ஜெயகாந்தன் (Jayakanthan, 24 ஏப்ரல் 1934 – 8 ஏப்ரல் 2015) தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். இந்தியாவில் இலக்கியத்திற்காக வழங்கப்படும் உயரிய விருதான ஞானபீட விருதைப் பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளர். இவருடைய படைப்பிலக்கியக் களம் சிறுகதைகள், புதினங்கள், கட்டுரைகள், திரைப்படங்கள் எனப் பரந்து இருக்கின்றது.
வாழ்க்கைக் குறிப்பு
ஜெயகாந்தன் 1934-ஆம் ஆண்டு கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் என்ற ஊரில், ஒரு வேளாண் குடும்பத்தில் தண்டபாணிப் பிள்ளை, மகாலெட்சுமி அம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார் [1]. இவரது இயற்பெயர் முருகேசன். பள்ளிப்படிப்பில் நாட்டம் இல்லாமையால், ஐந்தாம் வகுப்பிலேயே பள்ளி வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைத்தார். உலகியல் அனுபவம் பெறவேண்டி, வீட்டை விட்டு வெளியேறி விழுப்புரம் சென்றார். அங்கு, அவர் மாமாவின் மேற்பார்வையில் வளர்ந்தார். அவர் ஜெயகாந்தனைப் பொதுவுடைமைக் கோட்பாடுகளுக்கும் பாரதியின் எழுத்துகளுக்கும் அறிமுகப்படுத்தினார்.
அரசியல் வாழ்க்கை
ஜெயகாந்தன் சில ஆண்டுகள் விழுப்புரத்தில் வாழ்ந்த பின் சென்னைக்குக் குடிபெயர்ந்தார். அங்குப் பெரும்பாலான நேரத்தை சி.பி.ஐ-யின் ஜனசக்தி அலுவலக அச்சகத்தில் பணிபுரிந்தும், ஜனசக்தி இதழ்கள் விற்றும் கழித்தார். 1949-ஆம் ஆண்டு சி. பி. ஐ மீதும் அதன் உறுப்பினர்கள் மீதும் தடை விதிக்கப்பட்டது. ஆதலால் சில மாதங்கள், தஞ்சையில் காலணிகள் விற்கும் கடை ஒன்றில் பணிபுரிந்தார். இந்த எதிர்பாராத இடைவேளை இவர் வாழ்க்கையில் முதன்மையான காலகட்டமாக அமைந்தது. சிந்திக்கவும் எழுதவும் அப்பொழுது நேரம் கிடைத்தது. இக்காலகட்டத்தில், தமிழ்நாட்டில் முக்கிய அரசியல் மாற்றங்களும் நேர்ந்தன. தி.மு.க., தி.க. -வின் வளர்ச்சியால், சி.பி.ஐ மெதுவாக மறையத் துவங்கியது. உட்கட்சிப் பூசல்களினாலும், கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளினாலும், ஜெயகாந்தன் சி.பி.ஐ-யிலிருந்து விலகினார். பின்னர் காமராசருடைய தீவிரத் தொண்டனாக மாறித் தமிழகக் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.
இலக்கிய வாழ்க்கை
ஜெயகாந்தனின் இலக்கிய வாழ்க்கை 1950களில் தொடங்கியது - சரஸ்வதி, தாமரை, கிராம ஊழியன், ஆனந்த விகடன் போன்ற ஏடுகளில் இவரது படைப்புகள் வெளியாயின. படைப்புகளுக்குப் புகழும் அங்கீகாரமும் கிடைத்தன. இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவராகப் போற்றப் பெற்றார். ஜெயகாந்தன் சில ஆண்டுகள், தமிழ்த் திரையுலகிலும் வலம் வந்தார். இவரது நாவல்களான "உன்னைப் போல் ஒருவன்", "சில நேரங்களில் சில மனிதர்கள்" ஆகியவை படமாக்கப்பட்டன. இதில் "உன்னைப் போல் ஒருவன்" சிறந்த மாநில மொழித் திரைப்படத்திற்கான குடியரசுத் தலைவர் விருதில் மூன்றாம் விருதைப் பெற்றது.
படைப்புகள்
தன் வரலாறு
ஒர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள் (அக்டோபர் 1974 )
ஒர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள் (செப்டம்பர் 1980 )
ஓர் இலக்கியவாதியின் பத்திரிகை அனுபவங்கள் (டிசம்பர் 2009)
2009-ம் ஆண்டின் இலக்கியத்துறைக்கான பத்ம பூஷன் விருது [4]
ரஷ்ய விருது - இமயத்துக்கு அப்பால்
மற்ற எழுத்தாளர்களின் கருத்துகள்
"ஜெயகாந்தன், எத்தகைய பாத்திரங்களைப் படைத்தாலும் அந்தப் பாத்திரங்களின் சிறந்த அம்சங்களைக் குறிப்பிடத் தவறுவதில்லை. துவேஷத்தைப் பரப்புவது, அவருடைய இயல்புக்குச் சற்றும் ஒவ்வாதது. அவர் அரசியலில் தொடர்ந்து பங்கு பெறாமல் போனதற்கு இதுகூட காரணமாக இருந்திருக்கலாம்" - அசோகமித்திரன்
"மனதைக் கிள்ளி மோகலாகிரியைத் தூவும் சொற்கள் பல தமிழில் உண்டு. ‘ஜெயகாந்தன்’ என்ற பெயரே அப்படிப்பட்டதுதான். இந்தப் பெயர் அறிமுகமாகி என்னளவில் நாற்பத்தைந்து வருடங்களாவது இருக்கும். ஆனாலும், இந்தப் பெயர் தரும் கவர்ச்சியும், அதன் மீதான பிரேமையும் அப்படியே இருக்கின்றன. யதார்த்தத்தின் மற்றொரு பெயர் ‘தத்ரூபம்’ என்றால், ஜெயகாந்தனின் கதைகள் எல்லாம் அவ்வளவு தத்ரூபமாக இருந்தன. ஜெயகாந்தன் என்ற மேதாவிலாசமிக்க படைப்பாளியின் ஊற்றுக்கண் எங்கே இருந்து புறப்படுகிறது என்று அனுமானிப்பது கடினம். நதிமூலம், ரிஷிமூலம் தேடுகிற மாதிரியான சமாச்சாரம்தான் இது. என்றாலும், ஜெயகாந்தனே தன்னைப் புதுமைப்பித்தனின் வாரிசு என்பதுபோல் ஒரு சந்தர்ப்பத்தில் குறிப்பிட்டது ஞாபகத்துக்கு வருகிறது. இதுதான் நிஜமும். " - வண்ணநிலவன்
"பாரதியார் வாழ்ந்த காலங்களில் கௌரவிக்கப்பட்டதில்லை. லியோ டால்ஸ்டாய் நோபல் பெறாதவர். போர்ஹே நோபல் பரிசுக்கு சிபாரிசு செய்யப்பட்டு நிராகரிக்கப்பட்டவர். விருதும் கௌரவமும் சரியான நேரத்தில், சரியான நபருக்கு, சரியான அமைப்புகளால் வழங்கப்படுவது ஒரு போதும் நிகழ்வதில்லை. அதற்காக விருதுகளால் மட்டுமே எழுத்தாளர்கள் கௌரவம் அடைவதுமில்லை. ஜெயகாந்தன் எல்லா விருதுகளுக்கும் தகுதியானவர். எல்லா விருதுகளைத் தாண்டியும் மிகுந்த ஆளுமையும் உயர்வும், தனித்துவமும் கொண்டவர்." - எஸ். ராமகிருஷ்ணன்
" ஜெயகாந்தன் ஒரு நீராவி என்ஜின் போல ஆற்றலும் வேகமும் கொண்ட படைப்பாளி என்பதில் சற்றும் சந்தேகமில்லை. ஆனால் நீராவி என்ஜின்கள் கடந்த காலத்தின் அடையாளம். " - மாலன்
விமர்சனம்
எழுத்தாளர் ஜெயமோகன் தனது முன்னோடிகள் விமர்சன வரிசையில், மண்ணும் மரபும் எனும் நூலில் ஜெயகாந்தனின் படைப்புலகை குறித்து விவாதித்துள்ளார். மேலும் சில கட்டுரைகளை அவரது தளத்தில் எழுதியுள்ளார்[5]. விமர்சகர் எம். வேதசகாயகுமார் தனது முனைவர் பட்ட ஆய்வை புதுமைப்பித்தனும் ஜெயகாந்தனும் ஓர் ஒப்பாய்வு எனும் நூலாக்கியுள்ளார். 2009ல் முனைவர்.ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் ஜெயகாந்தனின் குறுநாவல்களில் ஆய்வு செய்துள்ளார்[6]. ஜெயகாந்தன் இலக்கியத்தடம், ஜெயகாந்தன் ஒரு பார்வை ஆகிய நூல்களை முறையே ப.கிருஷ்ணசாமி, கே.எஸ்.சுப்ரமணியன் ஆகியோர் எழுதியுள்ளனர்.
ரவிசுப்பிரமணியன்எல்லைகளை விஸ்தரித்த எழுத்து கலைஞன் என்ற பேரில் ஒரு ஆவணப்படம் எடுத்துள்ளார். ஜெயகாந்தனின் மறைவிற்கு பிறகு அவர் பற்றி எழுத்தாளர்கள் ஆற்றிய உரைகளும் தொகுக்கப்பட்ட நூல்களும் முக்கியமானவை.
மறைவு
ஜெயகாந்தன் 08.04.2015 அன்று இரவு 9.00 மணிக்கு உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்.[7]