சுவார்ட் கடற்கரை
சுவார்ட் கடற்கரை (ஸ்வார்ட் கடற்கரை, Sword Beach) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஓவர்லார்ட் நடவடிக்கையில் நார்மாண்டி கடற்கரையின் ஒரு பகுதிக்கு வழங்கப்பட்ட குறிப்பெயர். நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பிலிருந்த பிரான்சு மீதான நேச நாட்டு கடல் வழி படையெடுப்பு ஜூன் 6, 1944ம் தேதி துவங்கியது. பிரான்சின் நார்மாண்டி கடற்கரைப் பகுதியில் நிகழ்ந்த இப்படையெடுப்புக்கு ஓவர்லார்ட் நடவடிக்கை என்று குறிப்பெயர் இடப்பட்டிருந்தது. படையெடுப்பு நிகழ்ந்த கடற்கரை ஐந்து பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது - யூட்டா, ஒமாகா, கோல்ட், ஜூனோ மற்றும் சுவார்ட். 8 கி.மீ. நீளமுள்ள சுவார்ட் கடற்கரை படையிறக்கப் பகுதியின் கிழக்கு எல்லையில் அமைந்திருந்தது. ஓர்ன் ஆற்று முகத்துவாரம் முதல் சென்-ஆபின் கம்யூன் வரை அமைந்திருந்த இக்கடற்கரையில் பிரிட்டானியப் படைகள் தரையிறங்கின. 3வது பிரிட்டானிய காலாட்படை டிவிசன், 27வது தனிக் கவச பிரிகேட், 1வது சிறப்பு சேவை பிரிகேட், சுதந்திர பிரெஞ்சு கமாண்டோ, 41வது ராயல் மரீன் கமாண்டோ ஆகியவை சுவார்டில் தரையிறங்கிய படைப்பிரிவுகளாகும். இவற்றை எதிர்க்க ஜெர்மானிய 716வது காலாட்படை டிவிசனும், 352வது டிவிசனின் சில பிரிவுகளும் சுவார்ட் கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்தன. பிரிட்டானியப் படைகள் ஜூன் 6ம் தேதி பெரும் எதிர்ப்பு எதுவுமின்றி சுவார்ட் கடற்கரையில் தரையிறங்கி அதனைக் கைப்பற்றின. மாலை நான்கு மணியளவில் தான் ஜெர்மானிய எதிர்த் தாக்குதல்கள் தொடங்கின. ஆனால் அவை எளிதில் முறியடிக்கப்பட்டன. இரவு 8 மணியளவில் ஜெர்மானிய 21வது பான்சர் (கவச) டிவிசன் சுவார்ட் கடற்கரையை மீண்டும் தாக்கியது. ஆனால் இத்தாக்குதலும் முறியடிக்கப்பட்டது. நார்மாண்டியின் ஐந்து கடற்கரைகளுள் பான்சர் (கவச) படைப்பிரிவுகளால் தாக்கப்பட்ட ஒரே கடற்கரை சுவார்ட் மட்டுமே. ஜூன் 6ம் தேதி இரவுக்குள், சுவார்டில் 28,853 பிரிட்டானிய வீரர்கள் தரையிறங்கியிருந்தனர். 683 வீரர்கள் இத்தரையிறக்கத் தாக்குதலில் மரணமடைந்தனர். மறுநாள் ஜூனோ கடற்கரையில் தரையிறங்கியிருந்த கனடிய படைப்பிரிவுகளுடன் பிரிட்டானியப் படைப்பிரிவுகள் கைகோர்த்தன. நார்மாண்டியின் உட்பகுதியிலிருந்த கான் நகரை நோக்கி முன்னேறத் தொடங்கின. வெளி இணைப்புகள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia