எஸ். எஸ். ராஜேந்திரன்
எஸ். எஸ். ஆர். (S. S. R) அல்லது எஸ். எஸ். ராஜேந்திரன் (S. S. Rajendran) என அழைக்கப்படும் சேடபட்டி சூரியநாராயண தேவர் இராஜேந்திரன் (சனவரி 1928 - அக்டோபர் 24, 2014[1]) தமிழகத் திரைப்பட நடிகரும், இயக்குநரும், தயாரிப்பாளரும், பாடலாசிரியரும் மற்றும் அரசியல்வாதியும் ஆவார்.[2] இலட்சிய நடிகர் என அழைக்கப்பட்டவர். 1950கள், 60களில் தமிழ்த் திரையுலகில் தனது அழகு, அழுத்தம் திருத்தமான உச்சரிப்பு ஆகியவற்றால் புகழ்பெற்று விளங்கினார். சுமார் 85 படங்களில் நடித்தார்.[3] இவர் நடித்த பூம்புகார், மறக்க முடியுமா போன்ற திரைப்படங்கள் குறிப்பிடத்தக்க வெற்றி பெற்றன. 1962 ஆம் ஆண்டில் இவர் தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தனது தன்வரலாற்றை நான் வந்த பாதை என்னும் பெயரில் நூலாக எழுதியிருக்கிறார்.[3] நாடகத் துறையில்சே. சூ. இராசேந்திரன் சேடபட்டியில் தொடக்கக் கல்வியை முடித்தார். உயர்நிலைப் பள்ளியில் படிக்க அடுத்துள்ள நகரப் பள்ளிக்குப் போக வேண்டும். குறைந்த வயதுடையவராக இராசேந்திரன் ஓராண்டு வீட்டிலேயே இருந்தார். அப்பொழுது அவர் தந்தைக்கு நண்பரான சுப்பு ரெட்டியார் என்பவரின் நாடகக் குழுவில் இணைந்து நடிக்கத் தொடங்கினார்.[4] அந்த நாடகக் குழு ஆறுமாத பயணமாக நடகம் போட மலேசியாவுக்கு செல்லவிருப்பதை அறிந்த இராசேர்திரனின் தந்தை இராசேந்திரனை மீண்டும் படிக்கவைக்க நாடகக் குழுவிலிருந்து அழைத்து வந்துவிட்டார். பின்னர் வத்தலக்குண்டில் இருந்த உறைவிடப் பள்ளியான ஏ.எம். சி.சி. உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்த்துவிட்டார். இராசேந்திரன் அங்கேய தங்கி படித்துவந்தார். பள்ளிகளுக்கு இடையில் நடந்த நாடகப் போட்டியில் இவர் நடித்த சிந்தாமணி நாடகம் முதல் பரிசுபெற்றது. இதற்கிடையில் இராசேந்திரனுக்கு உள்ள குரல் வளம், நல்ல தோற்றம், நினைவுத் திறன், இசையறிவு போன்றவற்றைப் பார்த்த பள்ளி விடுதி காப்பாளர் மதுரையில் நாடகங்களை நடத்த வந்துள்ள பால ஷண்முகானந்த சபாவில் சென்று இணைந்து கொள்ளுமாறு தூண்டிவிட்டார். மேலும் செலவுக்கு பணம் கொடுத்து அனுப்பியும்விட்டார். பின்னர், 'பாய்ஸ் நாடகக் கம்பெனி"யில் குழந்தை நடிகராகச் சேர்ந்தார். பின்னர் தி. க. சண்முகம் சகோதரர்களின் ஸ்ரீ பால ஷண்முகானந்த சபாவில் துணை நடிகராக நுழைந்து கதாநாயகனாக உயர்ந்தார்.[3] பின்னர் அக்குழுவில் இருந்து வெளியேறினார். திரைப்படத் துறையில்ஆரம்பத்தில் மேடை நாடகங்களில் நடித்து வந்த சே.சூ.இராஜேந்திரன், ஜி. இராமநாதனின் இசையமைப்பில் பின்னணிப்பாடகராக திரையுலகில் நுழைந்தார்.[3] கலைஞர் மு. கருணாநிதி கதை, வசனம் எழுதிய பராசக்தி (1952) திரைப்படத்தில் சிவாஜி கணேசனுடன் இணைந்து நடிகராக அறிமுகம் ஆனார். அதன் பின்னர் கருணாநிதியின் அம்மையப்பன் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. ஆனாலும் இப்படம் பெரிதாக வெற்றி பெறவில்லை. அதன் பின்னர் சிறு பாத்திரங்களில் நடித்து வந்தவருக்கு 1957 ஆம் ஆண்டில் வெளிவந்த முதலாளி திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது. இத்திரைப்படத்தில் இடம்பெற்ற ஏரிக்கரை மீது போறவளே பெண்மயிலே.. என்ற பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றது. 1958-இல் இவர் நடித்த “தை பிறந்தால் வழி பிறக்கும்“ வெற்றிகரமாக ஓடியது. எம்.ஜி.ஆருடன் சிறந்த நட்பினைப் பேணி வந்தார். எம்.ஜி.ஆர். இரண்டு வேடங்களில் தோன்றி நடித்த ராஜா தேசிங்கு (1960) படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். சாரதா என்னும் திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பை கே. எஸ். கோபாலகிருட்டிணனுக்கு ஏற்படுத்திக்கொடுத்தார்.[2] திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருந்த காலத்திலும் நாடகத்தின் தொடர்பை சே.சூ.இரா. விட்டுவிடவில்லை. எஸ்.எஸ்.ஆர்.நாடக சபா என்னும் அமைப்பின் வழியாக பல நாடகங்களை நடத்தினார். அதன் வழியாக பின்னாளில் திரைவுலகில் புகழ்பெற்ற மனோரமா, ஷீலா ஆகியோரை நடிகர்களாக அறிமுகம் செய்தார்.[2] சில காலம் திரையுலகைவிட்டு ஒதுங்கிய இவர் 1982ஆம் ஆண்டில் இரட்டை மனிதன் என்னும் படத்தில் நடித்தார். அதன் பின்னர் சில படங்களில் கெளரவ வேடமிட்டார். ஒரு சில தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்தார். இலட்சிய நடிகர்திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினராக இருந்த சே.சூ.இரா., அக்கழகத்தின் கொள்கைப்படி புராணப்படங்களில் நடிக்க மறுத்தார். இதனால் இலட்சிய நடிகர் என அழைக்கப்பட்டார். தயாரிப்பாளர்சே.சூ. இரா. தனது ராஜேந்திரன் பிக்சர்ஸ், எஸ். எஸ். ஆர். பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்களின் வழியாக முத்துமண்டபம், தங்கரத்தினம், மணிமகுடம், அல்லி ஆகிய படங்களைத் தயாரித்தார். முத்துமண்டபம் படத்தில் கே. ஆர். விஜயாவை அறிமுகம் செய்தார். அதேபோல மனோரமாவை தனது நாடக குழுவில் அறிமுகம் செய்தார்.[2] இயக்குநர்சே.சூ.இராசேந்திரன் தானே கதைத்தலைவனாக நடித்து தங்கரத்தினம் (1960), மணிமகுடம், அல்லி ஆகிய படங்களை இயக்கி உள்ளார்.[5] நாடகக் குழுசே. சூ. இரா. திரைப்படத்துறையில் புகழ்பெற்று விளங்கியபொழுது எஸ். எஸ். ஆர். நாடக மன்றம் என்னும் நாடக நிறுவனத்தின் உரிமையாளாராக இருந்தார். அந்நிறுவனத்தில் நடிகர்களாக இருந்த மனோரம்மா, ஷீலா ஆகியோர் பின்னாளில் புகழ்பெற்ற திரைப்பட நடிகர்களாக விளங்கினார்கள்.[2] அரசியல்எஸ். எஸ். இராஜேந்திரன் தனது அரசியல் வாழ்க்கையை பெரியாரின் திராவிடர் கழகத்திலிருந்து துவங்கினார். பெரியாரின் கொள்கையை ஏற்று கொண்டு தீவிரமாக செயல்பட்ட போது தான் அங்கு தனது அரசியல் சகாவான சி. என். அண்ணாதுரையின் நட்புக் கிடைத்தது. அதன் பிறகு திராவிட முன்னேற்றக் கழகத்தின் வழியாகத் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய இராசேந்திரன் அக்கட்சியின் செயற்குழு உறுப்பினராக ஆனார். 1958 ஆம் ஆண்டில் திமுக அறிவித்த பிரதமர் சவகர்லால் நேருவிற்கு கறுப்புக்கொடி காட்டும் போராட்டத்தின் பொழுது முன்னெச்சரிகை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்.[4] 1965 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்திப் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டு சென்னை சிறையில் 12 நாள்கள் அடைக்கப்பட்டார்.[6] அதன் பிறகு 1962 சட்டமன்றத் தேர்தலில் தேனி தொகுதியிலிருந்து தி.மு.க. சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியத் திரைப்பட நடிகர் இவராவார்.[7][8] நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக திமுக-வின் சார்பில் 1970 ஏப்ரல் 3 முதல் 1976 ஏப்ரல் 2 வரை பணியாற்றினார். அதன் பிறகு திமுக தலைவர் மு. கருணாநிதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக அக்கட்சியில் இருந்து விலகி ம. கோ. இராமச்சந்திரன் தொடங்கிய அ.தி.மு.கவில் இணைந்தார். அக்கட்சியின் சார்பாக 1980 சட்டமன்றத் தேர்தலில் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அத்தேர்தலில் தமிழகத்திலேயே அதிக வாக்கு வேறுபாட்டில் இவர் வென்றார்.[4] 1984 ஆம் ஆண்டில் ம.கோ.இரா. மருத்துவமனையில் இருந்த பொழுது நடைபெற்ற 1984 சட்டமன்றத் தேர்தலில் இவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் அக்கட்சியில் இருந்து பிரிந்துசென்று எம்.ஜி.ஆர்.எஸ்.எஸ்.ஆர்.கழகம் என்னும் கட்சியைத் தொடங்கி சேடப்பட்டித் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார்.[4] ம.கோ.இரா. நலம்பெற்ற பின்னர் மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்ந்தார். ம.கோ.இரா. மறைவிற்கு பின்னர் முழுமையாக மனம் நொந்து அரசியலில் இருந்து ஒதுங்கினார். 1989 ஆம் ஆண்டில் அதிமுக இரண்டாகப் பிளவுபட்ட போது ஜெயலலிதாவின் வேண்டுகோளால் மீண்டும் அவர் ஜெ-அணியில் இணைந்து அப்போது நடைபெற்ற 1989 சட்டமன்றத் தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் அ.தி.மு.க.(ஜெயலலிதா அணி) சார்பாகப் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார்.[3] அதன் பின்னர் சு. திருநாவுக்கரசு தொடங்கிய எம்.ஜி.ஆர்.அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்தார். சிறிதுகாலம் கழித்து அதிலிருந்து விலகி அரசியலில் இருந்தே ஒதுங்கினார். குடும்பம்சூரிய நாராயண தேவர் - ஆதிலட்சுமி இணையர் மகனான சே.சூ.இராசேந்திரன் நாடகத்தில் தன்னோடு இணைந்து நடித்த கேரளத்தைச் சேர்ந்த பங்கசம் என்பவரை கவிஞர் பாரதிதாசன் தலைமையில் திருச்சி திருவரங்கத்தில் 1-12-1946ஆம் நாள் மணந்துகொண்டார்.[9] அவர்களுக்கு இளங்கோவன், ராஜேந்திர குமார், கலைவாணன், செல்வராஜ் என்னும் நான்கு மகன்களும் பாக்யலட்சுமி என்னும் மகளும் பிறந்தனர்.[10] 1956ஆம் ஆண்டில் குலதெய்வம் படத்தில் தன்னோடு இணைந்து நடித்த சி.ஆர். விசயகுமாரியை அவ்வாண்டிலேயே களவுத் திருமணம் செய்துகொண்டார். அத்திருமணம் சில ஆண்டுகளில் வெளியே தெரியவந்தது. இவர்களுக்கு ரவிக்குமார் என்னும் மகன் பிறந்தார். பின்னர் இருவரும் மனமொத்து மணவிலக்குப் பெற்றுக்கொண்டனர்.[2] மூன்றாவதாக தாமரைச்செல்வி என்பவரை சே.சூ.இரா. மணந்துகொண்டார். இவர்களுக்கு கண்ணன் என்னும் மகனும் ஒரு மகளும் பிறந்தனர்.[10] மறைவுமார்புச் சளி, மூச்சடைப்பால் சிரமப்பட்ட எஸ்.எஸ்.ஆர் அக்டோபர் 24, 2014 காலை 11 மணிக்கு சென்னையில் காலமானார்.[11] நடித்த திரைப்படங்கள்சே.சூ.இரா. பின்வரும் படங்களில் நடித்திருக்கிறார்:[12]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia