எப்சம் நடவடிக்கை
எப்சம் நடவடிக்கை (Operation Epsom) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு சண்டை. இது ஓவர்லார்ட் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும். நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பில் இருந்த பிரான்சின் கான் நகரைத் கைப்பற்ற நேச நாட்டுப் படைகள் மேற்கொண்ட முயற்சிகளில் இதுவும் ஒன்று. இது முதலாம் ஓடான் சண்டை (First battle of Odon) என்றும் அழைக்கப்படுகிறது. பிரான்சு மீதான நேச நாட்டுக் கடல்வழிப் படையெடுப்பு ஜூன் 6ம் தேதி துவங்கியது. இப்படையெடுப்பின் உடனடி நோக்கங்களில் ஒன்று கான் நகரைக் கைப்பற்றுதல். ஆனால் ஜூன் மாதம் முழுவதும் பல முறை முயன்றும் அந்நகரை நேச நாட்டுப் படைகளால் கைப்பற்ற முடியவில்லை. ஜூன் 26ம் தேதி பிரிட்டானியப் படைகள் கான் நகரைச் சுற்றி வளைத்துக் கைப்பற்ற மீண்டும் ஒரு பெரும் தாக்குதலைத் தொடங்கின. பிரிட்டனில் வானிலை மோசமாக இருந்ததால் திட்டமிட்டபடி இந்தத் தாக்குதலுக்கு முன்னர் வான்வழி குண்டுவீச்சை நிகழ்த்த முடியவில்லை. எனினும் அதற்குப் பதிலாகத் தொடர் பீரங்கித் தாக்குதலுக்குப் பின்னர் 15வது மற்றும் 43வது பிரிட்டானியத் தரைப்படை டிவிசன்கள் முன்னேறின. இரு நாட்கள் கடும் சண்டைக்குப் பின்னர் ஓடான் ஆற்றின் அக்கரையில் சிறு பாலமுகப்புகளைக் கைப்பற்றின. ஆனால் அடுத்த நிகழ்ந்த ஜெர்மானிய எதிர்த்தாக்குதல்களின் கடுமையினால் ஜூன் 30ம் தேதி எப்சம் நடவடிக்கை கைவிடப்பட்டது. கீழ்நிலை உத்தியளவில் இத்தாக்குதல் தோல்வியடைந்தது. கான் நகரை பிரிட்டானியப்படைகளால் கைப்பற்ற இயலவில்லை. எனினும், எதிர்த்தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட படைப்பிரிவுகளை ஜெர்மானியத் தளபதி ரோம்மலால் திருப்பி அழைத்துக் கொள்ள முடியவில்லை. தனது இருப்புப் படைகள் அனைத்தையும் ஓடான் ஆற்றங்கரையில் அவர் நிறுத்த வேண்டியதாயிற்று. இரு தரப்பிலும் இழப்புகள் அதிகமாக இருந்தாலும் பிரிட்டானியத் தரப்பில் இழப்புகளை ஈடுகட்டுவது எளிதான ஒன்றாக இருந்தது. படைப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டிருந்த ஜெர்மானியர்களால் இத்தாக்குதலில் ஏற்பட்ட இழப்புகளை உடனே ஈடுகட்ட முடியவில்லை. கானைப் பாதுகாத்து வந்த ஜெர்மானியப் படைப்பிரிவுகள் இதனால் கொஞ்சம் கொஞ்சமாக பலவீனமடைந்து வந்தன. ஜுலை மாதம் முழுவதும் கானைத் தொடர்ந்து பிரிட்டானியப் படைகள் தாக்கின. அம்மாத இறுதியில் கான் வீழ்ந்தது. குறிப்புகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia