சென்னை மாகாண சங்கம்சென்னை மாகாண சங்கம் (Madras Presidency Association) என்பது 1917-20 காலகட்டத்தில் சென்னை மாகாணத்தில் செயல்பட்ட இந்திய தேசிய காங்கிரசின் ஒரு பிரிவு. சென்னை மாகாணத்தில் பிராமணரல்லாத சாதியினரின் ஆதரவைப் பெற நீதிக்கட்சியுடன் போட்டியிட இவ்வமைப்பு உருவாக்கப்பட்டது.[1][2][3] 20ம் நூற்றாண்டின் இரண்டாம் பத்தாண்டில் சென்னை மாகாணத்தில் பிராமணர்-பிராமணரல்லாதோருக்கிடையே பிரிவினை பெரிதாகியது. பிராமணர் அல்லாதோர் நலனுக்காகப் பாடுபடுவதாக நீதிக்கட்சி தன்னை அடையாளப்படுத்திக் கொண்டது. அதனுடன் போட்டியிட காங்கிரசில் இருந்த பிராமணரல்லாத தலைவர்கள் சிலர் சென்னை மாகாண சங்கத்தை தொடங்கினர். செப்டம்பர் 20, 1917 அன்று இவ்வமைப்பு தொடங்கப்பட்டது. பெரியார் ஈ. வே. ராமசாமி, கல்யாணசுந்தரம் முதலியார், பெ. வரதராஜுலு நாயுடு, கூட்டி கேசவ பிள்ளை ஆகியோர் இச்சங்கத்தின் முக்கிய தலைவர்கள். கேசவ பிள்ளை இதன் தலைவராக இருந்தார்; ராமசாமி இதன் துணைத் தலைவர்களுள் ஒருவர். இச்சங்கத்துக்கு காங்கிரசின் பிராமணர்கள் மற்றும் தி இந்து இதழின் ஆதரவு இருந்தது. தங்கள் கோரிக்கையினை பலவீனப்படுத்த பிராமணர்களின் கைக்கூலியாக இச்சங்கம் செயல்படுவதாக நீதிக்கட்சி குற்றம் சாட்டியது. இந்தியன் பேட்ரியாட் என்ற ஆங்கில இதழையும் தேச பக்தன் என்ற தமிழ் இதழையும் சில காலம் இச்சங்கம் வெளியிட்டது. நீதிக்கட்சியைப் போலவே பிராமணரல்லாதோருக்கு வகுப்புவாரி இட ஒதுக்கீடு வேண்டுமென பிரித்தானிய ஆட்சியாளர்களிடம் வேண்டியது. இந்திய அரசுச் சட்டம், 1919 இயற்றப்பட்டு சாதி வாரி இட ஒதுக்கீடு வழங்கப்பட்ட பின்னால் சென்னை மாகாண சங்கம் மெல்ல அழிந்தது. அதன் கோரிக்கைகளை காங்கிரசின் பிராமண தலைவர்கள் கடுமையாக எதிர்த்ததும் இதற்குக் காரணம். அதன் தலைவர் கேசவ பிள்ளை காங்கிரசிலிருந்து விலகி நீதிக்கட்சியில் சேர்ந்து விட்டார். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia