கார்த்திக் (Karthik; பிறப்பு: 13 செப்டம்பர் 1960), தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் நடிகர் முத்துராமனின் மகனும் ஆவார். கள்ளர் சமுதாயத்தை சேர்ந்தவர். 2006 ஆம் ஆண்டு, அனைத்திந்திய ஃபார்வார்ட் பிளாக் கட்சியின் தமிழகத் தலைவராகப் பொறுப்பேற்று, அரசியல் வாழ்விலும் நுழைந்த இவர் தற்போது அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி என்ற கட்சியைத் துவங்கி, பின்னர் அதை கலைத்து மனித உரிமை காக்கும் கட்சி என்ற கட்சியை தொடங்கினார். இவர் நான்கு முறை பிலிம்பேர் விருதையும், நான்கு முறை தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதையும் மற்றும் கலைமாமணி விருது உட்பட பல விருதுகளைத் தன்னுடைய சிறந்த நடிப்பிற்காக பெற்றுள்ளார்.[2]அலைகள் ஓய்வதில்லை திரைப்படம் மூலமாக அறிமுகமான இவர், தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
கார்த்திக் 1960 செப்டம்பர் 13 இல் ஊட்டியில் நடிகர் முத்துராமனுக்குப் பிறந்தார்.[3] கார்த்திக்கிற்கு அவரது முதல் மனைவி ராகினி மூலம் கௌதம், கைன் என இரு மகன்களும், இரண்டாவது மனைவி ரதி மூலம் தீரன் என்ற ஒரு மகனும் உள்ளனர்.[4] மூத்த மகன் கௌதம் மணிரத்னம் இயக்கிய கடல் திரைப்படம் மூலம் அறிமுகமானார்.