பரமத்தி-வேலூர் (Paramathi-Velur) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்திலுள்ளபரமத்தி-வேலூர் வட்டத்தில் அமைந்த நகரம் ஆகும்[3]. மேலும் நாமக்கல் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். பரமத்தி மற்றும் வேலூர் என்ற இரு ஊர்கள் இணைந்து பரமத்தி-வேலூர் என குறிப்பிடப்படுகிறது.
தேசிய நெடுஞ்சாலை 7 (NH-7) இதன் வழியாக செல்கிறது. கரூர், திருச்சி மாவட்டங்கள் இதன் எல்லைகளாக உள்ளன. வெற்றிலை மற்றும் கரும்பிற்கு பெயர் போன மோகனூர் வேலூரின் எல்லைப்பகுதியாகும்.
பெயர்க்காரணம்
பல கருவேல மரங்களால் சூழப்பட்ட ஊர் என்பதால் இவ்வூர் வேலூர் என்று அழைக்கப்பட்டது மற்றும் அருகில் உள்ள நன்செய் இடையாரில் உள்ள திருவேலீநாதர் (திரு+வேல்+நாதர்) திருக்கோவில் சிவபெருமான் பெயரால் வேல்+ஊர் சேர்ந்து வேலூர் என பெயர் பெற்றதாகவும் கூறுவர்.
கோயில்கள் மற்றும் விழாக்கள்
பரமத்தி வேலூர் பஞ்சமுக விநாயகர் சிலை
காவேரிக்கரை காசி விஸ்வநாத சுவாமி - ஆடிப்பெருக்கு திருவிழா (காவிரி வெள்ளப்பெருக்கின் புனித விழா) படகு போட்டி மற்றும் தீப மிதவை விழாவாக கொண்டாடப்பெறுகிறது.
நஞ்சை இடையாறு அக்னிமாரியம்மன் - இருபதிற்கும் மேற்பட்ட கிராமங்கள் சேர்ந்து பங்குனி மாதம் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் தீகுண்டத் திருவிழா (60 அடி நீளம் கொண்டது) பிரசித்தி பெற்ற ஒன்றாகும்.
பரமத்தி-வேலூர் மகாமாரியம்மன் கோவில் பங்குனி தேர் திருவிழா கோலாகமாக நடைபெறுகிறது. 18பட்டிக்கு சொந்தமான விழா இது.
கபிலர்மலை முருகன் - தை பூசம், பங்குனி உத்திரம், கார்த்திகை தீபம் போன்ற முருகனுக்கு உகந்த பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன.
பஞ்சமுக விநாயகர் - வேலூர் முக்கிய சாலையில் அமைந்துள்ள ஐந்துமுக விநாயகருக்கு விநாயக சதுர்த்தி முக்கிய விழாவாகும்.
கட்டிசொறு கருப்பனார், மோகனூர் நாவலடியான் போன்ற கிராமதேவதை கோயில்கள் ஆண்டிற்கு ஒரு முறை விழா கோலம் பூணுகின்றன.
பொத்தனூர் .மாரியம்மன் ஆலயம் சோழிய வேளாளர்களின் கோவில்
பூக்குழி இறங்குதல்
சுற்றுலா இடங்கள்
ஜேடர்பாளையம் தடுப்பணை 20கி.மீட்டர் தொலைவில் உள்ளது.
கபிலர் மலை
காவிரிக்கரை (கரூர்-வேலூர்)
தொழில்கள்
உழவும், உழவு சார்ந்த மருதநிலத் தொழிலும் இங்கே போற்றப்படுகிறது. கரும்பு, வாழை, நெல், வெற்றிலை, கடலை, தேங்காய் போன்றவை காவிரி நீர் பாசன வசதியுடனும், சிறுவாய்க்கால்களின் உதவியாலும் நன்கு விளைவிக்கப்படுகின்றன. வாத்து மேய்த்தல், மீன் பிடித்தல், பால் உற்பத்தி, கோழி வளர்ப்பு, கொசுவலை பின்னல், பாய் வேய்தல் போன்ற சிறுதொழில்களும் இங்குள்ள மக்கள் செய்து வருகின்றனர்.
சர்க்கரை உற்பத்தி, காகித உற்பத்தி, வாகனங்கள் வடிவமைப்பு, மூங்கில் வேலைப்பாடுகள் போன்றவை முக்கிய ஆலை தொழில்களாகும்.