கேரன்டான் சண்டை
கேரன்டான் சண்டை (Battle of Carentan) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு தாக்குதல். இது ஓவர்லார்ட் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும். இதில் அமெரிக்க தரைப்படை நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பில் இருந்த பிரான்சின் கேரன்டான் நகரைத் தாக்கிக் கைப்பற்றியது.[1] பிரான்சு மீதான நேச நாட்டு கடல்வழிப் படையெடுப்பு ஜூன் 6, 1944ல் தொடங்கியது. பிரான்சின் நார்மாண்டி கடற்கரைப் பகுதியில் இப்படையெடுப்பு நிகழ்ந்தது.[2] படையிறக்கம் நிகழ்ந்த கடற்கரைகள் ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. ஜூன் 6 இரவுக்குள் ஐந்து பிரிவுகளில் தரையிறங்கிய படைகள் கைகோர்த்து விட வேண்டுமென்பது திட்டம். ஆனால் ஒமாகா கடற்கரையில் எதிர்பாராத வண்ணம் ஜெர்மானியப் பாதுகாவல் படைகளின் எதிர்த்தாக்குதல் கடுமையாக இருந்ததால் அங்கு தரையிறங்கிய அமெரிக்கப் படைகள் அடுத்திருந்த யூட்டா கடற்கரைப் படைகளுடன் கைகோர்க்க முடியவில்லை.[3] இந்த இரு படைப்பிரிவுகளுக்கும் இடையே உள்ள இடைவெளியில் ஜெர்மானிய எதிர்த்தாக்குதல் நிகழக் கூடும் என்று நேச நாட்டு உளவுத் துறையினர் எச்சரித்ததால் அமெரிக்க தளபதி ஒமார் பிராட்லி இரு படைப்பிரிவுகளையும் இணைப்பதற்கு முன்னுரிமை அளித்தார். இரு கடற்கரைகளுக்கும் இடையே இருந்த கேரன்டான் நகரைக் கைப்பற்ற உத்தரவிட்டார். இந்த பொறுப்பு நார்மாண்டியில் வான்வழியே தரையிறங்கியிருந்த அமெரிக்க 101வது வான்குடை டிவிசனுக்குத் தரப்பட்டது. ஜூன் 10ம் தேதி கேரன்டான் நகர் மீதான தாக்குதல் தொடங்கியது. ஜெர்மானிய 6வது வான்குடை ரெஜிமண்ட், இரண்டு கிழக்கு பட்டாலியன்கள் நகரைப் பாதுகாத்து வந்தன.[1] அவற்றின் உதவிக்கு அனுப்பப்பட்ட 17வது எஸ். எஸ் பான்சர்கிரனேடியர் டிவிசன் நேச நாட்டு வான்வழித் தாக்குதல்களால் குறித்த நேரத்தில் நகரை அடைய முடியவில்லை. மூன்று நாட்கள் கடுமையான சண்டைக்குப் பின் அமெரிக்கப் படைகள் கேரன்டானைக் கைப்பற்றின. ஜூன் 13ல் நிகழ்ந்த ஜெர்மானிய எதிர்த்தாக்குதலை அமெரிக்க 2வது கவச டிவிசனின் படைப்பிரிவுகளின் உதவியுடன் சமாளித்து நகர் முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தன. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia