டோட்டலைசு நடவடிக்கை
டோட்டலைசு நடவடிக்கை (டோட்டலைஸ் நடவடிக்கை, Operation Totalize) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு சண்டை. இது ஓவர்லார்ட் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும். கான் சண்டையில் கைப்பற்றப்படாத கான் பகுதிகளைக் கைப்பற்ற இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பிலிருந்த பிரான்சு மீதான நேச நாடு படையெடுப்பு ஜூன் 6, 1944ல் நார்மாண்டியில் தொடங்கியது. நார்மாண்டியின் கான் நகரைக் கைப்பற்ற இரு மாதங்கள் கடும் சண்டை நடந்தது. எனினும் நேச நாட்டுப் படைகளால் கான் நகரை முழுவதும் கைப்பற்ற முடியவில்லை. வெர்ரியர் முகடும் அதன் சுற்றுப்புறப்பகுதிகளும் ஜெர்மானியர் வசமிருந்தன. ஜூலை மாத இறுதியில் நார்மாண்டிப் போர்முனையின் மற்றொரு பகுதியிலிருந்து அமெரிக்கப் படைகள் உடைத்து வெளியேறி பிரான்சின் உட்பகுதிக்கு முன்னேறத் தொடங்கின. இதனால் கான் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஜெர்மானியப் படைப்பிரிவுகள் அமெரிக்க முன்னேற்றத்தைத் தடுக்க அனுப்பப்பட்டன. ஜெர்மானியப் படைபலம் குறைந்ததால் மீண்டும் வெர்ரியர் முகட்டைக் கைப்பற்ற நேச நாட்டுப் படைகள் முயன்றன. இத்தாக்குதல் புதிதாக உருவாக்கப்பட்டிருந்த கனடிய 1வது ஆர்மியினால் மேற்கொள்ளப்பட்டது. கான் நகரின் தெற்குப் பகுதியில் ஜெர்மானியப் படை நிலைகளை ஊடுருவி, தெற்கு நோக்கி முன்னேறி ஃபலேசு நகரின் வடக்கிலுள்ள மேட்டுப் பகுதியைக் கைப்பற்றுவது இத்தாக்குதலின் நோக்கு. ஆகஸ்ட் 8ம் தேதி கனடியப் படைப்பிரிவுகள் தங்கள் தாக்குதலைத் தொடங்கின. ஆரம்பத்தில் எளிதாக ஜெர்மானியப் படைகளை முறியடித்து முன்னேறி பல முக்கிய படைநிலைகளைக் கைப்பற்றின. ஆனால் தொடர்ந்து தாக்குதல் நடத்த வேண்டிய கவச டிவிசன்கள் அனுபவமின்மையால் தயங்கி நின்று விட்டன. மேலும் ஜெர்மானிய எதிர்த்தாக்குதல்கள் அதிகரித்ததால் கனடியப் படைகளின் முன்னேற்றம் ஃபலேசு நகருக்கு 11கிமீ வடக்கே நின்று போனது. இந்த நடவடிக்கை இத்துடன் நிறுத்திக்கொள்ளப்பட்டு, எஞ்சிய இலக்குகளைக் கைப்பற்ற டிராக்டபிள் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. |
Portal di Ensiklopedia Dunia