றும் 15°40′00″ N அட்சரேகைகளுக்கும், 73°40′33″ E மற்றும் 74°20′13″ E தீர்க்கரேகைகளுக்கும் இடையே அமைந்துள்ளது. கோவா என்பது கொங்கன் என்று அழைக்கப்படும் கடலோர மண்டலத்தின் ஒரு பகுதியாகும். இது தக்காணப் பீடபூமியிலிருந்து பிரிக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் வரை உள்ள ஒரு பகுதியாகும். கோவாவில் மிக உயரமான இடம் 1,026 m (3,366 அடி) உயரம் கொண்ட சோன்சோகர் சிகரம் ஆகும். கோவா 160 km (99 mi) நீளமான கடற்கரையைக் கொண்டுள்ளது. கோவாவின் ஏழு முக்கிய ஆறுகளாக மாண்டோவி, சுவாரி, தெரெகோல், சப்போரா, கல்கிபாக், கம்பர்ஜுவா கால்வாய், தல்போனா, சால் ஆகியவை உள்ளன. இவற்றில் சுவாரி மற்றும் மாண்டோவி மிக முக்கியமான ஆறுகளாகும். கம்பர்ஜுவா ஆறு ஒரு பெரிய முகத்துவாரத்தை உருவாக்குகிறது.[26] இந்த ஆறுகள் தென்மேற்கு பருவமழையால் நீராதாரத்தை பெறுகின்றன. மேலும் அவற்றின் ஆற்றுப் படுகை மாநிலத்தின் புவியியல் பகுதியில் 69% ஐ கொண்டுள்ளது.[26] கோவாவில் 40 க்கும் மேற்பட்ட முகத்துவாரங்களும், எட்டு கடல் தீவுகளும், சுமார் 90 ஆற்றுத் தீவுகள் உள்ளன. கோவாவில் பாயும் ஆறுகளின் மொத்த நீளம் 253 km (157 mi) ஆகும். கோவாவில் கடம்ப வம்சத்தின் ஆட்சியின் போது கட்டப்பட்ட 300 க்கும் மேற்பட்ட பழமையான குளங்கள் உள்ளன. மேலும் இங்கு 100 க்கும் மேற்பட்ட மருத்துவ நீரூற்றுகளும் உள்ளன. சுவாரி ஆற்றின் முகப்பில் உள்ள மோர்முகாவோ துறைமுகம் தெற்காசியாவின் சிறந்த இயற்கை துறைமுகங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. கோவாவின் மண்ணின் பெரும்பகுதி ஃபெரிக்-அலுமினியம் ஆக்சைடுகள் மற்றும் செம்புரைக்கல்லால் ஆனது. மேலும் உள்நாட்டிலும் ஆற்றங்கரைகளிலும் உள்ள மண் பெரும்பாலும் வண்டல் மற்றும் களிமண் ஆகும். மண்ணில் கனிமங்கள் மற்றும் இலைமக்குகள் நிறைந்துள்ளன. இதனால் இந்த நிலங்கள் வேளாண்மைக்கு ஏற்றவை. இந்திய துணைக்கண்டத்தில் உள்ள பழமையான பாறைகள் சில கோவாவுடனான கர்நாடகாத்துடனான எல்லையை ஒட்டிய கோவாவின் மொலம் மற்றும் அன்மோட் ஆகியவற்றுக்கு இடையே காணப்படுகின்றன. பாறைகள் 3,600 மில்லியன் ஆண்டுகள் பழமையானவை என மதிப்பிடப்பட்டுள்ளன. அவை உருமாறிய கருங்கல் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த பாறைகளின் மாதிரி கோவா பல்கலைக்கழகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
காலநிலைகோவாவானது கோப்பென் காலநிலை வகைப்பாட்டின் கீழ் வெப்பமண்டல பருவமழை காலநிலையைக் கொண்டுள்ளது. இந்த மாநிலம் சூறாவளி மண்டலத்திலும், அரபிக்கடலுக்கு அருகாமையிலும் இருப்பதால், ஆண்டின் பெரும்பகுதி வெப்பமான மற்றும் ஈரப்பதமான காலநிலையைக் கொண்டுள்ளது. மே மாதம் பொதுவாக வெப்பமானதாக இருக்கும், பகல்நேர வெப்பநிலை 35 °C (95 °F) இக்கு மேல் இருக்கும் அதிக ஈரப்பதமும் கொண்டது. மாநிலத்தின் மூன்று பருவங்களாக தென்மேற்கு பருவமழை காலம் (சூன்-செப்டம்பர்), பருவமழைக்கு பிந்தைய காலம் (அக்டோபர்-சனவரி), பருவமழைக்கு முந்தைய காலம் (பிப்ரவரி-மே) உள்ளன. ஆண்டு சராசரி மழையில் 90% ( 3,048 mm or 120 அங் ) மழைக்காலத்தில் பொழிகிறது.[26]
உட்பிரிவுகள்![]() பச்சை நிறத்தில் உள்ள வட்டங்கள் வடக்கு கோவா மாவட்டத்தைச் சேர்ந்தவை, ஆரஞ்சு நிறத்தில் உள்ளது தெற்கு கோவா மாவட்டத்தைக் குறிக்கிறது. இந்த மாநிலம் இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை - வடக்கு கோவா மற்றும் தெற்கு கோவா மாவட்டங்கள் ஆகும். ஒவ்வொரு மாவட்டமும் இந்திய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஒரு மாவட்ட ஆட்சியரால் நிர்வகிக்கப்படுகிறது. பனஜி (பஞ்சிம்) வடக்கு கோவா மாவட்டத்தின் தலைமையகமும், கோவாவின் தலைநகரமும் ஆகும். வடக்கு கோவாவானது பனாஜி, மப்பூசா மற்றும் பிச்சோலிம் என மூன்று உட்பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐந்து வட்டங்களாக (துணை மாவட்டங்கள்)- திஸ்வாடி (பனாஜி), பார்தேசு ( மப்பூசா ), பெர்னேம், பிச்சோலிம் மற்றும் சத்தாரி ( வால்போய் ) பிரிக்கபட்டுள்ளது. மட்காவ் (மட்கான்) தெற்கு கோவா மாவட்டத்தின் தலைமையகம் ஆகும். இது கோவாவின் கலாச்சார மற்றும் வணிக தலைநகரமாகவும் உள்ளது. தெற்கு கோவா போண்டா, மர்மகோவா - வாஸ்கோ, மார்கோவ், கியூபெம், தர்பந்தோரா என ஐந்து உட்பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. மேலும் இது போண்டா, மோர்முகாவ், சால்செட் ( மட்காவ் ), கியூபெம், மற்றும் கனகோனா ( சௌடி ), சாங்க்யும், தர்பந்தோரா என ஏழு வட்டங்களாக பிரிக்கபட்டுள்ளது. கோவாவின் முக்கிய நகரங்களாக பனஜி, மட்காவ், வாஸ்கோ - மர்மகோவா, மப்பூசா, போண்டா, பிச்சோலிம், வால்போய் ஆகியவை உள்ளன. கோவாவின் ஒரே மாநகராட்சியாக பனஜி (பஞ்சிம்) உள்ளது. பதின்மூன்று நகராட்சிகள் உள்ளன. அவை மார்கோ, மர்மகோவா (வாஸ்கோவுடன் இணைக்கப்பட்டது), பெர்னெம், மாபுசா, பிச்சோலிம், சான்குலிம், வால்போய், போண்டா, குன்கோலிம், கியூபெம், குர்கோரம், சங்குயம், கனாகோனா ஆகும். கோவாவில் மொத்தம் 334 கிராமங்கள் உள்ளன. [29] அரசு மற்றும் அரசியல்![]() இந்தியாவின் மற்ற பகுதிகள் மூன்று நூற்றாண்டுகள் பிரித்தானிய ஆட்சி அனுபவத்ததை ஒப்பிடுகையில், 450 ஆண்டுகால போர்த்துகேய ஆட்சியின் காரணமாக கோவாவின் அரசியல், இப்பகுதியின் தனித்துவத்தின் விளைவாகும். மாநிலம் இந்தியாவில் இணைக்கப்பட்ட முதல் இரண்டு தசாப்தங்களில் கோவாவில் இந்திய தேசிய காங்கிரசால் தேர்தல் வெற்றியை அடைய முடியவில்லை. [30] மாறாக, மகாராட்டிரவாதி கோமந்த கட்சி மற்றும் ஐக்கிய கோன்ஸ் கட்சி போன்ற பிராந்திய அரசியல் கட்சிகளே மாநிலத்தில் ஆதிக்கம் செலுத்தின. [31] அரசாங்கம்கோவாவில் உள்ள இரண்டு மாவட்டங்களில் இருந்து இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் அவையான மக்களவைக்கு மாநிலத்தின் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கபட்டுகின்றனர். இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவைக்கு ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை பிரதிநிதியாக கொண்டுள்ளது. கோவாவின் நிர்வாக தலைநகரம் பனஜியில் அமைந்துள்ளது. இது பெரும்பாலும் ஆங்கிலத்தில் Panjim என்றும், போர்த்துகேய மொழியில் Pangim என்றும் மாநிலத்தின் அதிகாரப்பூர்வ மொழியான கொங்கனியில் Ponjê என்றும் குறிப்பிடப்படுகிறது. இந்த நகரம் மாண்டோவி ஆற்றின் இடது கரையில் அமைந்துள்ளது. கோவா சட்டம்ன்ற பேரவையானது பனாஜியின் ஓரத்தில் பாயும் மண்டோவியி ஆற்றின் எதிர்கரையில் உள்ள போர்வோரிமில் உள்ளது. மாநிலத்தின் மிக உயர்ந்த நீதிமன்றமாக பம்பாய் உயர் நீதிமன்றத்தின் கோவா அமர்வு ஆகும், இந்த பம்பாய் உயர் நீதிமன்றத்தின் கிளையானது கோவாவில் உள்ள பனாஜியில் நிரந்தரமாக அமர்ந்துள்ளது. பிரித்தானிய அரசு காலத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒவ்வொரு சமயத்துக்கும் தனித்தனியாக உருவாக்கபட்ட குடிமை சட்டங்களை பிற மாநிலங்கள் பின்பற்றி வருகின்றன. ஆனால் கோவா மற்றும் டாமோனின் போர்த்துகேய குடிமை சட்டம், நெப்போலியன் குறியீட்டை அடிப்படையாகக் கொண்ட ஒரு பொது சிவில் சட்டம் கோவாவிலும், டமோன், டையூ & சில்வாசா ஒன்றிய ஆட்சிப் பிரதேசங்களிலும் தக்கவைக்கப்பட்டுள்ளது. கோவாவில் சபாநாயகர் தலைமையில் 40 உறுப்பினர்களைக் கொண்ட ஓரவை கொண்ட சட்டமன்றம் உள்ளது. சட்டமன்றத்தில் பெரும்பான்மையுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சி அல்லது கூட்டணியால் உருவாக்கப்பட்ட நிர்வாகத்திற்கு முதல்வர் தலைமை தாங்குகிறார். ஆளுநர், மாநிலத் தலைவராக, இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். 1990 வரை ஏறக்குறைய முப்பது ஆண்டுகள் நிலையான ஆட்சியைக் கொண்டிருந்த கோவா அரசு பிறகு, 1990 மற்றும் 2005 க்கு இடைப்பட்ட [32] ஆண்டுகளில் பதினான்கு அரசாங்கங்களைக் கண்டு அரசியல் உறுதியற்ற தன்மைக்கு பெயர் பெற்றதாக ஆகியுள்ளது. ஆளுநரால் 2005 மார்ச்சில், சட்டமன்றம் கலைக்கப்பட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சி அறிவிக்கப்பட்டது. இதனால் சட்டமன்றம் முடக்கியது. 2005 சூனில் ஐந்து இடங்களுக்கு நடந்த இடைத்தேர்தலில், இந்திய தேசிய காங்கிரஸ் மூன்று இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தது. மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியும் பாரதிய ஜனதா கட்சியும் இரண்டு பெரிய கட்சிகளாக உள்ளன. 2007ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில், இதேகா தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. 2012 சட்டமன்றத் தேர்தலில், மகாராட்டிரவாதி கோமந்த கட்சியுடன் இணைந்து பாரதிய ஜனதா கட்சி அறுதிப் பெரும்பான்மை பெற்று, மனோகர் பாரிக்கரின் தலைமையில் புதிய அரசாங்கத்தை அமைத்தது. [33] 2017 சட்டமன்றத் தேர்தலில், இந்திய தேசிய காங்கிரசு அதிக இடங்களைப் பெற்றது, பாஜக இரண்டாவது இடத்தைப் பிடித்தது. எனினும், 40 உறுப்பினர்களை கொண்ட அவையில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் மிருதுளா சின்கா அழைத்தார். பாஜக பணபலத்தைப் பயன்படுத்தியதாகக் கூறி உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் வழக்கு தொடர்ந்தது. இருப்பினும், மனோகர் பரிக்கர் தலைமையிலான அரசு உச்ச நீதிமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபித்தது. [34] [35] [36] தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள்![]() கோவாவில் வெப்ப வலயக் காடுகளின் பரப்பளவு 1,500 km2 (579 sq mi) ஆக உள்ளது. [14] இவற்றில் பெரும்பாலானவை அரசாங்கத்திற்குச் சொந்தமானவை. அரசுக்கு சொந்தமான காடுகள் 1,300 km2 (502 sq mi) என மதிப்பிடப்பட்டுள்ளது. அதேசமயம் தனியாருக்குச் சொந்தமானவையாக 200 km2 (77 sq mi) உள்ளது. மாநிலத்தின் பெரும்பாலான காடுகள் மாநிலத்தின் உள் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளன. கிழக்கு கோவாவின் பெரும்பகுதியை கொண்டுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகள், உலகின் பல்லுயிர் பெருக்கத்தில் ஒன்றாக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுது. நேஷனல் ஜியோகிராஃபிக் இதழின் 1999 பிப்ரவரி இதழில், கோவா அதன் வளமான வெப்பமண்டல பல்லுயிர் பெருக்கத்திற்காக அமேசான் மற்றும் காங்கோ படுகைகளுடன் ஒப்பிடப்பட்டது. கோவாவின் வனவிலங்கு சரணாலயங்களில் 1512 க்கும் மேற்பட்ட ஆவணப்படுத்தப்பட்ட தாவர வகைகள், 275 க்கும் மேற்பட்ட பறவை இனங்கள், 48 க்கும் மேற்பட்ட விலங்குகள், 60 க்கும் மேற்பட்ட ஊர்வன வகைகள் உள்ளன. [37] நந்தா ஏரி கோவாவின் முதல் மற்றும் ஒரே ராம்சர் சதுப்பு நிலம் ஆகும். கோவா தென்னை சாகுபடிக்கும் பெயர் பெற்றது. நெல் முக்கிய உணவுப் பயிராக உள்ளது. மேலும் பருப்பு வகைகள், ராகி (கேழ்வரகு) மற்றும் பிற உணவுப் பயிர்களும் பயிரிடப்படுகின்றன. பிரதான பணப்பயிர்களாக பருத்தி, தென்னை, முந்திரி, கரும்பு போன்றவையும், வாழை, மா, அன்னாசி போன்ற பழங்களும் பயிரிடப்படுகின்றன. [14] கோவாவின் மாநில விலங்கு காட்டெருது, மாநிலப் பறவை சுடர் தொண்டை <i id="mwAfw">புல்புல்</i>, மாநில மரம் கரு மருது ஆகும். மூங்கில் கரும்பு, மராட்டிய மரப்பட்டை, சில்லர் பட்டைகள், முருகல் ஆகியவை முக்கியமான வனப் பொருட்களாகும். மேடான பகுதிகளைத் தவிர கோவா முழுவதும் தென்னை பயிரிடப்படுகிறது. தேக்கு, சால் மரம், முந்திரி, மா போன்ற பல்வேறு இலையுதிர் மரங்கள் காணப்படுகின்றன. பழங்களில் பலா, மா, அன்னாசி, பிளாக்பெரி ஆகியவை பயிரிடப்படுகின்றன. கோவாவின் காடுகள் மருத்துவ தாவரங்கள் நிறைந்தவை. கோவா காடுகளில் நரிகள், காட்டுப்பன்றிகள் மற்றும் வலசைவரும் பறவைகள் காணப்படுகின்றன. பறவை இனங்களில் மீன்கொத்தி, மைனா, கிளி ஆகியவை அடங்கும். கோவா கடற்கரையிலும் அதன் ஆறுகளிலும் ஏராளமாக மீன்கள் பிடிக்கப்படுகின்றன. நண்டு, சிங்க இறால், கூனிறால், சொறி மீன், சிப்பி, கெளுத்தி மீன்கள் போன்றவை கடல் மீன்வளத்தின் அடிப்படையாகும். கோவாவிலும் அதிக பாம்புகள் உள்ளன. கோவாவில் சோராவ் தீவில் புகழ்பெற்ற சலிம் அலி பறவைகள் சரணாலயம் உட்பட பல புகழ்பெற்ற "தேசிய பூங்காக்கள்" உள்ளன. கோவாவின் மற்ற வனவிலங்கு சரணாலயங்களில் பாண்ட்லா வனவிலங்கு சரணாலயம், மோலெம் வனவிலங்கு சரணாலயம், கோடிகாவ் வனவிலங்கு சரணாலயம், மாடேய் வனவிலங்கு சரணாலயம், நேத்ராவலி வனவிலங்கு சரணாலயம், மஹாவீர் வனவிலங்கு சரணாலயம் ஆகியவை அடங்கும். கோவாவின் புவியியல் பரப்பில் 33% க்கும் மேற்பட்ட பரப்பில் அரசாங்க காடுகளின் கீழ் (1224.38 கிமீ 2 ) உள்ளது இதில் சுமார் 62% வபரப்பளனில் வவிலங்கு சரணாலயங்கள் மற்றும் தேசிய பூங்காவின் பாதுகாக்கப்பட்ட பகுதிகளின் (கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. தனியார் காடுகளினல்ககணிசமான பகுதியுாக முந்திரி, மா, தென்னை போன்ற தோட்டங்களிாககெரிய நிலப்பரப்பும் இருப்பதால், மொத்த காடு மற்றும் மரங்கள் பகோவாவின் புவியியல் பரப்பளவில் 56.6% ஆக உள்ளது பொருளாதாரம்
2017 ஆம் ஆண்டிற்கான கோவாவின் மாநில உள்நாட்டு உற்பத்தி தற்போதைய மதிப்பில் $11 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. கோவா இந்தியாவின் பணக்கார மாநிலமாக, தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி மிக அதிகமாக உள்ள மாநிலமாக உள்ளது. இது நாட்டை விட இரண்டரை மடங்கு கூடுதலாகும். இது வேகமான வளர்ச்சி விகிததமாக 8.23% (ஆண்டு சராசரி 1990-2000) உள்ளது. [39] கோவாவின் முதன்மைத் தொழிலாக சுற்றுலா உள்ளது. இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளில் 12% [40] பேர் கோவாவுக்கு வருகின்றனர். கோவாவில் இரண்டு முக்கிய சுற்றுலா பருவங்கள் உள்ளன: குளிர்காலம் மற்றும் கோடை காலம். குளிர்காலத்தில், வெளிநாட்டிலிருந்து (முக்கியமாக ஐரோப்பா) சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். கோடையில் (கோவாவில், மழைக்காலம்) இந்தியா முழுவதும் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். கோவாவின் நிகர மாநில உள்நாட்டு உற்பத்தி (NSDP) 2015–16ல் சுமார் 7.24 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. [41] கடற்கரையிலிருந்து தொலைவில் உள்ள நிலப்பகுதிகள் கனிமங்கள், தாதுக்கள் நிறைந்ததாக உள்ளது. இதனால் சுற்றுலாவுக்கு அடுத்து இரண்டாவது மிகப்பெரிய தொழிலாக சுரங்கத் தொழில் உள்ளது. இரும்பு, பாக்சைட், மாங்கனீசு, களிமண், சுண்ணாம்பு, சிலிக்கா ஆகியவை வெட்டி எடுக்கப்படுகின்றன. மர்மகோவா துறைமுகம் 2007 இல் 31.69 மில்லியன் டன் சரக்குகளைக் கையாண்டது, இது இந்தியாவின் மொத்த இரும்புத் தாது ஏற்றுமதியில் 39% ஆகும். சேசா கோவா (இப்போது வேதாந்தா ரிசோர்சஸ் நிறுவனத்திற்கு சொந்தமானது) மற்றும் டெம்போ ஆகியவை முன்னணி சுரங்கத் தொழிலகங்கள். பரவலாக சுரங்கங்களால் வனப்பகுதிகள் அழிக்கப்பட்டு வருவதோடு, உள்ளூர் மக்களுக்கு சுகாதார ஆபத்தையும் ஏற்படுத்துகின்றன. 2015-16 ஆம் ஆண்டில், மர்மகோவா துறைமுகத்தால் கையாளப்பட்ட மொத்த போக்குவரத்து 20.78 மில்லியன் டன்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது. வேளாண்மை, கடந்த நான்கு தசாப்தங்களாக பொருளாதாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்து, மக்களில் கணிசமானோருக்கு பகுதி நேர வேலைவாய்ப்பை வழங்குகிறது. இங்கு நெல் முக்கிய விவசாயப் பயிராகும். அதைத் தொடர்ந்து பாக்கு, முந்திரி, தென்னை போன்றவை உள்ளன. மீன்பிடித் தொழிலில் சுமார் 40,000 பேர் பணிபுரிகின்றனர். இருப்பினும் அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்கள் இந்தத் துறையின் முக்கியத்துவத்தில் சரிவு ஏற்பட்டதைக் காட்டுகின்றது. பாரம்பரிய மீன்பிடித்தல் இருந்து பெரிய அளவிலான இயந்திர இழுவை மீன்பிடி முறைக்கு மாறியதால் மீன்பிடித்தல் வீழ்ச்சியடைந்துள்ளது. இங்கு உள்ள நடுத்தர அளவிலான தயாரிப்புத் தொழில்களில் பூச்சிக்கொல்லிகள், உரங்கள், வட்டகைகள், டியூப்கள், பாதணிகள், இரசாயனங்கள், மருந்துகள், கோதுமை பொருட்கள், இரும்பு உருட்டுதல், பழங்கள் மற்றும் மீன் பதப்படுத்தல், முந்திரி பருப்புகள், ஆடை, மதுபான தயாரிப்புகள் ஆகியவை அடங்கும். தற்போது, கோவாவில் 16 திட்டமிடப்பட்ட சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உள்ளன. கோவாவின் அரசியல் கட்சிகள் மற்றும் கோவா கத்தோலிக்க திருச்சபையின் கடும் எதிர்ப்புக்குப் பிறகு, கோவாவில் இனி சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அனுமதிப்பதில்லை என கோவா அரசு அண்மையில் முடிவு செய்துள்ளது. [42] கோவாவில் குறைந்த விலையில் பீர், ஒயின், ஸ்பிரிட்ஸ் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் மதுபானத்தின் மீதான கலால் வரி இங்கு மிகக் குறைவு. வெளிநாட்டில் பணிபுரியும் பல குடிமக்களிடமிருந்து அவர்களின் குடும்பங்களுக்கு பணம் அனுப்பப்படுவது மாநிலத்திற்கு பொருளாதாரத்துக்கு மற்றொரு முக்கிய ஆதாரமாக உள்ளது. இதனால் இங்கு நாட்டிலேயே மிகப்பெரிய அளவில் வங்கிச் சேமிப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. 1976 ஆம் ஆண்டில் கோவா சில வகையான சூதாட்டங்களை சட்டப்பூர்வமாக்கிய இந்தியாவின் முதல் மாநிலமாக ஆனது. இதனால் மாநில அரசு சூதாட்டத்தின் மீது வரிகளை விதிக்க ஏதுவானது. அதன் மூலம் பொருளாதாரமும் வலுப்படுத்தப்பட்டது. கோவாவில் பல சூதாட்ட விடுதிகள் உள்ளன. 2018-2019 ஆம் ஆண்டில் சூதாட்ட விடுதிகளின் வரி வருவாய் ரூ.414 கோடியை எட்டியது. [43] 2017 செப்டம்பர் நிலவரப்படி, கோவாவின் மொத்த மின் உற்பத்தி திறன் 547.88 மெகாவாட் ஆகும். இந்தியாவில் 100 சதவீத கிராமப்புறங்கள் மின்மயமாக்கல் வசதியை எட்டிய சில மாநிலங்களில் கோவாவும் ஒன்றாகும். [44]
மக்கள்தொகையியல்மக்கள் தொகை
கோவாவைச் சேர்ந்தவர்கள் கோவான் என்று அழைக்கப்படுகிறனர். கோவாவில் 2011 ஆம் ஆண்டு நிலவரப்படி 1.459 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். சிக்கிம், மிசோரம், அருணாச்சல பிரதேசத்திற்கு அடுத்தபடியாக இந்தியாவின் நான்காவது குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநிலமாக இது திகழ்கிறது. கோவாவில் ஒரு சதுர கிலோமீட்டருக்கு 394 பேர் வசிக்கின்றனர். இது தேசிய சராசரியான 382 ஐ விட அதிகம். மாநில மக்கள் தொகையில் 62.17% பேர் நகர்ப்புறங்களில் வசிக்கும் மாநிலமாக கோவா உள்ளது. பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு 973 பெண்கள். பிறப்பு விகிதம் 2007 இல் 1,000 பேருக்கு 15.70 ஆக இருந்தது. மேலும் கோவாவில் பழங்குடியினர் மிகக் குறைந்த விகிதத்தில் .04% மட்டுமே வாழ்கின்றனர். [45] தற்போது கோவாவில் வாழும் மக்களில் 50% பேர் கோவாவை பூர்வீகமாக கொள்ளாதவர்களாக உள்ளனர். இதனால் கோவாவில் பூர்வீக இனமான கோவான் மக்களை விட அயல் இனத்தவர் அதிகமாக உள்ளனர். மொழிகள்கோவா, தாமன் மற்றும் தியூவின் முந்தைய ஒன்றிய ஆட்சிப் பிரதேசத்தின் அலுவல் மொழிச் சட்டம், 1987 இன் படி, தேவநாகரி எழுத்தில் எழுதப்பட்ட கொங்கணி கோவாவின் ஒரே அதிகாரப்பூர்வ மொழியாக ஆக்கியது. ஆனால் மராத்தியையும் "அனைத்து அல்லது எந்த அதிகாரப்பூர்வ நோக்கங்களுக்காகவும்" பயன்படுத்திக்கொள்ளலாம் என்று குறிப்பிடப்படுகிறது. போர்த்துக்கேய குடியேற்றத்தின் ஆட்சியின் போது போர்த்துக்கேயம் மட்டுமே அதிகாரப்பூர்வ மொழியாக இருந்தது. மராத்தியில் பெறப்படும் கடிதங்களுக்கு மராத்தியில் பதில் அளிக்கும் கொள்கையையும் அரசாங்கம் கொண்டுள்ளது. [48] மாநிலத்தில் உத்தியோகபூர்வ அந்தஸ்த்தை உரோமானிய எழுத்துக்களில் எழுதப்படும் கொங்கணிக்கும் அளிக்கவேண்டும் என்ற கோரிக்கைகள் உள்ளன. கோவாவின் ஒரே அதிகாரப்பூர்வ மொழியாக கொங்கணியை கொண்டிருப்பதற்கு பரவலான ஆதரவு உள்ளது. [49] கோவாவில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்தின் வழிபாட்டு முறைகள் மற்றும் தகவல்தொடர்புகள் உரோமானிய எழுத்துக்களில் எழுதப்படும் கொங்கணி மொழியில் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது. மாநிலத்தில் கொங்கணியானது சுமார் 66.11% மக்களால் முதல் மொழியாகப் பேசப்படுகிறது. ஆனால் கிட்டதட்ட கோவாவில் உள்ள அனைத்து மக்களாளும் கொங்கணியைப் பேசவும் புரிந்துகொள்ளவும் முடியும். மாநிலத்தில் பெரும் தொகையிலான மக்கள் ஆங்கிலத்தை பேசுபவர்களாகவும், புரிந்துகொள்பவர்களாகவும் உள்ளனர். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மாநிலத்தில் உள்ள பிற மொழி பேசுபவர்களில் மராத்தி (10.89%), இந்தி (10.29%), கன்னடம் (5.66%), உருது (2.83%), ம போர்த்துக்கேய மொழி (1%) ஆகும். [50] வரலாற்று ரீதியாக, கொங்கணியை ஆண்ட பல ஆட்சியாளர்களின் அதிகாரப்பூர்வ மொழியாகவோ அல்லது நிர்வாக மொழியாகவோ கொங்கணி இருந்தது இல்லை. கதம்பர்களின் (சு. 960–1310) ஆட்சியின்போது அரசவை மொழியாக கன்னடமும், முசுலீம் ஆட்சியின் கீழ் (1312-1370 மற்றும் 1469-1510), அதிகாரப்பூர்வ மற்றும் கலாச்சார மொழியாக பாரசீக மொழியும் இருந்துள்ளன. தொல்லியல் அருங்காட்சியகம் மற்றும் ஓவியக் காட்சியகத்தில் உள்ள பல்வேறு கல்வெட்டுகள் கன்னடம் மற்றும் பாரசீக மொழிகளில் பொறிக்கப்பட்டுள்ளன. [51] முஸ்லீம் ஆட்சியின் இரண்டு காலகட்டங்களுக்கு இடைப்பட்ட காலத்தில், கோவாவை தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த விஜயநகரப் பேரரசு, கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளையே பயன்படுத்தியது. [51] சமயம்கோவாவில் சமயங்கள் (2011)[52] இந்து சமயம் (66.08%) கிறிஸ்தவம் (25.10%) இசுலாம் (8.33%) சீக்கியம் (0.10%) பிற அல்லது சமயம நம்பிக்கை அற்றவர்கள் (0.39%)
2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மாநில மக்கள் தொகையான 1,458,545 மக்களில், 66.1% இந்துக்கள், 25.1% கிறிஸ்தவர்கள், 8.3% முஸ்லிம்கள், 0.1% சீக்கியர்கள் ஆவர். கத்தோலிக்க கலைக்களஞ்சியத்தில் உள்ள 1909 ஆண்டைய புள்ளிவிவரங்களின்படி, போர்த்துக்கேய கட்டுப்பாட்டில் இருந்த கோவாவில் மொத்த மக்கள் தொகையான 3,65,291 இல் கத்தோலிக்கர் தொகை 2,93,628 (80.33%) ஆக இருந்தது. 20 ஆம் நூற்றாண்டிலிருந்து, கோவா கத்தோலிக்கர்களில் பெரும்பகுதி மக்கள் கோவாவிலிருந்து இந்திய பெரு நகரங்களுக்கும் (எ.கா. பம்பாய், புனே, பெங்களூர் ), வெளிநாடுகளுக்கும் (எ.கா போர்த்துகல், ஐக்கிய இராச்சியம் ) நிரந்தரமாக குடியேறியதன் காரணமாக கோவா கத்தோலிக்கர்களின் விழுக்காடு தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. அதே சமயம் 20 ஆம் நூற்றாண்டிலிருந்து இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்து கிறிஸ்தவர் அல்லாதவர்கள் பெருமளவில் குடியேறினர். [53] (மாநிலத்தில் வசிப்பவர்களில் 50%க்கும் குறைவானவர்களே கோவன் இனத்தவர்கள் . ) சுற்றுலாகோவா கடற்கரையில் இந்திய மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள். மேல் படத்தில் பின்னணியில் கப்பல்களைக் காணலாம், மையப் படத்தில் பின்னணியில் மலைகளையும், கீழே உள்ள படத்தில் கோவா விமான நிலையத்திற்கு அருகிலுள்ள போக்மாலோ கடற்கரையையும் காணலாம். பொதுவாக கோவாவின் கடலோரப் பகுதிகளில் சுற்றுலா கவனம் பெற்றுள்ளது. உள்நாட்டில் சுற்றுலாவானது குறைந்த அளவிலான செயல்பாட்டையே கொண்டுள்ளது. 2010 ஆம் ஆண்டில், 2 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் கோவாவிற்குச் சென்றதாகக் கூறப்படுகிறது, அவர்களில் சுமார் 1.2 மில்லியன் பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள். [54] 2013 ஆம் ஆண்டு நிலவரப்படி, கோவாவானது இந்திய மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு, குறிப்பாக பிரித்தானியர்கள் மற்றும் உருசியர்கள், விருந்துக்கு குறைந்த வசதிகளுடன், தேர்ந்தெடுக்க விரும்பும் இடமாக இருந்துவருகிறது. மேலும் உயர் அடுக்கு மக்கள்தொகையை ஈர்க்கும் வகையில் மாற்றங்கள் செய்யலாம் என அரசு விரும்புகிறது. நேசனல் ஜியாகிரிபிக் இதழில் உலகின் முதல் 10 இரவு வாழ்க்கை நகரங்களில் கோவா 6வது இடத்தில் உள்ளது. [55] கோவாவில் உள்ள குறிப்பிடத்தக்க இரவு விடுதிகளில் குரோனிகல், மம்போஸ், சின்க் ஆகியவை அடங்கும். கோவாவின் மிகப்பெரிய சுற்றுலா அம்சங்களில் ஒன்றாக நீர் விளையாட்டுகள் உள்ளன. பாகா மற்றும் கலங்குட் போன்ற கடற்கரைகளில் ஜெட்-ஸ்கையிங், பாராசெயிலிங், பனானா போட் ரைடிங், வாட்டர் ஸ்கூட்டர் சவாரிகள் போன்ற அம்சங்கள் உள்ளன. சிஎன்என் தொலைக்காட்சியின் டிராவல் நிகழ்ச்சியில் ஆசியாவின் சிறந்த 20 கடற்கரைகளில் பாலோலம் கடற்கரை மூன்றாவது இடத்தில் உள்ளது. [56] கோவாவில் 450 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவிய போர்த்துகீசிய ஆட்சி மற்றும் போர்த்துகேய கலாச்சாரத்தின் தாக்கம் இந்தியாவில் வேறு எங்கும் காணப்படாத கலாச்சார சூழலை கோவாவிற்கு வருபவர்களுக்கு அளிக்கிறது. கோவா பெரும்பாலும் கிழக்கு மற்றும் மேற்கத்திய கலாச்சாரங்களுக்கிடையேயான இணைப்பாக விவரிக்கப்படுகிறது. போர்த்துக்கேய கலாச்சாரம் அதன் கட்டிடக்கலை, கலாச்சாரம் போன்றவை மாநிலத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது. கோவா மாநிலம் அதன் சிறந்த கடற்கரைகள், தேவாலயங்கள், கோவில்கள் போன்றவற்றிற்கு பிரபலமானது. [57] பழைய கோவாவில் உள்ள போம் ஜீசஸ் கதீட்ரல், அகுவாடா கோட்டை, இந்திய வரலாறு, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் பற்றிய புதிய மெழுகு அருங்காட்சியகம் ஆகியவை மற்ற சுற்றுலாத் தலங்களாகும். வரலாற்று தளங்கள்கோவாவில் இரண்டு உலக பாரம்பரிய தளங்கள் உள்ளன. அவை போம் ஜீசஸ் பசிலிக்கா, [58] பழைய கோவாவின் தேவாலயங்கள் மற்றும் கான்வென்ட்கள் ஆகியவை ஆகும். கோவாவின் புரவலர் துறவியாக பல கத்தோலிக்கர்களால் கருதப்படும் புனித பிரான்சிஸ் சவேரியரின் உடல் இந்த பேராலயத்தில் வைக்கப்பட்டுள்ளது. இவை போர்த்துகீசிய கால நினைவுச்சின்னங்கள் மற்றும் வலுவான ஐரோப்பிய தன்மையை பிரதிபலிக்கின்றன. ![]()
கோவாவில் சான்கோலேயில் புனித ஜோசப் வாஸ் சிற்றாலயம் உள்ளது. பிலார் மடாலயம் ஆண்டுதோறும் நவம்பர் 10 முதல் 20 வரை புனித பத்ரே அக்னெலோ குஸ்டாவோ டி சௌசாவின் தொடர் தொழுகை நோன்பு நடத்தப்படுகிறது. பிலாருக்கு அருகிலுள்ள பாட்டிம், கான்சிம் என்ற இடத்தில் உள்ள செயிண்ட்ஸ் சைமன் மற்றும் ஜூட் தேவாலயத்தில் மரியாள் காட்சியளித்ததாகக் கூறப்படுகிறது. பழைய கோவாவில் உள்ள சாந்தா மொனிக்கா துறவற மடத்தில் திருச்சிலுவையில் இரத்தம் தோய்ந்த இயேசுவின் சிலை உள்ளது. பனாஜியில் பரோக் பாணியில் நிக்ஸ்கொல்லோங்க் கோர்ப்-சோம்போவ் சைபின்னிச் இகோர்ஸ் ( அவர் லேடி ஆஃப் பனஜி கன்செப்சன் தேவாலயம்) போன்ற தேவாலயங்கள், கோதிக் கட்டிடக்கலை பாணியில் மேட்டர் டீ ( தேவ் மாடெச்சி இகோர்ஸ் / இறைவனின் தாய் ) தேவாலயம் மற்றும் இது போன்ற தேவாலயங்கள் உள்ளன. வெல்ஹாஸ் கான்கிஸ்டாஸ் பகுதிகள் கோவா-போர்த்துக்கேய பாணி கட்டிடக்கலைக்கு பெயர் பெற்றவை. கோவாவில் மர்மகோவா, திராக்கோல், சப்போரா, அகுவாடா, ரெய்ஸ் மாகோஸ், நானஸ், மோர்முகாவ், ஃபோர்ட் காஸ்பர் டயஸ், கபோ டி ராமா போன்ற பல கோட்டைகள் உள்ளன .[சான்று தேவை] கோவாவின் பல பகுதிகளில், இந்தோ-போர்த்துக்கேய கட்டிடக்கலையில் கட்டப்பட்ட மாளிகைகள் இன்றும் உள்ளன. ஆனால், சில கிராமங்களில், பெரும்பாலானவை பாழடைந்த நிலையில் உள்ளன. பனாஜியில் உள்ள ஃபோன்டைன்ஹாஸ், கோவாவின் வாழ்க்கை, கட்டிடக்கலை, கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக வரையறுக்கபட்டுள்ளது. கோவாவின் சில கோவில்களில், குறிப்பாக சாந்த துர்கா கோவில், மங்கேசி கோயில், சிறீ தாமோதர் கோவில், மஹாலசா கோவில் போன்றவற்றில் போர்த்துகீசிய காலத்தின் தாக்கங்கள் காணப்படுகின்றன. 1961 க்குப் பிறகு, இவற்றில் பல இடித்து இந்திய பழங்குடி பாணியில் புனரமைக்கப்பட்டன.[சான்று தேவை] அருங்காட்சியகங்கள் மற்றும் அறிவியல் மையம்கோவாவில் மூன்று முக்கியமான அருங்காட்சியகங்கள் உள்ளன. அவை கோவா மாநில அருங்காட்சியகம், கடற்படை விமான அருங்காட்சியகம், தேசிய கடலியல் நிறுவனம் ஆகும். இங்குள்ள விமான அருங்காட்சியகம் இந்தியாவில் உள்ள விமான அருங்காட்சியகங்களில் மூன்றில் ஒன்றாகும் (மற்றவை தில்லி மற்றும் பெங்களூரில் உள்ளன). கோவா அறிவியல் மையம் மிராமர், பனாஜியில் உள்ளது. [60] தேசிய கடல்சார் ஆய்வு நிறுவனம் டோனா பவுலாவில் உள்ளது. [61] கோவா அருங்காட்சியகம் கலங்குட் அருகே உள்ள பிலர்ன் தொழிற்பேட்டையில் உள்ள தனியாருக்குச் சொந்தமான சமகால கலைக்கூடமாகும். [62] கலாச்சாரம்![]() கோவா 450 ஆண்டுகளுக்கும் மேலாக போர்த்துக்கேய பிரதேசமாக இருந்து. இதனால் கோவாவின் கலாச்சாரமானது கிழக்கு மற்றும் மேற்கத்திய பாணிகளின் கலவையாக உள்ளது. இதில் மேற்கத்திய கலாச்சாரமே அதிக ஆதிக்கம் செலுத்துகிறது. அரசின் முக்கிய நிகழ்வுகளில் நடக்கும் கோவாவின் அணிவகுப்பில் தீபஸ்தம்பம், சிலுவை, கோடே மோட்னி நடனம், தேர் ஆகியவற்றை மையமாகக் கொண்டு சமய நல்லிணக்கத்தைக் காட்டுவதாக உள்ளது. இந்த மாநிலத்தின் பல்வேறு சமயங்கள் மற்றும் கலாச்சாரங்களின் தனித்துவமான கலவையை சித்தரிக்கும் பிராந்திய நடனங்கள் போலவே, ஐரோப்பிய அரச உடைகளும் கோவாவின் கலாச்சார பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகும். கோவாவில் கிறிஸ்மஸ், ஈஸ்டர், கார்னிவல், தீபாவளி, சிக்மோ, சாவோத், குடீ பாடவா, தசரா போன்றவை முக்கிய உள்ளூர் பண்டிகைகளாகும். கோவான் கார்னிவல் மற்றும் கிறிஸ்துமஸ்-புத்தாண்டு கொண்டாட்டங்கள் பல சுற்றுலா பயணிகளை ஈர்க்கின்றன. கோவா மாநிலத்தின் குடிமக்களுக்கான உயரிய விருதான கோமந்த் விபூஷன் விருது, 2010 ஆம் ஆண்டு முதல் கோவா அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. [63] மேலும் பார்க்கவும்மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia