புலெலெங் பிராந்தியம்
புலெலெங் பிராந்தியம் (ஆங்கிலம்: Buleleng Regency; பாலினியம்: Kabupatén Buléléng; இந்தோனேசியம்: Kabupaten Buleleng) என்பது இந்தோனேசியா, பாலி தீவில் ஒரு பிராந்தியம் ஆகும். இந்தப் பிராந்தியத்தின் தலைநகரம் சிங்கராஜா (Singaraja). இந்தப் பிராந்தியம் அதன் வடக்குப் பகுதியின் மேற்கில் பாலி நீரிணையில் இருந்து; பாலி தீவின் கிழக்கு முனை வரை நீண்டுள்ளது. புலெலெங் பிராந்தியம் 1,364.73 கிமீ2 பரப்பளவில் அமைந்துள்ளது. இது பாலி மாநிலத்தின் மிகப்பெரிய மாவட்டமாக அமைகிறது. புலெலெங் பிராந்தியம் வடக்கே பாலி கடல் மேற்கே பாலி நீரிணை ஆகியவற்றை கடல் எல்லைகளாகக் கொண்டுள்ளது. 2024-ஆம் ஆண்டில், புலெலெங் பிராந்தியத்தின் மக்கள் தொகை 826,193 ஆக இருந்தது. தற்போது பாலி மாநிலத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட பிராந்தியமாகவும் தடம் பதிக்கிறது. பாலி மாநிலத்தின் மக்கள் தொகையில் இது 19% ஆகும்.[2][3][4] பொதுபுலெலெங் பிராந்தியத்தின் பெரும்பகுதி மலைப்பகுதியாகும்; தெற்குப் பகுதியில் மலைகள் மற்றும் குன்றுகள் உள்ளன. வடக்குப் பகுதியில்; அதாவது கடற்கரைப் பகுதிகளில் தாழ்நிலங்கள் உள்ளன. புலெலெங் பிராந்தியத்தின் கடற்கரையின் நீளம் சுமார் 144 கி.மீ ஆகும். இதில் 19 கி.மீ கிழக்கில் தேஜாகுலா துணை மாவட்டம் வழியாக மேற்கில் ஜெம்பிரானா பிராந்தியத்தின் எல்லை வரை செல்கிறது. இந்தப் பிராந்தியம் பாலியில் மிகப்பெரிய வேளாண் பொருட்களின் உற்பத்தியாளராக உள்ளது. பாலினிய பாம்பு பழம் (Balinese snake fruit), பாலினிய சோளம் மற்றும் தேஜாகுலா ஆரஞ்சுப் பழங்களின் உற்பத்திக்கு பிரபலமானது. இந்தப் பிராந்தியத்தில் லோவினா கடற்கரை, புலாக்கி கோயில் (Pura Pulaki), ஆயர் சானி மற்றும் பான்யூமாலா அருவிகள்; மற்றும் தாம்பலிங்கான் ஏரி (Danau Tamblingan) போன்ற பல சுற்றுலா தலங்களும் உள்ளன.[5] வரலாறு![]() புலெலெங், குஸ்தி பன்ஜி சக்தி (I Gusti Anglurah Panji Sakti) என்பவரால் ஓர் இராச்சியமாக நிறுவப்பட்டது. அவர் 1660-கி.பி. 1700-ஆம் ஆண்டுகளில் ஆட்சி செய்தார். புலெலெங்கின் அதிகாரத்தை கிழக்கு ஜாவாவில் உள்ள பிளாம்பங்கான் வரை விரிவுபடுத்திய ஒரு வீர மூதாதையராக அவர் நினைவு கூரப்படுகிறார்.[6] இந்த இராச்சியம் அவரின் வாரிசுகளின் ஆட்சியின்போது பலகீனம் அடைந்தது. 18-ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் அண்டை இராச்சியமான கராங்கசெம் இராச்சியத்தின் ஆதிக்கத்தின் கீழ் வந்தது.[6] பின்னர் 1806–1849 ஆம் ஆண்டு வரையில் கராங்கசெம் மரபுவழியின் ஒரு தன்னாட்சிப் பகுதியாகவும் வழிநடத்தப்பட்டது. இடச்சு ஆதிக்கம்இடச்சுக்காரர்கள் 1846, 1848-ஆம் ஆண்டுகளில் புலெலெங்கைத் தாக்கி, கடைசியாக 1849 ஆம் ஆண்டில் தோற்கடித்தனர். புலெலெங் இடச்சு காலனித்துவ அமைப்பில் இணைக்கப்பட்டு 1882-இல் அதன் தன்னாட்சியை இழந்தது. 1929-ஆம் ஆண்டில், குஸ்தி பஞ்சி சக்தியின் வழித்தோன்றலான புகழ்பெற்ற அறிஞர் குஸ்தி புட்டு ஜெலாண்டிக் (Gusti Putu Jelantik) என்பவர், இடச்சுக்காரர்களால் ஆட்சியாளராக நியமிக்கப்பட்டார்.[6] இந்தோனேசியாவின் சப்பானிய ஆக்கிரமிப்பின் போது குஸ்தி புட்டு ஜெலாண்டிக் 1944-இல் காலமானார். அவரின் மகன் அனாக் அகோங் நியோமன் பஞ்சி திஸ்னா பொறுப்பு ஏற்றார். அனாக் அகோங் நியோமன் பாலியில் நன்கு அறியப்பட்ட நாவலாசிரியர் ஆவார். 1947-ஆம் ஆண்டில் அவர், தன் தம்பி அனாக் அகோங் நுகுரா கெடுட் ஜெலாண்டிக் என்பவரிடம் அரியணையை ஒப்படைத்தார்.[6] அனாக் அகோங் நுகுரா கெடுட் 1950 வரை ஆட்சி செய்தார். 1949-50 ஆம் ஆண்டில், பாலியின் மற்ற பகுதிகளைப் போலவே புலெலெங்கும், இந்தோனேசியாவின் ஒற்றையாட்சிக் குடியரசில் இணைக்கப்பட்டது.[6] நிர்வாக மாவட்டங்கள்புலெலெங் பிராந்தியம் 9 மாவட்டங்களாக (Districts of Indonesia) (Kecamatan) பிரிக்கப்பட்டுள்ளது.
காலநிலைபுலெலெங் பிராந்தியம் வெப்பமண்டல மழைக்காடு காலநிலை (Af) கொண்டது. ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை மிதமான மழைப்பொழிவும், அக்டோபர் முதல் மார்ச் வரை அதிக மழைப்பொழிவும் இருக்கும். காட்சியகம்
மேலும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia