புளூகோட் நடவடிக்கை
புளூகோட் நடவடிக்கை (Operation Bluecoat) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு சண்டை. இது ஓவர்லார்ட் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும். கோப்ரா நடவடிக்கைக்குத் துணையாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. நாசி ஜெர்மனியின் கட்டுப்பாட்டிலிருந்த பிரான்சு மீதான நேச நாட்டு கடல்வழிப் படையெடுப்பு நார்மாண்டிப் பகுதியில் சூன் 6, 1944 நிகழ்ந்தது. இரு மாத சண்டைக்குப் பின்னர் கோப்ரா நடவடிக்கையின் மூலம் நார்மாண்டிப் பகுதியிலிருந்து நேச நாட்டுப் படைகள் பிரான்சின் உட்பகுதிக்கு முன்னேறத் தொடங்கின. அமெரிக்கப் படைப்பிரிவுகளால் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சிக்குத் துணையாக பிரிட்டானியப் படைப்பிரிவுகள் அனுப்பப்பட்டன. அமெரிக்க முன்னேற்றத்தின் பக்கவாட்டு முனையைப் (flank) பாதுகாக்க விர் நகரின் சாலை சந்திப்பையும் பின்கான் மலையினையும் கைப்பற்றும் பொறுப்பு பிரிட்டானிய 2வது ஆர்மியிடம் ஒப்படைக்கபட்டது. ஜூலை 30ம் தேதி கடுமையான வான்வழி குண்டுவீச்சுத் தாக்குதலுக்குப் பின்னர் 2வது ஆர்மி விர் நகரை நோக்கி முன்னேறத் தொடங்கியது. பிரிட்டானிய முன்னேற்றத்தைத் தடுக்க ஜெர்மானியர்கள் கவச டிவிசன்களை அதனை எதிர்க்க அனுப்பினர். ஒரு வாரம் கடுமையான சண்டைக்குப் பின்னர் விர் நகரும் பின்கான் மலையும் பிரிட்டானியப் படைகளால் கைப்பற்றப்பட்டன. |
Portal di Ensiklopedia Dunia