தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றக் கழகம்தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றக் கழகம் (Thazhthapattor Munnetra Kazhagam) 1974-77 காலகட்டத்தில் தமிழகத்தில் செயல்பட்ட ஒரு அரசியல் கட்சியாகும். திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சத்தியவாணி முத்துவால் இக்கட்சி தொடங்கி நடத்தப்பட்டது. சத்தியவாணி முத்து திமுகவின் ஆதிதிராவிடர்களின் முகமாக கருதப்பட்டவர். 1967 மற்றும் 1971 சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு, வெற்றி பெற்று கா. ந. அண்ணாதுரை மற்றும் மு. கருணாநிதி அமைச்சரவைகளில் ஹரிஜனர் நல அமைச்சராகப் பணியாற்றினார். 1972 ஆம் ஆண்டு கருணாநிதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், திமுகவிலிருந்து வெளியேறி தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கினார். அண்ணாதுரையின் மரணத்துக்குப்பின் திமுகவில் ஆதிதிராவிடர்களின் நலன் பற்றி கவனிப்பாரில்லை என்று கருணாநிதி மீது குற்றம் சாட்டினார். 1977இல் இரா. நெடுஞ்செழியன், க. இராசாராம், ப. உ. சண்முகம், செ. மாதவன் போன்ற தலைவர்களும், திமுகவிலிருந்து வெளியேறி "மக்கள் திராவிட முன்னேற்றக் கழகம்" என்ற கட்சியைத் தொடங்கினர். சிறிது காலத்துக்கு இக்கட்சி சத்தியவாணி முத்துவின் கட்சியுடன் இணைந்து செயல்பட்டது. ஆனால் 1977 சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட போது சத்தியவாணி தனது கட்சியைக் கலைத்து விட்டு எம். ஜி. ராமச்சந்திரனின், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து விட்டார். 1977 தேர்தலில் அதிமுக வேட்பாளராக உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். தேர்தல் முடிந்து சிறிது காலத்தில் நெடுஞ்செழியனும், அதிமுகவில் இணைந்து விட்டார்.[1][2] [3][4][5][6] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia