இந்தியப் போட்டி ஆணையம் (Competition Commission of India (சுருக்கமாக:CCI), இந்திய அரசின் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு சட்டபூர்வ ஒழுங்கு முறை ஆணையம் ஆகும்.மேலும் பெருநிறுவனங்களுக்கு இடையே போட்டியை ஊக்குவிப்பதற்கும், இந்தியாவில் போட்டியின் மீது குறிப்பிடத்தக்க பாதகமான விளைவை ஏற்படுத்தும் செயல்பாடுகளைத் தடுப்பதற்கும் இந்தியப் போட்டிச் சட்டம், 2002 நடைமுறைபடுத்துவதற்கும் பொறுப்பாகும். 2022 இந்தியப் போட்டிச் சட்டத்தின் மீது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தினால், அது தொடர்பான வழக்குகளை ஆராய்ந்து விசாரணை செய்கிறது. நிறுவனங்கள் வணிகச் சந்தையில் முந்தாமல் இருக்க, போட்டிச் சட்டத்தின் கீழ் இரண்டு நிறுவனங்கள் இணைவதை போட்டி ஆணையம் அங்கீகரிக்கிறது.[1]
இந்தியப் போட்டி ஆணையம் 14 அக்டோபர் 2003 அன்று புது தில்லியில் நிறுவப்பட்டது. இருப்பினும் மே 2009ல் தர்மேந்திர குமார் தலைமையில் முழு அளவில் செயல்பாட்டிற்கு வந்ததது. [2][3] இந்தியப் போட்டி ஆணையத்தின் நடப்பு தலைவர் ரவ்நீத் சிங் இஆப ஆவார். இதன் செயலாளர் இந்தர் பால் சிங் இவப ஆவார்.
இந்தியப் போட்டிச் சட்டம், 2002
அடல் பிகாரி வாச்பாய் தலைமையிலான இந்திய அரசால் இந்தியப் போட்டிச் சட்டம், 2002 இயற்றப்பட்டது.
2007ஆம் ஆண்டில் மன்மோகன் சிங் தலைமையிலான அரசால் 2007ஆம் ஆண்டில் இந்தியப் போட்டி (திருத்தம்) சட்டம் இயற்றப்பட்டது.[4] இச்சட்டம் போட்டி எதிர்ப்பு ஒப்பந்தங்கள், நிறுவனங்களால் ஆதிக்க நிலையை தவறான வழியில் செல்வதை தடைசெய்கிறது மற்றும் இந்தியாவிற்குள் போட்டியின் மீது குறிப்பிடத்தக்க பாதகமான விளைவை ஏற்படுத்தும் அல்லது ஏற்படுத்தக்கூடிய சேர்க்கைகளை (கையகப்படுத்துதல், கட்டுப்பாட்டைப் பெறுதல் மற்றும் இணைப்பு மற்றும் கையகப்படுத்துதல்) ஒழுங்குபடுத்துகிறது.
போட்டி சட்டத்தின் நோக்கங்கள்
போட்டிச் சட்டத்தின் முக்கிய நோக்கம், நுகர்வோர் விருப்பங்களுக்கு ஏற்ப சந்தையை உருவாக்குவதற்கு உதவும் ஒரு வழிமுறையாக போட்டியைப் பயன்படுத்தி பொருளாதார செயல்திறனை மேம்படுத்துவதாகும். சரியான போட்டியின் நன்மைகள்: வளங்களின் பயனுள்ள ஒதுக்கீட்டை உறுதி செய்யும் ஒதுக்கீடு திறன், உற்பத்தி திறன், உற்பத்தி செலவுகள் குறைந்தபட்சமாக வைக்கப்படுவதை உறுதி செய்யும் மற்றும் புதுமையான நடைமுறைகளை ஊக்குவித்தல் ஆகும்.[4]
ஆணையத்தின் கடமைகள்
சந்தைப் போட்டியின் மீது பாதகமான விளைவை ஏற்படுத்தும் நடைமுறைகளை அகற்றுவது, போட்டியை ஊக்குவிப்பது மற்றும் நிலைநிறுத்துவது, நுகர்வோரின் நலன்களைப் பாதுகாப்பது மற்றும் இந்தியச் சந்தைகளில் வர்த்தக சுதந்திரத்தை உறுதி செய்வது இந்தியப் போட்டி ஆணையத்தின் கடமையாகும். எந்தவொரு சட்டத்தின் கீழும் நிறுவப்பட்ட ஒரு சட்டப்பூர்வ அதிகாரியிடமிருந்து பெறப்பட்ட பரிந்துரையின் பேரில், போட்டிப் பிரச்சினைகள் குறித்து ஒரு கருத்தை வழங்கவும், போட்டி ஆதரவை மேற்கொள்ளவும், பொது விழிப்புணர்வை ஏற்படுத்தவும், போட்டிப் பிரச்சினைகள் குறித்து பயிற்சி அளிக்கவும் ஆணையம் கடமைப்பட்டுள்ளது.[4]
அமைப்பு
இச்சட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்ற அக்டோபர் 14, 2003 அன்று இந்திய அரசால் நிறுவப்பப்பட்ட இந்தியப் போட்டி ஆணையம் (CCI) நிறுவனங்களுக்கு இடையே போட்டியை ஒழுங்குபடுத்துகிறது. போட்டி ஆணையத்திற்கு இஆப அதிகாரி தலைவராகவும், இவப செயலாளராக மற்றும் 6 உறுப்பினர்கள் கொண்ட குழு இந்திய அரசு நியமிக்கிறது.
போட்டி ஆணையததின் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள்
சனவரி 2013 இல் வீட்டு வசதி நிறுவனமான டிஎல்எப் (DLF) மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு வாங்குபவர்களுக்கு இடையிலான ஒப்பந்தங்களில் உள்ள சில பிரிவுகளை இந்தியப் போட்டி ஆணையம் மாற்றியது.[5]கட்டட உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட கட்டிடத் திட்டத்தைத் தாண்டி, வீட்டு வசதி நிறுவனம் கூடுதல் கட்டுமானத்தை மேற்கொள்ள முடியாது.[5]
விற்கப்படாத குடியிருப்பு திட்டப் பகுதிக்குள் உள்ள திறந்த வெளிகளின் முழுமையான உரிமையை வீட்டு வசதி நிறுவனம் கொண்டிருக்காது.[5]
வாங்குபவர் மட்டுமல்ல, கட்டிடக் கலைஞரும் எந்தவொரு தவறுகளுக்கும் பொறுப்பாவார்.[6]
வாங்குபவர்களால் செய்யப்படும் அனைத்து கொடுப்பனவுகளும் கட்டுமான நோக்கத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும், "தேவைக்கேற்ப" அல்ல"[6].வீட்டு வசதி நிறுவனத்திற்கு கட்டிட உரிமையாளகள் சங்கத்தை உருவாக்குவதற்கு அதிகாரம் இல்லை.[6]
2014 ஆம் ஆண்டில், தகவல் மற்றும் ஆவணங்களைக் கோரி இந்தியச் செய்தி மற்றும் தகவல் தொடர்புத் துறையின் தலைமை இயக்குநரின் உத்தரவுகளை இணங்கத் தவறியதற்காக கூகுள் நிறுவனத்தின் மீது ₹10 மில்லியன் அபராதம் விதித்தது.[9]
ஆகஸ்டு 25, 2014 அன்று, கார் உதிரி பாகங்கள் மற்றும் பழுது கண்டறியும் கருவிகளை சுயாதீனமாக பழுதுபார்ப்பவர்களுக்கு வழங்கத் தவறியதற்காக, சில கார் மாடல்களை பழுதுபார்த்து பராமரிக்கும் திறனைத் தடுத்ததற்காக, 14 இந்திய கார் உற்பத்தியாளர்களுக்கு, இந்தியப் போட்டி ஆணையம் ₹2544 கோடி அபராதம் விதித்தது.[10]
நவம்பர் 17, 2015 அன்று சரக்கு விமானங்களுக்கு எரிபொருள் கூடுதல் கட்டணத்தை நிர்ணயிப்பதில் 3 விமான நிறுவனங்கள் கூட்டாக செயல்பட்டதற்கு ₹258 கோடி அபராதம் விதித்தது.[11]
மே 2017இல் ரிலையன்ஸ் ஜியோ தனது போட்டியாளர்களான பாரதி ஏர்டெல், வோடபோன் இந்தியா மற்றும் ஐடியா செல்லுலார் ஆகியோர் இணைந்து செயல்படுவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட புகாரைத் தொடர்ந்து, இந்திய செல்போன் இயக்குநர்கள் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து விசாரணை நடத்த இந்தியப் போட்டி ஆணையம் உத்தரவிட்டது.