களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் (ஆங்கிலம்: Kalakkad Mundanthurai Tiger Reserve (KMTR)) என்பது தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் திருக்குறுங்குடியில் இருந்து கடையம் வரை 895 சதுர கி.மீ. பரப்பளவில் இந்தியாவின் 17-ஆவது புலிகள் காப்பகமாக களக்காடு முண்டன்துறை அமைந்துள்ளது. பல்லுயிர்ப் பெருக்கத்துக்குப் புகழ்பெற்ற இங்கு புலி, சிறுத்தை, மான், மிளா, யானை போன்ற அரிய வகை விலங்கினங்கள், உலகில் வேறெங்கும் இல்லாத தாவர வகைகளும் உள்ளன. தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய காப்பகம் ஆகும்.[4]
தோற்றம்
1962 ஆம் ஆண்டு, களக்காடு புலிகள் சரணாலயமும் (251 சதுர கிலோ மீட்டர்கள்), முண்டந்துறை புலிகள் சரணாலயமும் (567 சதுர கிலோமீட்டர்கள்) உருவாக்கப்பட்டன. 1988 ஆம் ஆண்டில், இந்த இருசரணாலயங்களையும் ஒன்றிணைத்து, இக்காப்பகம் உருவாக்கப்பட்டது. 1996 ஆம் ஆண்டு, இக்காப்பகத்துடன் கன்னியாகுமரி மாவட்டத்தினை ஒட்டியுள்ள வீரப்புலி, கீழமலை ஆகிய பாதுகாக்கப்பட்ட வனங்களிலுள்ள குறிப்பிட்ட (77 சதுர கிலோமீட்டர்கள்) பகுதிகளையும் இணைக்கப்பட கூறப்பட்டது. மேலும், 2006 ஆண்டு, இக்காப்பகத்தின் 400 km2 (150 sq mi) முக்கியப் பகுதியை, இந்தியாவின் தேசிய பூங்காப்பகுதிகளுள் ஒன்றாக அறிவிக்கப்பட முன்மொழியப்பட்டது.[5]
அமைவிடம்
தமிழ்நாட்டில் உள்ள முண்டன்துறை திருநெல்வேலியில் இருந்து சுமார் 56 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இங்குள்ள வனவிலங்கு சரணாலயம் சுமார் 567 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. குற்றாலத்துக்கு 75 கிலோ மீட்டர் தெற்கே உள்ள இந்த சரணாலயம் மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்குச் சரிவில் அமைந்துள்ளது. இதன் அருகிலுள்ள தொடருந்து நிலையம் நெல்லை-தென்காசி ரயில் பிரிவில் உள்ள அம்பாசமுத்திரம் ஆகும். இது 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. பருவ காலம் செப்டம்பர் தொடங்கி நவம்பர் வரை ஆகும்.
இக்காப்பகத்தின் வடக்கு, தெற்கு, மேற்கு திசைப்பகுதிகள் வனங்களால் சூழப்பட்டுள்ளது. இதன் கிழக்குப் பகுதியில் மட்டும் கிராமங்கள் உள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட (~135) கிராம வனப்பாதுகாப்பு (Village Forest Protection Committees) குழுக்கள் உருவாக்கப்பட்டு, கட்டுப்பாடான வனமேலாண்மை செயற்படுத்தப்படுகிறது.
இந்த சரணாலயப் பகுதியில் பாண தீர்த்தம் மற்றும் பாபநாசம் ஆகிய இரண்டு நீர் வீழ்ச்சிகள் உள்ளன. தாமிரபரணி நதியும் அதன் சில உப நதிகளும் இந்த சரணாலயப் பகுதியில் ஓடுகின்றன.
சுற்றுலா
மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள பாபநாசம் அணை, பாணதீர்த்த அருவி, சேர்வலாறு அணை, அகத்தியர் அருவி, மணிமுத்தாறு அணை, மணிமுத்தாறு அருவி போன்றவைகள் உள்ளன.
வனத்துறையிடம் அனுமதி பெற்று இங்கு மலையேற்றத்தில் ஈடுபடலாம். காட்டுக்குள் தங்குவதற்கு தமிழ்நாடு வனத்துறை விருந்தினர் மாளிகை மற்றும் அருகில் அம்பாசமுத்திரத்தில் பொதுப்பணித்துறை ஓய்வு இல்லம் போன்றவை உண்டு.
சிறப்புகள்
இதில் அரிய வகை உயிரினங்கள் வாழ்கின்றன. காடுகளை பாதுகாப்பதற்காக 228 கிராம வனக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. புலிகளைக் காப்பகத்தில் மக்களுடன் கூடிய வனப்பாதுகாப்புத் திட்டமான சூழல் மேம்பாட்டு திட்டம், கடந்த 1995 ஆம் ஆண்டு உலக வங்கியினால் தொடங்கப்பட்டது. கடந்த 17 ஆண்டுகளாக, இத்திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுடன் ஒருங்கிணைந்து காடுகள் பாதுகாப்பில்(the ‘Best coexistence and buffer zone management') முக்கிய பணியாற்றியதற்காக, இக்காப்பகத்திற்கு தேசிய புலிகள் ஆணையத்தின் (National Tiger Conservation Authority (NTCA)) சிறந்த விருது கிடைத்துள்ளது.
உலக அறிஞர்களால், உயிரின வகைமை உள்ள இடங்களில் 18 முக்கியமென அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றில் இக்காப்பகமும் ஒன்றாகும். இக்காப்பகத்தில் 32 தாவர இனங்களும் 17 விலங்கு இனங்களும் அழியும் நிலையிலுள்ளவை என பட்டியலிடப்பட்டுள்ளன.
விலங்கினங்கள்
களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பகத்தில் சிறுத்தை, மான், மிளா, யானை, புலி போன்ற அரிய வகை விலங்கினங்கள் காணப்படுகிறது. திசம்பர், 2014ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, 45 சிறுத்தைகளும் 14 புலிகளும் இருப்பது தெரியவந்துள்ளது. இது, முந்தைய ஆண்டைவிட அதிகம்.
இந்த சரணாலயத்தில் புலிகளை தவிர சிறுத்தைகள், நரிகள், கழுதைப் புலிகள், காட்டுப் பூனைகள், பலதரப்பட்ட குரங்குகள் மற்றும் கடம்பை மான்களையும் காணலாம். 2014ஆம் ஆண்டில் புலிகள் மற்றும் சிறுத்தைகளின் பெருக்கம் கூடியுள்ளது.[7][8]
பயன்கள்
1970களில் தாமிரபரணி நீர் பிடிப்புப் பகுதிகளில் இலட்சக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டன. இதனால் வற்றாத ஜீவநதி என்று பெயர்பெற்ற தாமிரபரணியாறு 1980களில் வறண்டது. இதன் பிறகு தாமிரபரணிக்கு நீர் வழங்கும் காடுகளின் முக்கியத்துவத்தை உணர்ந்த அன்றைய அரசு களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தை அறிவிதது இங்குள்ள காட்டை மேம்படுத்த உலக வங்கி உதவியுடன் திட்டங்கள் வகுத்து செயல்பட்டது. இதன் பிறகு இப்பகுதியின் காடு உயிர்பெற்றது. இதன் விளைவுகள் விரைவில் தெரியத் துவங்கின. 1946இல் இருந்து 1990 வரை தாமிரபரணி அணைக்கு நீர்வரத்து சராசரியாக 13000 கன அடியாக இருந்தது. ஆனால் புலிகள் காப்பகம் உருவானதால் காட்டின் தரம் மேம்பட்டதால் 1990க்குப் பிறகு அணைக்கு வந்த சராசரி நீர்வரத்தானது 26000 கன அடியாக அதிகரித்தது. மழையளவும் கூடியது.[9]