பிளம்பாங்கான் இராச்சியம்
பிளம்பாங்கான் இராச்சியம் சாவகத் தீவின் கீழ்க் கோடியில் அமைந்திருந்தது. இது சாவகத்தில் காணப்பட்ட மஜாபாகித்து அரசு (1293–1527) போன்ற மிகப் பெரும் இந்துப் பேரரசுகள் காணப்பட்ட அதே வேளையிலேயே எழுச்சியுற்றது. பதினைந்தாம் நூற்றாண்டில் மஜாபாகித்து அரசு வீழ்ச்சியுறத் தொடங்கிய போது பிளம்பாஙான் இராச்சியம் சாவகத்தின் பகுதிகளைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஒரேயொரு இந்து இராச்சியமாகக் காணப்பட்டது. அக்காலத்தில் வலிமை மிக்க இசுலாமியப் பேரரசாக இருந்த மத்தாராம் சுல்தானகம் மேற்குப் பகுதியிலும் பாலித் தீவில் காணப்பட்ட கெல்கெல், புலெலெங், மெங்வி போன்ற இந்து அரசுகள் கிழக்குப் பகுதியலுமிருந்த நிலையில் அவற்றினிடையே கிட்டத்தட்ட மூன்று நூற்றாண்டு காலம் பிளம்பாஙான் இராச்சியம் நிலைத்திருந்தது. இதனருகிலிருந்த அரசுகள் அனைத்துமே தமது அரசியல், சமயக் குறிக்கோள்களை எட்டிக் கொள்வதற்காக பிளம்பாஙான் ஆட்புலத்தைப் பயன்படுத்திக் கொள்ள விழைந்தன. ஆயினும் பாலித் தீவினர் பிளம்பாஙான் இராச்சியத்தை தமக்கு மேற்கிலிருந்து முஸ்லிம் மத்தாராம் பேரரசிடமிருந்து இஸ்லாம் பரவுவதிலிருந்து காத்துக் கொள்ளப் பயன்படுத்திக் கொண்டனர். அவ்வாறே தமக்குள்ளே உட்பூசல் நிறைந்திருந்தமையால் பொருளாதார வளம் குன்றியிருந்த பாலித் தீவின் ஆட்சியாளர்கள் மேற்கிலிருந்து ஏற்படும் படையெடுப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்வதன் மூலம் தமது பொருளாதாரம் மேலும் சீர்குலையாமல் தடுத்துக் கொண்டனர். பதினாறாம் நூற்றாண்டின் இறுதியில், உண்ணாட்டினரை மதம் மாற்றுவதற்காக மேற்கத்திய சமயப் போதகர்கள் சிலர் கிழக்குச் சாவகத்தில் வந்திறங்கினர். அதிலிருந்து கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு கழிந்த பின்னரே ஒல்லாந்துக்காரர்களும் ஆங்கிலேயர்களும் இப்பகுதியில் தமது அரசியல், பொருளாதார நலன்களுக்காகப் போட்டியிட்டனர். பிளம்பாஙானின் ஆட்சியுரிமை தொடர்பில் ஏற்பட்ட தாயாதிச் சண்டைகள் இவ்வரசு வலுவிழந்து, வெளி நாட்டினர் இதன் மீது ஆதிக்கம் செலுத்தக் காரணமாயின.
உசாத்துணை
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia