இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2004
2004 இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் இலங்கையின் 13வது நாடாளுமன்றத்திற்கு 225 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 2004, ஏப்ரல் 4 இல் இடம்பெற்றது. 12வது நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெற்று மூன்றாண்டுகளுக்குள் அரசுத்தலைவர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அதனைக் கலைத்து புதிய தேர்தலுக்கான அறிவித்தலை விடுத்தார். 225 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசு 82 இடங்களை மட்டும் கைப்பற்றி தேர்தலில் தோற்றது. எதிர்க்கட்சிக் கூட்டணி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி 105 இடங்களை வென்றது. அறுதிப் பெரும்பான்மைக்கு எட்டு இடங்கள் போதாமல் இருந்தும் அது ஆட்சியமைத்தது. அரசுத்தலைவர் குமாரதுங்க முன்னாள் தொழிலமைச்சர் மகிந்த ராசபக்சவை பிரதமராக அறிவித்தார். கட்சிகள்அரசுத்தலைவர் சந்திரிக்கா குமாரதுங்கவின் இலங்கை சுதந்திரக் கட்சியுடன் இடதுசாரி மக்கள் விடுதலை முன்னணி கூட்டுச் சேர்ந்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி என்ற கூட்டணியை அமைத்தது. மக்கள் கூட்டணியின் ஏனைய கூட்டுக் கட்சிகளாக இருந்த பொதுவுடைமைக் கட்சி, சனநாயக ஐக்கிய தேசிய முன்னணி, லங்கா சமசமாஜக் கட்சி, மகாஜன எக்சத் பெரமுன, இலங்கை மக்கள் கட்சி ஆகியன பின்னர் ஐமசுகூ உடன் இணைந்தன. 2001 தேர்தலில், மக்கள் கூட்டணியும் மக்கள் விடுதலை முன்னணியும் வெவ்வேறாகப் போட்டியிட்டன. அப்போது மவிமு 9.1% வாக்குகளைப் பெற்று 16 இடங்களைக் கைப்பற்றியிருந்தது. ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி சிறிய கட்சிகளான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் போன்ற சிறிய கட்சிகளுடன் இணைந்து ஐக்கிய தேசிய முன்னணி (ஐதேமு) என்ற கூட்டணியில் போட்டியிட்டது. பௌத்த, சிங்கள தேசியவாதக் கட்சியான ஜாதிக எல உறுமய, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ததேகூ), சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈபிடிபி) போன்றவையும் போட்டியிட்டு நாடாளுமன்ற இருக்கைகளைப் பெற்றது. பரப்புரை2003 அக்டோபரில் அரசுத்தலைவர் சந்திரிக்கா குமாரதுங்க நாட்டில் அரசரகால நிலையைப் பிறப்பித்து அமைச்சரவையில் மூன்று முக்கிய அமைச்சர் பதவிகளைத் தம்வசப் படுத்தியதை அடுத்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசிய முன்னணி அரசுக்கும், அரசுத்தலைவருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகள் மீது விக்கிரமசிங்க மென்மையான போக்கைக் கடைப்பிடிப்பதாக குமாரதுங்க குற்றம் சாட்டினார். அத்துடன் தாம் கடும் போக்கைக் கைடைப்பிடிக்கப்போவதாக வாக்குறுதி அளித்தார். அதேவேளையில், போர் நிறுத்த உடன்பாட்டின் மூலம் தாம் நாட்டில் பொருளாதார மேம்பாட்டைக் கொண்டு வந்திருப்பதாகவும், ஈழப் பிரச்சினைக்கு தீர்வு ஒன்றை எட்டவே தாம் விரும்புவதாகவும் ரணில் விக்கிரமசிங்க பரப்புரை நிகழ்த்தினார். தேர்தல் முடிவுகள்
|
Portal di Ensiklopedia Dunia