அம்பாறை மாவட்டம்இலங்கையின் 25 மாவட்டங்களில் ஒன்றாகும். இது கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ளது. அம்பாறை நகரம் இதன் தலைநகரமாகும். இந்நகரம் இலங்கைத் தலைநகரமான கொழும்பிலிருந்து 320 கிலோமீற்றார் தூரத்தில் அமைந்துள்ளது. முஸ்லிம்கள், தமிழர், சிங்களவர், ஆகிய மூவினத்தவரும் இந்நகரத்தில் வசிக்கின்றனர். அம்பாறை மாவட்டம், கல்முனை, சம்மாந்துறை, பொத்துவில், அம்பாறை ஆகிய நான்கு நாடாளுமன்ற தொகுதிகளைக் கொண்டுள்ளது. இது 504 கிராமசேவகர் பிரிவுகளையும் 19 பிரதேச செயலர் பிரிவுகளையும் கொண்டுள்ளது.
அம்பாறை மாவட்ட மொத்தச் சனத்தொகையில் முஸ்லிம்கள் 44.0 வீதம், சிங்களவர்கள் 37.5 வீதம், இலங்கைத் தமிழர்கள் 18.3 வீதம், ஏனையோர் 0.2 வீதமாகவும் உள்ளனர்.
வரலாற்றுக்காலத்தில் அம்பாறை மாவட்டம், உரோகணப் பகுதியுடன் இணைந்து காணப்பட்டது. இங்கு அமைந்திருந்த தீர்த்தவாவி (இன்று திகவாவி) அல்லது நாக்கை எனும் விகாரம், தமிழ் - சிங்கள பௌத்தர் போற்றிய பழம்பெரும் வழிபாட்டுத்தலமாகும். பத்தாம் நூற்றாண்டுக்குப் பின், இன்றைய அம்பாறை மாவட்டத்தின் கரையோரப்பகுதியில் உருவாகிய முக்குவர் வன்னிமைகள், மட்டக்களப்புத் தேசத்தின் நிர்வாகத்தில் முக்கிய பங்காற்றின. இன்றைய சம்மாந்துறையே அன்றைய மட்டக்களப்புத் தேசத்தின் தலைநகராக விளங்கியது. திருக்கோவில் முருகன் கோயில், கிழக்கின் தேசத்துக்கோவில்களில் முதன்மையானதாக திகழ்ந்தது. கண்டியின் செனரத் மன்னன் காலத்தில் குடியேற்றப்பட்டதாகச் சொல்லப்படும் சோனகர், இன்றைய அம்பாறை மாவட்டத்திலேயே குடியேறினர். பதினாறாம் நூற்றாண்டில், இன்றைய தமணை, உகணை, இறக்காமப் பகுதிகளில் சீதாவாக்கை நாட்டிலிருந்து சிங்களவர் குடியேறியதை நாடு காட்டுப் பரவணிக் கல்வெட்டு விவரிக்கின்றது.
1961 ஆம் ஆண்டு வரை இன்றைய மட்டு - அம்பாறை மாவட்டங்கள், ஒரே மாவட்டமாகவே இணைந்து காணப்பட்டன. சுதந்திரத்தின் பின், தென்கிழக்கிலங்கையின் விவசாய உற்பத்தியை அதிகரிக்க, கல்லோயாத் திட்டம், இலங்கை அரசால் முன்மொழியப்பட்டது. 1949இல் ஆரம்பித்த அத்திட்டம், 1953இல் முடிவடையும் வரை, பெருமளவான சிங்களக் குடியேற்றம், தென்மட்டக்களப்புப் பகுதியில் ஏற்பட்டது.[1] 1959 தேர்தல்தொகுதி மீள்நிர்ணயப் பரிந்துரைகளின் கீழ், பழைய நாடுகாட்டுப் பகுதியில், 19.03.1960 அன்று, "அம்பாறை" எனும் புதிய தேர்தல் மாவட்டம் உருவானது. எனவே, 1960இன் இறுதியில், மட்டக்களப்பின் தென்பகுதியில், பொத்துவில், கல்முனை, நிந்தவூர், அம்பாறை எனும் நான்கு தேர்தல் மாவட்டங்கள் அமைந்திருந்தன.
10.04.1961 அன்று இந்நான்கு தேர்தல் மாவட்டங்களையும் ஒன்றிணைத்து, புதிய நிர்வாக மாவட்டமொன்றை இலங்கை அரசு பிரகடனம் செய்தது. இதன்மூலம், பாரம்பரியமிக்க தமிழர் தாயகமான மட்டக்களப்புத் தேசம், மட்டக்களப்பு, அம்பாறை எனும் இரு மாவட்டங்களாகத் துண்டாடப்பட்டது.[2][3] 1978 இலங்கைச் சட்டத் திருத்தத்துக்கு அமைய, இந்த நான்கு ஓரங்கத்தவர் தேர்தல் மாவட்டங்களும் அகற்றப்பட்டு, பல்லங்கத்தவர் தெரிவாகும் "திகாமடுல்ல" தேர்தல் மாவட்டமும் உருவாக்கப்பட்டது.[4] பதுளைக்குரிய "தெகியத்த கண்டி" பிரதேசமும் பிற்காலத்தில், அதனுடன் இணைக்கப்பட்டு, இன்றைய அம்பாறை மாவட்டம் முழுமை பெற்றது.
2012 குடித்தொகைக்கணக்கெடுப்பின் படி, அம்பாறை மாவட்டத்தின் குடித்தொகை 648,057 ஆகும்.[6] இனம் மற்றும் சமய ரீதியில் பன்மைத்துவம் கொண்ட இலங்கையின் குறிப்பிடத்தக்க மாவட்டங்களில் அம்பாறையும் ஒன்றாகும். இலங்கையின் ஏனைய வட-கீழ் மாவட்டங்கள் போலவே, அம்பாறை மாவட்டமும், [[உள்நாட்டு யுத்தத்தால் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்ட ஒன்றாகும். இம்மாவட்டத்தில் சுமார் ஒரு இலட்சம் மக்கள் போரில் மாண்டுபோயுள்ளனர்.[7] இலட்சக்கணக்கான தமிழர் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர். போரால் பாதிக்கப்பட்ட தமிழ், சிங்கள, முஸ்லீம் மக்கள் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றுள்ளதுடன், யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர், தற்போது மீள்குடியமர ஆரம்பித்துள்ளனர்.
1963 முதல் 2012 வரை அம்பாறை மாவட்டத்தின் குடித்தொகை விவரம்[6][8]