அகத்தியர் (Agastya) என்பவர் தமிழி என்ற தமிழ்ச் சித்தர்களில் முதன்மையானவராகவும், சப்த ரிஷிகளில் ஒருவராகவும் அறியப்படுகிறார். சிவபெருமானின் திருமணத்தினைக் காண அனைவரும் வடதிசைக்கு வந்தமையால் வட திசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது. இச்சூழலில் இவர் தென்திசைக்குப் பயணப்பட்டு அதைச் சமன்செய்ததாகவும், சிவசக்தி திருமணத்தினைத் தமிழகத்திலிருந்து கண்டவராகவும், தமிழைச் சிவபெருமானிடமிருந்து கற்று உணர்ந்து மற்றவருக்கும் போதித்த ஆசானாகவும் திகழ்ந்தார்.[1] இவரே அகத்தியம் எனும் தமிழ் மொழிக்கான முதல் இலக்கண நூலை இயம்பியவர் எனப்படுகிறார். இவரின் நூல்களைப் பல்வேறு தமிழ் ஆர்வலர்களும் காண்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அகத்தியம் பற்றிய யாதொரு குறிப்பும் தொல்காப்பியத்தில் எங்கும் குறிக்கப் பெறவில்லை.
ரிக் வேதத்தில்
அகத்தியன் மித்திர வருணரின் மகனும், வசிட்டரின் சகோதரரும் ஆவார். அகத்தியர் ரிக் வேதத்தில் 26 சூக்தங்களை இயற்றியவர். இவருடைய மனைவியின் பெயர் லோபாமுத்திரை. இவர் தினை மாவு, பயனளிக்கும் தானியங்கள், விசம் தோய்ந்த அம்புகள், தர்ப்பைப் புல் ஆகியவைகள் பற்றிக் கூறியுள்ளார் (ரிக்வேதம் 1-189-10; 1-191-30)
இராமாயண காவியத்தில்
இராமாயணக் காப்பியத்தில், இராமன் வனவாச காலத்தில், அகத்தியர் சந்தித்து மந்திர பலமிக்க ஆயுதங்களை அருளினார்.
அகத்தியர், இந்துக் கடவுள்களைப் போல் தீயவர்களை அடக்கினார்.
கடலெல்லாம் உண்டு அவர்கள் பின்னர் உமிழ்க என்றலும் உமிழ்ந்தான் - 37
வாதாபிதன் வன்மைக் காயம் இனிது உண்டு அலகின் ஆரிடர் களைந்தான் - 38
விந்தம் எனும் விண் தோய் நாகம் அது நாகம் உற, நாகம் என நின்றான். 39
வடாது திசை மேல்நாள் நீசம் உற, வானின் நெடு மா மலயம் நேரா, ஈசன் நிகர் ஆய், உலகு சீர் பெற இருந்தான். 40
குண்டிகையினில், பொரு இல், காவிரி கொணர்ந்தான். 46
முப்புரம் எரித்த தனி மொய்க் கணையும், நல்கினான். 56
சிறப்புப் பெயர்கள்
தமிழ் முனிவர் (தமிழ் இலக்கணம் அருளியதால்)
மாதவ முனிவர் (அதிக தவம் செய்ததால்)
மாமுனி (பெரிய முனிவர் என்ற பொருளில்)
குருமுனி (முனிவர்களுக்கெல்லாம் குருவானவர்)
திருமுனி (உயர்வுக்குரியவர்)
முதல் சித்தர் (18 சித்தர்களில் முதன்மையானவர்)
பொதியில் முனிவன் (பொதிகை மலையில் வாழ்ந்தவர்)
சாம்பமுனி
அமரமுனிவர் (இன்றுவரை பேசப்படும் முனிவர் என்ற பொருளில்)
பொதியவரை முனிவன் (பொதிகைமலை)
குடமுனி (குடத்தில் பிறந்தவர்)
சித்த மருத்துவனாம் அகத்தியன்
அகத்திய முனிவர் தமிழுக்கான முனிவர் என்றும், சித்த மருத்துவமுறைகளை வழங்கிய முனிவர் என்றும் குறிப்பிடப்படுகிறார். இவரது பாடல்களில் பயின்றுவந்துள்ள சொற்கள் இவரை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவர் என்பதைத் தெரிவிக்கின்றன.
வரலாறு
சித்தராய் விளங்கிய அகத்தியனைப் பற்றிய "அகத்தியன் காவியம் பன்னிரண்டாயிரம்" வாயிலாகச் சில கருத்துகளை மட்டுமே தெரிந்து கொள்ள முடிகிறது. அகத்தியன் அனந்தசயனம் என்ற திருவனந்தபுரத்தில் சமாதியடைந்ததாகக் கூறப்படுகிறது. ஒரு சிலர் அவர் கும்பகோணத்தில் உள்ள கும்பேசுவரர் கோவிலில் சமாதி கொண்டிருப்பதாகக் கூறுகின்றனர்.
அகத்தியன் தூங்கெயிலெறிந்த தொடித்தோட் செம்பியன் காலத்தில் காவிரிப் பூம்பட்டிணத்தில் இந்திர விழாவை எடுப்பித்தவர் ஆவார்.
புதுச்சேரிக்கு அருகிலுள்ள ‘உழவர் கரை’ என்ற இடத்தில் ஆசிரமம் அமைத்து வேதபுரி பல்கலைக்கழகத்தில் தமிழைப் போதித்தார். எனவே அவர் தங்கியிருந்த பகுதி ‘அகத்தீஸ்வரம்’ என்று அழைக்கப்பட்டு அங்குப் பெரிய சிவாலயம் கட்டப்பட்டது. அதனை அகத்தீஸ்வரமுடையார் ஆலயம் என்றும் அழைக்கின்றனர்.
அகத்தியனின் சிறப்புகள்
அகத்தியர்
அகத்தியன் தோற்றம் பற்றியும் சிறப்புச் செயல்கள் பற்றியும் பல கதைகள் உள்ளன.
தாரகன் முதலிய அரக்கர்கள் உலகை வருத்த, அவர்களை அழிக்க இந்திரன், வாயு, அக்கினி ஆகியோர் பூமிக்கு வந்தனர். இவர்களைக் கண்ட அசுரர்களோ கடலுக்குள் ஒளிந்தனர். இந்திரனின் யோசனைப்படி அக்கினி வாயுவுடன் கூடி பூமியில் விழுந்து அகத்தியனாய் அவதரித்தார் என்றும், மிர்திரர் குடத்திலிட்ட வீரியத்திலிருந்து அகத்தியனும், வருணன் தண்ணீரிலிட்ட வீரியத்திலிருந்து வசிஷ்டரும் அவதரித்தனர் என்றும் பலவாறான கருத்துகள் நிலவுகின்றன. குடத்திலிருந்து தோன்றியமையால் அகத்தியன் குடமுனி, கும்பயோகி என்னும் பெயர்களைப் பெற்றார் எனக் கூறப்படுகிறது. இவ்வாறு பிறவி பெற்ற அகத்தியன், இந்திரன் வேண்டுகோளுக்கிணங்க சமுத்திர நீர் முழுவதையும் குடித்துவிட, இந்திரன் அசுரர்களை அழித்தார். அதன்பின் நீரை மீண்டும் கடலுள் விடுவித்தார் அகத்தியன்.
அகத்தியன் நீரின் மேல் படுத்தபடியே பன்னிரண்டாண்டுகள் கடுந்தவமியற்றி அரிய சக்திகளைப் (ஆற்றல்களைப்) பெற்றார்.
அகத்தியன் தம் முன்னோர்களுக்காக விதர்ப்ப நாட்டை அடைந்து அவ்வரசன் மகள் உலோபமுத்திரையை மணந்து தென்புலத்தார் கடனைத் தீர்த்தார்.
கைலையில் நடந்த சிவபெருமான் திருமணத்தின் போது வடதிசை தாழ்ந்து தென்திசை உயர, அகத்தியனைத் தென்திசைக்குச் செல்லுமாறு சிவபெருமான் கட்டளையிட்டார். இதனால் தெற்கே மேருமலை நோக்கிப் பயணித்தார் அகத்தியன். மேருமலைக்குச் செல்ல வழிவிடாமல் நின்ற விந்தியமலை, அகத்தியனைக் கண்டதும் பணிந்து தாழ்ந்து நின்றது. தான் தென்திசை சென்று வரும் வரையில் பணிந்து இருப்பாயாக என்று அதனிடம் கூறிச் சென்ற அகத்தியன், மீண்டும் வடதிசை செல்லாதிருந்தார். ஆதலால் விந்திய மலையும் அதன் பின் உயரவில்லை எனக் கூறப்படுகிறது.
தென் திசைக்கு வந்த அகத்தியன், பொதிகை மலையில் தங்கி முருகக் கடவுளின் ஆணைப்படி அகத்தியம் என்னும் நூலை இயற்றினார்.
இராமபிரானுக்குச் சிவகீதையைப் போதித்தவர் அகத்தியர்
சிவபூசை செய்வதற்காகக் கமண்டலத்தில் அகத்தியர் கொண்டு வந்த கங்கை நீரை விநாயகர் காகமாக உருக்கொண்டு சாய்த்துவிட கமண்டலத்திலிருந்து வழிந்து ஓடிய நீரே காவிரி ஆறு ஆனது.
இலங்கை மன்னர் இராவணனை தம் இசைத் திறத்தால் வென்றார் அகத்தியன்.
அகத்தியன், இந்திரன் சபைக்குச் சென்றபோது இந்திரன் ஊர்வசியை நடனமாட செய்தான். ஊர்வசி இந்திரன் மகன் சயந்தனிடம் கொண்ட காதலால் தன்னிலை மறந்தாள். அதனால் அகத்தியன் சயந்தனையும் ஊர்வசியையும் பூமியில் பிறக்கும்படி சபித்தார்.
வாதாபி, வில்வளவன் என்னும் அரக்கர் இருவரில் வில்வளவன் வேதியர் உருக்கொண்டு வழியில் செல்லும் வேதியர், முனிவர் முதலானோரை விருந்திற்கு அழைத்து வாதாபியைக் கறியாய்ச் சமைத்துப் படைத்து, வாதாபியைத் திரும்ப அழைக்க; அவன் அவர்கள் வயிற்றைக் கிழித்து வெளியே வருவதால் அவர்கள் இறந்து போவார்கள். முனிவர்கள் இதனை அகத்தியனிடம் முறையிடவே, அகத்தியன் அவர்களிடம் விருந்து உண்ண சென்றார். வில்வளவன் உணவு படைத்துவிட்டு அகத்தியன் வயிற்றிலிருக்கும் வாதாபியைக் கூப்பிட அகத்தியன் “வாதாபே ஜீர்ணோ பவ” என்று வயிற்றைத் தடவ வாதாபி இறந்தான். நிலமையை அறிந்த வில்வளவன் அகத்தியனிடம் மன்னிப்புக் கோரினான்.
இவை போல் அகத்தியனைக் குறித்துப் புராணங்களில் உள்ள கதைகள் பற்பல.
அகத்தியரின் மாணவர் கல்வி
அதங்கோட்டு ஆசான்
துராலிங்கன்
செம்பூண்சேய்
வையாபிகன்
வாய்ப்பிகன்
பனம்பாரன்
கழாரம்பமன்
அநவிநயன்
பெரிய காக்கைபாடினி
நத்தத்தன்
சிகண்டி
தொல்காப்பியன்
ஆகிய 12 பேரும் அகத்தியனின் மாணவர் ஆவர் இவர்கள் 12 பேரும் சேர்ந்து "பன்னிரு படலம்" என்னும் நூலை எழுதினார்கள் இந்தச் செய்தியைப் புறப்பொருள்வெண்பாமாலை குறிப்பிடுகிறது.
சித்த வைத்தியம்
அகத்தியன் சித்த வைத்தியத்திற்குச் செய்த பணி சிறப்பானது. பல நோய்களுக்கும் மருத்துவ சந்தேகங்களுக்கும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளார். அகத்தியன் பெயரில் வெளியாகியுள்ள சமரச நிலை ஞானம் என்னும் நூலில் உடம்பில் உள்ள முக்கியமான நரம்பு முடிச்சுகள் பற்றிய விளக்கம் காணப்படுகிறது. அகத்தியர் ஐந்து சாஸ்திரங்கள் என்னும் நூலில், பதினெட்டு வகையான மனநோய் பற்றியும் அதற்குரிய மருத்துவம் பற்றியும் விளக்கப் பட்டிருக்கின்றன. அகத்தியன் அஷ்ட மாசத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் தோசங்கள் பற்றிக் கூறியுள்ளார்.
அகத்தியன் எழுதிய நூலகளின் பட்டியல் தனிக்கட்டுரை: அகத்திய நூல்கள்
அகத்தியன் எழுதிய நூல்களில் கிடைத்தவை:
அகத்திய வெண்பா
அகத்திய வைத்தியக் கொம்மி
அகத்திய வைத்திய ரத்னாகரம்
அகத்திய வைத்தியக் கண்ணாடி
அகத்திய வைத்தியம் 1500
அகத்திய வைத்திய சிந்தாமணி
அகத்திய கர்ப்பசூத்திரம்
அகத்திய ஆயுள் வேத பாஷ்யம்
அகத்திய வைத்தியம் 4600
அகத்திய செந்தூரம் 300
அகத்திய மணி 4000
அகத்திய வைத்திய நூல் பெருந்திரட்டு
அகத்திய பஸ்மம் 200
அகத்திய நாடி சாஸ்திரம்
அகத்திய பக்ஷணி
அகத்திய கரிசில் பஸ்யம் 200
சிவசாலம்
சக்தி சாலம்
சண்முக சாலம்
ஆறெழுத்தந்தாதி
காம வியாபகம்
விதி நூண் மூவகை காண்டம்
அகத்திய பூசாவிதி
அகத்திய சூத்திரம் 30
போன்ற நூல்களை இவர் எழுதியதாகக் கூறப்படுகிறது.
மேலும்
அகத்திய ஞானம் என்னும் அகத்தியம் என்னும் ஐந்திலக்கணம்
அகத்திய சம்ஹிதை என்னும் வடமொழி வைத்திய நூலும் இவரால் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அகத்தியப் பெருமானின் பூசை முறை
தேகசுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்சள் இட்டு மெழுகி, பக்தியுடன் கோலமிட்டு, அம்மஞ்சள் பலகையின் மேல் சுவாமிகளின் படத்தை வைத்து, அதற்கு முன்பு மஞ்சள், குங்குமத் திலகமிட்டு அலங்கரிக்கப்பட்ட குத்துவிளக்கில் இரு முக தீபம் ஏற்றி வைக்க வேண்டும். படத்தின் முன்பாகப் பித்தளை அல்லது செம்பு அல்லது வெள்ளியினால் செய்யப்பட்ட உருண்டையான செம்பில் சுத்தமான தண்ணீரை நிரப்பி வைக்க வேண்டும்.
பின் பின்வரும் சித்தரின் தியானச் செய்யுளைக் கண்மூடி மனதார கூற வேண்டும்
தியானச் செய்யுள்
ஐந்திலக்கணம் தந்த அகத்தியரே
சித்த வேட்கை கொண்ட சிவ யோகியே
கடலுண்ட காருண்யரே
கும்பமுனி குருவே சரணம் சரணம்
பிறகு பின்வரும் பதினாறு போற்றிகளைச் சொல்லி வில்வம், துளசி, கதிர்பச்சை, விபூதி பச்சை போன்ற பச்சிலைகளைக் கொண்டு அர்ச்சிக்க வேண்டும்.
இன்னல்கள் போக்கி இன்பம் தரும் அகத்திய பெருமானே போற்றி! போற்றி!
நிவேதனம்
இளம் பச்சை நிற வஸ்திரம் அணிவித்துப், பஞ்சாமிர்தம், பழங்கள், சர்க்கரைப் பொங்கல், இளநீர் போன்றவற்றுடன் புதன்கிழமை பூசை செய்யவும். நிறைவாக “ஓம் ஸ்ரீம் அகத்திய முனிவரே போற்றி!” என்று 108 முறை மன ஒருமையுடன் சொல்லி ஆராதனை செய்ய வேண்டும்.