பாரதிதாசன் பல்கலைக்கழகம் (Bharathidasan University) தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இது 1982 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் நாள் புரட்சிக்கவி பாரதிதாசன் பெயரால் நிறுவப்பட்டது. இதன் குறிக்கோளாக புதியதோர் உலகம் செய்வோம் என்னும் பாரதிதாசனின் பொன்மொழிகளை ஏற்று செயற்பட்டு வருகிறது. இந் நிறுவனம் 2006–07 ஆம் ஆண்டு தனது வெள்ளி விழாவைக் கொண்டாடியது.
இப்பல்கலைக்கழகத்திற்கு பெங்களூரு, தேசிய தர மதிப்பீடு மற்றும் நிர்ணயக் கழகத்தினால் "ஏ" கிரேடு வழங்கப்பட்டுள்ளது.
கட்டமைப்பு
இதன் நிர்வாகம் சார்ந்தப் பகுதிகளான துணைவேந்தர் செயலகம், பதிவாளர் அலுவலகம், நிதி மற்றும் தேர்வு அலுவலகம், பெரும்பான்மையான துறைகள் மற்றும் ஆய்வுக்கூடங்கள் பல்கலையின் மைய வளாகமான பல்கலைப்பேரூரிலேயே அமையப்பட்டுள்ளது. இவ்வளாகத்தில் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், அடிப்படை மருத்துவயியல், புவியியல், சமுகவியல், கடலியல் மற்றும் மொழியியற் பள்ளிகளும், மேலும் மைய நூலகம், விடுதி, தகவலியற் மையம், பணியாளர் மனைகள், நலவிடுதி, உணவகம் எனப் பல அமையப்பெற்றுள்ளன.
இதன் நகர வளாகமான காஜாமலையில், பொருளியல்,சமூகப்பணி, கணினியல் மற்றும் தொலையுணர்தல் பள்ளிகளும், கல்விப்பணியாளர் கல்லூரிகளும் இடம்பெற்றுள்ளன. இதனைத் தவிர்த்து பாரதிதாசன் தொலைக்கல்வி மையம் பல்கலைப்பேரூரிலும், பாரதிதாசன் மேலாண்மைக் கல்வி நிறுவனம், திருவெரும்பூரிலும் இயங்கி வருகின்றன.
இயக்கம்
இப்பல்கலைக் கழகம் 4 கல்விமுறைத் தொகுதிகளாகப் பகுக்கப்பட்டு, 16 பள்ளிகள், 34 துறைகள், 11 ஆய்வு மையங்கள், 195 கல்விப்பணியாளர்கள், 2300 க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்டு இயங்கிவருகிறது. இப்பலகலையின் துறைகள்/பள்ளிகளில் 177 திட்டங்களுக்குட்பட்ட 40 முதுநிலைத் திட்டமும் செயல்பட்டு வருகின்றன. இக்கல்வி நிறுவனத்தில் திருச்சியை ஒட்டிய 8 மாவட்டங்களில் இருக்கும் 123 கல்லூரிகளில் ஆட்சிச் செலுத்திவருகிறது. அதில் 123 கலை மற்றும் அறிவியற் கல்லூரிகளும், 3 நுண்கலைக் கல்லூரிகளும் அடங்கும். இவற்றுள் 8 அரசுக் கல்லூரியும் 11 அரசு உதவிக்கல்லூரிகளும் தன்னாட்சி நிறுவனங்களாக செயற்பட்டு வருகின்றன. இதைத் தவிர்த்து 8 பல்கலைக்கழகக் உறுப்புக்கல்லூரிகளும் நடத்திவருகிறது.