கண்ணதாசன் (Kannadasan, 24 சூன் 1927 – 17 அக்டோபர் 1981), புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். சாகித்ய அகாதமி விருது (1980) பெற்றவர்.
வாழ்க்கைக் குறிப்பு
கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா. இவர் தமிழ்நாட்டில் உள்ள காரைக்குடி அருகே சிறுகூடல்பட்டி என்ற ஊரில் நாட்டுக்கோட்டை நகரத்தார் மரபில் சாத்தப்ப செட்டியார், விசாலாட்சி ஆச்சி இணையருக்கு எட்டாவது மகனாகப் பிறந்தார்.[சான்று தேவை] (மறைவு 4-2-1955[1]). இவருடன் உடன்பிறந்தோர் பத்து பேர். சிறு வயதில் இவரைச் சிகப்பு ஆச்சி (மறைவு 25-12-1958)[2] என்பவர் 7000 ரூபாய்க்குத் தத்து எடுத்துக்கொண்டார். அவர் வீட்டில் நாராயணன் என்ற பெயரில் வளர்ந்தார். ஆரம்பக் கல்வியைச் சிறுகூடல்பட்டியில் பயின்றார். அமராவதிபுதூர் உயர்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். 1943-ஆம் ஆண்டில் திருவொற்றியூர் ஏஜாக்ஸ் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். இவர் ஒரு பத்திரிகை ஆசிரியர் பணிக்குச் சென்றபோது வைத்துக் கொண்ட புனைப்பெயர் தான் கண்ணதாசன்.[3]
குடும்பம்
கண்ணதாசனுக்கு முதல் திருமணம் பொன்னழகி ஆச்சி (இறப்பு:மே 31, 2012) என்பவரோடு 1950பிப்ரவரி 9-ஆம் நாள் காரைக்குடியில் நடைபெற்றது.[4] இவர்களுக்குக் கண்மணிசுப்பு, கலைவாணன், ராமசாமி, வெங்கடாசலம் ஆகிய 4 மகன்களும், அலமேலு சொக்கலிங்கம், தேனம்மை, விசாலாட்சி ஆகிய 3 மகள்களும் உள்ளனர்.[5][6]
கண்ணதாசன், பார்வதி என்பவரை 1951நவம்பர் 11-ஆம் நாள் [7] இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்குக் காந்தி, கமல், அண்ணாதுரை, கோபால கிருஷ்ணன், சீனிவாசன் ஆகிய 5 மகன்களும், ரேவதி, கலைச்செல்வி ஆகிய 2 மகள்களுமாக ஏழு குழந்தைகள் உள்ளனர்.[6]
ஐம்பதாவது வயதில் புலவர் வள்ளியம்மை என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விசாலி என்னும் மகள் ஒருவர் உள்ளார்.
அரசியல் ஈடுபாடு
அண்ணாவின்திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்த கண்ணதாசன், 1961 ஏப்ரல் 9-இல் கருத்து வேறுபாட்டால் அக்கட்சியில் இருந்து வெளியேறினார். ஈ. வெ. கி. சம்பத்துடன் இணைந்து தமிழ் தேசிய கட்சியைத் தொடங்கினார். பின்னர் தமிழ் தேசிய கட்சி காங்கிரசுடன் இணைந்தது. காங்கிரஸ் பிளவுபட்ட போது இந்திரா காந்தி பக்கம் நின்றார். அரசியல் ரீதியாக எம் .ஜி. ஆரைக் கண்ணதாசன் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். தம்மைப் பற்றிக் கண்ணதாசன் விமர்சித்தபோதிலும் தமிழக அரசின் அரசவைக் கவிஞராகக் கண்ணதாசனை 1978-இல் எம்.ஜி.ஆர் நியமித்தார்.
மறைவு
கண்ணதாசன் உடல்நலக் குறைவு காரணமாக 1981, ஜூலை 24-இல்சிகாகோ நகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அக்டோபர் 17 சனிக்கிழமை இந்திய நேரம் 10.45 மணிக்கு இறந்தார். அக்டோபர் 20-இல், இவரது உடல் அமெரிக்காவிலிருந்துசென்னைக்குக் கொண்டு வரப்பட்டு, இலட்சக்கணக்கான மக்களின் இறுதி அஞ்சலிக்குப் பிறகு அரசு மரியாதையுடன் அக்டோபர் 22-இல் எரியூட்டப்பட்டது.
மணிமண்டபம்
தமிழ்நாடு அரசு கண்ணதாசன் நினைவைப் போற்றும் வகையில் சிவகங்கை மாவட்டம்காரைக்குடியில் புதிய பேருந்து நிலையம் அருகில் கவியரசு கண்ணதாசன் மணிமண்டபம்[8] அமைத்துள்ளது. 84 இலட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இம்மணிமண்டபம் 1981-இல் முதல்வர் எம்.ஜி.ஆரால் அறிவிக்கப்பட்டு, 1990-இல் முதல்வர் மு. கருணாநிதியால் அடிக்கல் நாட்டப்பட்டு, 1992-இல் முதல்வர் ஜெ. ஜெயலலிதாவால் திறந்து வைக்கப்பட்டது. இரண்டு தளங்களைக் கொண்ட இம்மணிமண்டபத்தில் கண்ணதாசனின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. மேல்தளத்தில் அரங்கமும், கீழ்தளத்தில் 2,400 நூல்களுடன் ஒரு நூலகமும் இயங்கி வருகின்றது. கண்ணதாசனின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளன.[9][10][11]
விருதுகள்
சாகித்ய அகாதமி விருது (சேரமான் காதலி படைப்பிற்காக) (1980)