மலாயா கூட்டமைப்பு மாநிலங்களின் தொடருந்து சேவை (ஆங்கிலம்: Federated Malay States Railways (FMSR); மலாய்: Keretapi Negeri-Negeri Melayu Bersekutu) என்பது 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரித்தானிய மலாயா எனும் இன்றைய தீபகற்ப மலேசியா மற்றும் சிங்கப்பூர் பகுதிகளில், செயல்பாட்டில் இருந்த ஓர் ஒருங்கிணைந்த தொடருந்து சேவையாகும்.[1]
மலாயாவின் பல்வேறு பகுதிகளில் தனித்தனியாகச் செயல்பட்ட பல்வேறு தொடருந்து நிறுவனங்களை; மலாயா கூட்டமைப்பு மாநிலங்களின் தொடருந்து சேவை, தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது.
பொது
மலாயா கூட்டமைப்பு மாநிலங்களின் தொடருந்து சேவை உருவாகும் வரை, மலாயாவின் தொடருந்து அமைப்புகள் தனித் தனியாகச் செயல்பட்டன; மற்றும் அவை, வணிகரீதியாகச் செயல்பட்டன. பெரும்பாலும் அவை தீபகற்ப மலேசியாவின் மேற்கு கடற்கரையில் மையம் கொண்டு இருந்தன. அன்றைய நிலையில், எந்த ஒரு தொடருந்து அமைப்பும் மாநிலங்களுக்கு இடையிலான சேவைகளில் ஈடுபடவில்லை.
மேலும் அவை தனிப்பட்ட நோக்கங்களை நிறைவேற்றுவதற்காகச் செயல்பட்டன. 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில், மலாயாவில் குறைந்தது ஆறு தனித்தனி தொடருந்து நிறுவனங்கள் இருந்தன.
சேவைகள்
பேராக் - பேராக் அரசு தொடருந்து (Perak Government Railway): முதன்மையாக மாநிலத்திற்குள் ஈயச் சுரங்கங்களுக்குச் சேவை செய்யப் பணிக்கப்பட்டது; இரண்டு தனித்தனி வழித்தடங்களாக இயங்கியது; பாரிட் புந்தார் மற்றும் போர்ட் வெல்ட் இடையிலான தைப்பிங் வழித்தடம்; மற்றும் எங்கோர், தெலுகான்சன் இடையிலான மற்றொரு வழித்தடம்[3]
ஜொகூர் - மூவார் அரசு தொடருந்து (Muar State Railway):ஜொகூர், மூவார் மாவட்டத்தில் வேளாண் பொருட்கள் மற்றும் பயணிகளை ஏற்றிச் செல்வதற்கான தொடருந்து அமைப்பு
சிலாங்கூர் - சிலாங்கூர் அரசு தொடருந்து (Selangor Government Railway):கிள்ளான் - கோலாலம்பூருக்கு இடையே சரக்குகளைக் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டது. 1900-இல் கிள்ளான் துறைமுகம் (Port Swettenham) வரை நீட்டிக்கப்பட்டது; அடுத்து கோலாலம்பூர், புடு, அம்பாங் வரையிலான வழித்தடம்; ஈயச் சுரங்கங்களை இணைக்கும் வழித்தடங்கள்