அசுவின் தேர்வுத் துடுப்பாட்ட போட்டிகளில் 500 இலக்குகளுக்கு மேல் வீழ்த்தியுள்ளார். விளையாடிய போட்டிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் 300 இலக்குகளை மிக வேகமாக எட்டிய பந்து வீச்சாளர் ஆவார். இவர் தேர்வுத் துடுப்பாட்ட போட்டிகளில் பத்து முறை தொடர் நாயகன் விருதுகளை வென்றதன் மூலம் அதிக தொடர் நாயகன் விருது வென்றோரின் பட்டியலில் இரண்டாவது இடத்தில உள்ளார். பன்முக வீரரான இவர் ஐந்து சதங்களை அடித்துள்ளார். தேர்வுத் துடுப்பாட்ட போட்டிகளில் 3000 ஓட்டங்கள் மற்றும் 500 இலக்குகளை எடுத்த மூன்று வீரர்களில் ஒருவர் ஆவார்.
அசுவின் இளையோர் வயது போட்டிகளில் துவக்க மட்டையாளராகக் தனது துடுப்பாட்ட வாழ்க்கையை தொடங்கினார். ஆனால் அதில் பெரிதாக வெற்றி காணாததால் பின்னர் ஒரு வலது கை சுழற்பந்துவீச்சாளராக மாறினார். இவர் திசம்பர் 2006 இல் தமிழ்நாட்டின் துடுப்பாட்ட அணி சார்பாக முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடினார். பிறகு அந்த அணிக்குத் தலைமை தாங்கினார். பின் 2010 ஆம் ஆண்டின் இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடியதன் மூலம் இவரின் திறமை வெளிச்சத்திற்கு வந்தது. இவரது பந்துவீச்சு திறனின் அடிப்படையில் சூன் 2010 இல் இந்திய துடுப்பாட்ட அணிக்காக விளையாடட தேர்வுசெய்யப்பட்டார். 2010 ஆம் ஆண்டின் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற பன்னாட்டு இருபது20 வாகையாளர் போட்டியில் அதிக இலக்குகள் எடுத்தவர் மற்றும் தொடர் நாயகன் விருதினையும் வென்றார். இவர் இரண்டு பன்னாட்டு இருபது20 வாகையாளர் கோப்பைகள் மற்றும் இரண்டு ஐபிஎல் பட்டங்களையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஒரு பகுதியாக வென்றார்.
2012 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் அஸ்வின்
2011 ஆம் ஆண்டில் இவர் தனது முதல் தேர்வுத் துடுப்பாட்ட போட்டியை மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிராக விளையாடினார். இவரின் முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலேயே ஐந்து இலக்குகளைப் பெற்று அறிமுகப் போட்டியில் ஐந்து இலக்குகள் பெறும் ஏழாவது இந்திய வீரரானார். துணைக்கண்டங்களில் சிறப்பான திறனை வெளிப்படுத்திய அசுவின், 2013 ஆம் ஆண்டின் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் இந்தியச் சுற்றுப் பயணத்தின் போது 29 இலக்குகள் எடுத்தார். நான்கு போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய வீரர் ஒருவர் எடுக்கும் அதிகபட்ச இலக்குகள் இதுவாகும். தனது பதினெட்டாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் 100 இலக்குகள் பெற்றார். தேர்வுத் துடுப்பாட்ட வரலாற்றில் குறைவான போட்டிகளில் 100 இலக்குகள் பெற்ற இந்திய வீரர் எனும் சாதனையப் படைத்தார். 2016 ஆம் ஆண்டின் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் சிறந்த வீரர் விருதினைப் பெற்ற அசுவின், இந்த விருதினைப் பெறும் மூன்றாவது இந்திய வீரர் ஆனார். இவர் ஐந்து முறை பன்னாட்டு துடுப்பாட்ட அவையின் சிறந்த தேர்வு துடுப்பாட்ட அணிக்கு தேர்வுசெய்யப்பட்டுள்ளார். இவர் கடந்த தசாப்தத்தின் (2011-20) சிறந்த தேர்வு துடுப்பாட்ட அணியிலும் தேர்வு செய்யப்பட்டார். 2015 ஆம் ஆண்டில், இவருக்கு இந்திய அரசு சார்பில் அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.
ஆரம்ப மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை
அசுவின் செப்டம்பர் 17, 1986 இல் சென்னையில் ரவிச்சந்திரன் மற்றும் சித்ரா தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்.[4] இவரது தந்தை ரவிச்சந்திரன், வேகப்பந்து வீச்சாளராக கிளப் அளவில் துடுப்பாட்ட விளையாட்டில் பங்கு பெற்றுள்ளார்.[5][6] அசுவின் தனது பள்ளிப்படிப்பை பத்ம சேசாத்ரி பால பவன் மற்றும் புனித பேடின் மேல்நிலைப் பள்ளியில் பயின்றார்.[7][8] ஒய்.எம்.சி.ஏ. அணிக்காக இவர் ஒன்பது வயதில் துடுப்பாட்டம் விளையாடத் தொடங்கினார். இவரது ஆரம்ப காலத்தில் சந்திரசேகர் ராவிடம் பயிற்சி எடுத்தார்.[7] இளையோர் வயது போட்டிகளில் துவக்க மட்டையாளராகக் தனது துடுப்பாட்ட வாழ்க்கையை தொடங்கினார்.[5] ஆனால் அதில் பெரிதாக வெற்றி காணாததால் பின்னர் ஒரு வலது கை சுழற்பந்துவீச்சாளராக மாறினார்.[9][10] சென்னையிலுள்ள சிவ சுப்ரமணிய நாடார் பொறியியல் கல்லூரியில்தகவல் தொழில்நுட்பத்தில் பட்டம் பெற்றார்.[11]
அசுவின் சென்னையிலுள்ள மேற்கு மாம்பலத்தில் வசிக்கிறார்.[4] 2011 ஆம் ஆண்டு நவம்பர் 13 ஆம் தேதி தனது நண்பரான பிரித்தி நாராயணனை மணந்தார்.[12] இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.[13][14]
2018 ஆம் ஆண்டு டிரென்ட் பிரிட்ஜில் நடந்த டெஸ்ட் போட்டியில் அஸ்வின் பந்து வீசுகிறார்.
ஒருநாள் துடுப்பாட்டத்தில் சூன் 5, 2010 அன்று இலங்கை அணிக்கு எதிராக அசுவின் தனது முதல் போட்டியை ஆடினார். இவர் 32 பந்துகளில் 38 ஓட்டங்கள் எடுத்தும் இந்த ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியுற்றது.[22][23] அசுவின் 15 பேர் கொண்ட 2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணதிற்கான இந்திய அணியில் ஒரு பகுதியாக இருந்தார்.[24] அசுவின் உலகக் கோப்பையில் இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடினார், இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி கோப்பையை வென்றது இந்திய அணி.[25][26]
மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான மூன்றாவது தேர்வு துடுப்பாட்டத்தின் போது 103 ஓட்டங்களைப் பெற்று நவம்பர் 25, 2011.இல் தனது முதல் சதத்தைப் நிறைவேற்றினார்.[27] அறிமுகமாகிய முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் (நவம்பர் 6-10, 2011) ஒன்பது இலக்குகளை வீழ்த்திய அசுவின், தனது 3வது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் ஒரே இன்னிங்ஸில் ஐந்து இலக்குகளை வீழ்த்தி, ஒரு சதமும் அடித்து சாதனை படைத்துள்ளனர். ஒரே இன்னிங்ஸில் ஐந்து விக்கெட் வீழ்த்தி, ஒரு சதமும் எடுத்த 3வது இந்தியர் ஆவார். இதற்கு முன்பு 1952ல் வினோ மன்கட்டும், 1962ல் பாலி உம்ரிகரும் இந்த சாதனையைப் படைத்துள்ளனர்.[28][29]
இருபது20
2008இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடக்க ஆண்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் உள்நாட்டு வீரராக அசுவின் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.[30] இவர் 2009 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அறிமுகமானார். அப்போதிருந்து 2015 வரை தொடர்ந்து எட்டு ஆண்டுகளுக்கு இந்த அணிகாக்காக விளையாடினார்.[31]2010 ஆண்டு போட்டிகளில் இவர் 13 இலக்குகளை வீழ்த்தி, சென்னை முதல் ஐபிஎல் பட்டத்தை வெல்வதற்கும் பன்னாட்டு இருபது20 வாகையாளர் (சாம்பியன்ஸ் லீக் டுவென்டி20) கோப்பைக்கு தகுதி பெறுவதற்கும் உதவினார்.[31][32] 2010ல் சென்னை பன்னாட்டு இருபது20 வாகையாளர் பட்டத்தை வென்றது, அசுவின் தொடரின் நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[33] அசுவின் 2011 இந்தியன் பிரீமியர் லீக்கில் 20 இலக்குகளை வீழ்த்தி சென்னை அணி தொடர்ந்து இரண்டாவது வெற்றியைப் பெற உதவினார்.[34] அசுவின் தனது இரண்டாவது பன்னாட்டு இருபது20 வாகையாளர் பட்டத்தை 2014 ஆம் ஆண்டு வென்றார்.[35] ஐபிஎல்லில் சூப்பர் கிங்ஸ் அணிக்காக எட்டு ஆண்டுகளில் 97 போட்டிகளில் விளையாடி 90 இலக்குகளை அசுவின் வீழ்த்தியுள்ளார்.[31]
2020 இந்தியன் பிரீமியர் லீக்குக்கு முன்னதாக, அசுவின் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு மாறினார்.[40] அந்த ஆண்டு போட்டிகளில் 13 இலக்குகளை வீழ்த்தி, அணியில் அதிக இலக்குகளை எடுத்தவர்களின் பட்டியலில் நான்காவது இடம் பிடித்தார்.[41][42] 2022 ஐபிஎல் ஏலத்தில், அசுவினை ₹5 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்கியது.[43][44][45] இவர் 12 இலக்குகளை வீழ்த்தி மற்றும் 191 ஓட்டங்கள் எடுத்து ராஜஸ்தான் அணி 2022 ஆம் ஆண்டு போட்டிகளின் இறுதிப் போட்டிக்கு சென்றதில் பெரும்பங்காற்றினார்.[31] ஏப்ரல் 2022 இல், ஹர்பஜன் சிங்க்குப் பிறகு ஐபிஎல்லில் 150 விக்கெட்டுகளை எடுத்த இரண்டாவது சுழற் பந்துவீச்சார் ஆனார்.[46][47]
புள்ளி விவரம்
மட்டையாளராக
ரவிச்சந்திரன் அசுவின் தேர்வுத்துடுப்பாட்டத்தில் சதம் அடித்த போட்டிகள்
ஏப்ரல் 28, 2025இல், இந்திய அரசு சார்பில், இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த விருதான பத்மசிறீ விருதை வழங்கி கௌரவித்தது. பத்மசிறீ விருதை, இந்தியக் குடியரசுத் தலைவர், திரௌபதி முர்மு, இவருக்கு வழங்கினார்.[53]
அசுவின் அர்ஜுனா விருது பெறுகிறார்அசுவின் சியட் விருதை பெறுகிறார்
தேர்வு துடுப்பாட்டத்தில் 250, 300 மற்றும் 350 இலக்குகளை வேகமாக எட்டியவர் (போட்டிகளின் அடிப்படையில்)[74][75]
50, 100, 150, 200, 250, 300, 350, 400, 450 மற்றும் 500 தேர்வு துடுப்பாட்ட இலக்குகளை அதிவேகமாக எட்டிய இந்தியர் (போட்டிகளின் அடிப்படையில்)[76][77][78][79][80][81][82]
மூன்று வெவ்வேறு போட்டிகளில் ஒரே தேர்வு போட்டியில் சதம் அடித்த மற்றும் ஐந்து இலக்குகளை வீழ்த்திய ஒரே இந்திய துடுப்பாட்ட வீரர்[83]
டி20யில் 50 இலக்குகளை வீழ்த்திய முதல் இந்தியர்[84]
தேர்வு போட்டிகளில் இரண்டாவது அதிக தொடர் நாயகன் விருதுகள் (10)[85]
தேர்வு போட்டிகளில் அதிக முறை ஐந்து இலக்குகளை வீழ்த்தியதில் மூன்றாவது இடம் (36)[86] and fastest to 25 five wicket hauls[87][88]
இந்தியாவுக்காக தேர்வு போட்டிகளில் இரண்டாவது அதிக இலக்குகளை வீழ்த்தியவர் (501)[89][90]
ஒரு ஆண்டில் 500 ஓட்டங்கள் மற்றும் 50 இலக்குகளை எடுத்த இரண்டாவது இந்தியர் (2016)[91]
ஒரு சீசனில் அதிக இலக்குகளை வீழ்த்தியவர் (82)[92][93]
தேர்வு போட்டிகளில் பெரும்பாலான இடது கை வீரர்களின் இலக்குகளை வீழ்த்தியவர்[94][95]
Second Indian bowler to take 300 Test wickets at home [96]
பன்னாட்டு போட்டிகளில் 700 இலக்குகளை வீழ்த்திய மூன்றாவது இந்தியர்[97]
தேர்வு போட்டிகளில் 3000 ஓட்டங்கள் மற்றும் 500 இலக்குகளை வீழ்த்திய மூன்று வீரர்களில் ஒருவர்[98]
தேர்வு போட்டிகளில் இந்தியாவில் அதிக இலக்குகளை எடுத்தவர் (354)[99]
ஐசிசி ஆடவர் தரவரிசையில் (மார்ச் 2024) முதல் இடத்தில் உள்ள பந்துவீச்சாளர் மற்றும் டெஸ்டில் இதுவரை அதிக மதிப்பெண் பெற்ற இந்திய பந்துவீச்சாளர்[100][101]