ரோகித் சர்மா
ரோகித் குருநாத் சர்மா (Rohit Gurunath Sharma; பிறப்பு: ஏப்ரல் 30, 1987) இந்தியத் துடுப்பாட்ட அணி வீரர் ஆவார். இவர் வலது கை மட்டையாளர், அவ்வப்போது வலது கை புறத்திருப்ப பந்து வீச்சாளர் ஆவார். தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள், இருபது20 சர்வதேச போட்டிகளின் அணித் தலைவராக உள்ளார். மும்பை மாநில அணிக்காக உள்ளூர்ப் போட்டிகளிலும், இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணித் தலைவராகவும் விளையாடி வருகிறார். வாழ்க்கைரோகித் சர்மா ஏப்ரல் 30, 1987இல் பன்சோத், நாக்பூர், மகாராட்டிரத்தில் பிறந்தார். இவரின் தாய் பூர்ணிமா சர்மா விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர்.[1] இவரின் தந்தை குருனாத் சர்மா. தனது தந்தையின் வருமானம் குறைவாக இருந்ததினால், ரோகித் சர்மா, தனது தாத்தா- பாட்டி மற்றும் மாமாவுடன் போரிவலியில் வாழ்ந்து வந்தார்.[2] இவரது பெற்றோர்கள் டோம்பிவலியில்[3] ஒரு அறை மட்டும் உள்ள சிறிய வீட்டில் வசித்து வந்தனர். தனது விடுமுறையின் போது பெற்றோரைக் காணச் செல்வார். இவருக்கு விசால் சர்மா எனும் இளைய சகோதரர் உள்ளார்.[3] தனது இருபதாம் வயதில் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடத் துவங்கினார். சூன் 23, 2007ஆம் ஆண்டில் அயர்லாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார். 2013ஆம் ஆண்டிலிருந்து துவக்க வீரராக நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். நவம்பர் 2013ஆம் ஆண்டில் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிராக நடைபெற்ற தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார். அந்தத் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் நூறு ஓட்டங்கள் அடித்தார். கொல்கத்தா, ஈடன் கார்டன்ஸ் அரங்கத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் 177 ஓட்டங்களும், வான்கேடே அரங்கத்தில் நடைபெற்ற இரண்டாவது துடுப்பாட்டப் போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 111* ஓட்டங்கள் எடுத்தார்.[4][5] தனது முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடுவதற்கு முன்பாக 108 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.[6] கொல்கத்தா, ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நவம்பர் 13, 2014ஆம் ஆண்டில் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் 264 ஓட்டங்கள் எடுத்தார். இதன்மூலம் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் எடுததவர் எனும் சாதனையைப் படைத்தார். தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான பன்னாட்டு இருபது20 போட்டியில் 106 ஓட்டங்கள் எடுத்தார். இதன் மூலம் தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம், பன்னாட்டு இருபது20 ஆகிய மூன்று வடிவங்களிலும் நூறு ஓட்டங்கள் அடித்த இரண்டாவது இந்திய அணி வீரர் எனும் சாதனையைப் படைத்தார். இவரின் தலைமையின் கீழ் மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்து முறை கோப்பை வென்றுள்ளது. 2015ஆம் ஆண்டின் ஃபோர்ப்ஸின் கருத்துக்கணிப்பின் படி 100 பிரபலமானவர்கள் பட்டியலில் புகழின் அடிப்படையில் 8 ஆவது இடமும் , வருமானத்தில் 46 ஆவது இடத்திலும் மொத்தமாக 12 ஆவது இடத்திலும் உள்ளார்.[7] 2017ஆம் ஆண்டில் டிசம்பரில், இலங்கைக்கு எதிரான தொடரில் இந்தியாவின் கேப்டன் விராட் கோலி ஓய்வு பெற்றார். அவருக்குப் பதிலாக, சர்மா தனது தொழில் வாழ்க்கையில் முதல்முறையாக இந்திய அணித் தலைவராக நியமிக்கப்பட்டார், மேலும் அவரது தலைமையில் இந்தியா தொடரை 2–1 என்ற கணக்கில் வென்றது, ஜூன் 2016 ஆண்டில் சிம்பாப்வே துடுப்பாட்ட அணியை தோற்கடித்த பின்னர் தொடர்ச்சியாக எட்டாவது தொடர் வெற்றியாக இருந்தது. ஜனவரி 12, 2019 அன்று, சிட்னி துடுப்பாட்ட அரங்கத்தில் ஆஸ்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில், சர்மா 133 ஓட்டங்கள் எடுத்தார், ஆனால் அந்தப் போட்டியில் இந்திய அணி 34 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இது ஒருநாள் சர்வதேச போட்டிகளில் அவரது 22 வது சதம் ஆகும். 13 மார்ச், 2019 அன்று டெல்லியில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு வீட்டுத் தொடரின் ஐந்தாவது மற்றும் இறுதி ஆட்டத்தில், சர்மா ஒருநாள் சர்வதேச போட்டிகளில் தனது 8,000 வது ஓட்டங்கள் உட்பட 56 ஓட்டங்கள் எடுத்தார். இது அவரது 200 வது ஆட்டப் பகுதி ஆகும். அக்டோபர் 2019 இல், தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான மூன்றாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், சர்மா தனது 2000 வது ஓட்டத்தினையும், தேர்வுப் போட்டியில் தனது முதல் இரு நூறு ஓட்டங்களையும் அடித்தார். போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 212 ஓட்டங்கள் எடுத்தார். மேலும் புகழ்பெற்ற பேட்ஸ்மேன் டான் பிராட்மேனின் 71 ஆண்டு கால சாதனையான சொந்த நாட்டில் நடைபெறும் தேர்வு துடுப்பாட்டத்தில் அதிகபட்ச சராசரி 98.24 சாதனையை முறியடித்து புதிய சாதனை (99.84 ) படைத்தார். ரோகித் சர்மா இந்த தேர்வு தொடரில் ஒரு போட்டியில் அதிக ஆறுகள் அடித்த சிம்ரான் எட்மயர் சாதனையை முறியடித்தார். சர்மாவுக்கு சுவிஸ் வாட்ச்மேக்கர் ஹூப்லாட் மற்றும் சியாட் உள்ளிட்ட பல நிறுவனங்கள் விளம்பர நிதியுதவி செய்துள்ளன. 11 ஆண்டுகளாக தனது தொழில் வாழ்க்கையில், சர்மா மேகி, ஃபேர் அண்ட் லவ்லி, லேஸ், நிசான், எனர்ஜி பானம் ரிலென்ட்லெஸ், நாசிவியன் நாசி ஸ்ப்ரே, விஐபி இண்டஸ்ட்ரீஸ், அடிடாஸ், ஒப்போ மொபைல்கள் ஆகியவற்றின் அரிஸ்டோக்ராட் உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கு வடிவழகராக இருந்துள்ளார். துடுப்பாட்ட உலகக் கிண்ணநகளில் வழக்கைமார்ச் 2015 ஆண்டில், சர்மா துடுப்பாட்ட உலகக் கோப்பையில் முதல் முறையாக அறிமுகமானார் மற்றும் ஆத்திரேலியாவில் 2015 போட்டிகளில் இந்தியாவுக்காக எட்டு போட்டிகளில் விளையாடினார். ஆத்திரேலியாவால் தோற்கடிக்கப்பட்ட அரையிறுதி ஆட்டம் வரை இந்தியா சென்றது. சர்மா ஒரு சதத்துடன் 330 ஓட்டங்கள் எடுத்தார், வங்காளதேசத்திற்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் 137 ஓட்டங்கள் எடுத்தார். ஏப்ரல் 2019 ஆண்டில் துடுப்பாட்ட உலகக் கிண்னத் துடுப்பாட்டத் தொடரில் இந்திய அணியின் துணைத் தலைவராக இவர் அறிவிக்கப்பட்டார்.[8][9] இந்திய அணியின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் 144 பந்துகளில் 122 ஓட்டங்கள் எடுத்தார். அதே போட்டியில் ஒட்டுமொத்தமாக துடுப்பாட்டத்தில் 12000 ஓட்டங்கள் என்ற இலக்கை அடைந்தார். சூலை 6இல் நடைபெற்ற போட்டியில் நூறு ஓட்டங்கள் எடுத்ததன் மூலமாக ஒரே உலகக் கிண்னத் துடுப்பாட்டத் தொடரில் ஐந்து நூறுகள் அடித்த வீரர் எனும் உலக சாதனை படைத்தார்.[10] மேலும் ஒட்டுமொட்டத்தமாக உலக கிண்னத்தில் அதிக நூறுகள் அடித்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை இவர் சமன் செய்தார்.[11] துடுப்பாட்ட சாதனைகள்
பெற்ற விருதுகள்![]() 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் ஈஎஸ்பிஎன் சிறந்த ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட வீரர் விருதினைப் பெற்றுள்ளார்.[17] 2015 ஆம் ஆண்டின் ஈஎஸ்பிஎன் சிறந்த பன்னாட்டு இருபது20 மட்டையாளார் விருதினைப் பெற்றார்.[18] மேலும் இதே ஆண்டில் இந்திய அரசு இவருக்கு அர்ஜுனா விருது வழங்கியது.[19] மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia