மேலிருந்து, இடமிருந்து வலமாக: குவாந்தான் ஆற்றின் கரையில் குவாந்தான் நகரம்; சுல்தான் அகமது சா பள்ளிவாசல்; குவாந்தான் 188, குவாந்தான் மாநகராட்சி கட்டடம்; குவாந்தான் நீதிமன்ற வளாகம், தெலுக் செம்பெடாக் கடற்கரை, குவாந்தான் துறைமுகம்
குவாந்தான் (ஆங்கிலம்: Kuantan; மலாய்: Kuantan; சீனம்: 關丹; ஜாவி: ڤكوانتن); என்பது மலேசியா, பகாங் மாநிலத்தில் ஒரு நகரம். அதுவே அந்த மாநிலத்தின் தலைநகரமாகும். மலேசியாவின் 18-ஆவது பெரிய நகரமான குவாந்தான், ஏறக்குறைய 324 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சுமார் 80 கி.மீ. தொலைவில் இருக்கின்றது.
குவாந்தான் மாநகரம், குவாந்தான் ஆற்றுக்கு அருகாமையிலும்; தென் சீனக் கடலை நோக்கியவாறு அமையப் பெற்று இருக்கிறது. பகாங் மாநிலத்தின் நிர்வாக மையம், 1955-ஆம் ஆண்டு வாக்கில் கோலா லிப்பிஸ் நகரில் இருந்து குவாந்தான் மாநகரத்திற்கு மாற்றப்பட்டது.
பொது
பகாங் வரலாறு
பகாங் எனும் சொல்லை Phang அல்லது Pahangh என்று சீனர்கள் அழைக்கின்றனர். அரபு வணிகர்களும் ஐரோப்பிய வணிகர்களும் பகாங்கை Paon, Phamm, Paham, Fanhan என்று பல்வேறான சொற்களில் அழைத்தனர். வரலாற்று நூல்களில் Panghang அல்லது Fanjab என்றும் அழைக்கப்பட்ட சான்றுகள் உள்ளன.[5]
ஆனால், பகாங் எனும் சொல் ஒரு சயாமிய சொல்லில் இருந்து வந்திருக்கலாம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். சயாமிய மொழியில் பகாங் என்றால் ஈயக் கனிமம் என்று பொருள்படும்.
முன்பு காலத்தில் சயாமிய பூர்வீகக் குடியினர் இங்கு குடியேறி, சில கனிமப் பகுதிகளைத் திறந்தனர்.[6] பகாங் ஆற்றில் ஒரு பெரிய மகாங் மரம் விழுந்ததால், பகாங் எனும் பெயர் வந்திருக்கலாம் என்று ஒரு மலாய் மொழி புரதானக் கதையும் புழக்கத்தில் உள்ளது.[7]
பெக்கான் அரச நகரம்
5000 ஆண்டுகளுக்கு முன்னர் பகாங் காடுகளில் உள்ள குகைகளில், நாடோடி மக்கள் வாழ்ந்ததற்கான வரலாற்றுப் படிவங்கள் கிடைத்து உள்ளன. பகாங் மாநிலத்தில் தெம்பிலிங் (மலாய்:Tembeling) எனும் ஆறு இருக்கிறது. இந்த ஆற்றில் ஈயம், தங்க உலோகத் தாதுகள் கிடைத்தன. அந்த உலோகங்கள் வெளிநாட்டு வணிகர்களைக் கவர்ந்தன.[8]
கி.பி.8-ஆம், 9-ஆம் நூற்றாண்டுகளில் இந்தோனேசியாவை ஆண்டு வந்த ஸ்ரீவிஜயா பேரரசில் இருந்து வணிகர்கள் பகாங்கிற்கு வந்துள்ளனர். அந்த உலோகங்களை வாங்கிச் சென்று வியாபாரம் செய்து வந்தனர். ஒரு காலக்கட்டத்தில், தீபகற்ப மலேசியாவின் தென் பகுதியின் பாதி நிலப்பகுதி, பகாங் மாநிலத்தின் ஆட்சியின் கீழ் இருந்தது.
பகாங்கின் பழைய பெயர் இந்திராபுரம். அதன் தலைநகரமாகவும் அரச நகரமாகவும் பெக்கான் நகரம் விளங்கியது. இன்றும் பெக்கான் நகரம் பகாங் மாநிலத்தின் அரச நகரமாக விளங்கி வருகிறது.
சிது அரசு
1-ஆம் நூற்றாண்டில் சிது, ஆங்கிலம்: Chih-Tu; or Chihtu; or Ch-ih-t'u;; சமசுகிருதம்: Raktamaritika or Raktamrittika;சீனம்: 赤土国; மலாய்: Tanah Merah) எனும் பேரரசின் ஒரு பகுதியாக குவாந்தான் நகரம் இருந்தது. 'சிது' என்றால் 'சிகப்பு மண்' (Red Earth Kingdom) என்று பொருள்.[9][10]
11-ஆம் நூற்றாண்டில், குவாந்தான் நிலப்பகுதி, சயாமியர்களால் கையகப்படுத்தப் படுவதற்கு முன்பு, பெங்-கெங் (Pheng-Kheng) எனும் மற்றும் ஒரு சிறிய பேரரசால் ஆளப்பட்டது. 15-ஆம் நூற்றாண்டில், சிறிது காலம் மலாக்கா பேரரசாலும் ஆளப்பட்டது.
19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், சீன சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் சீன வணிகர்களின் வருகையால் குவாந்தான் வளர்ச்சி பெறத் தொடங்கியது. குவாந்தான் நகரம் 1850-ஆம் ஆண்டுகளில் நிறுவப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இரண்டாம் உலகப் போர்
மற்றும் ஒரு வரலாற்று நிகழ்வு; 1941 டிசம்பர் 9-ஆம் தேதி, இரண்டாம் உலகப் போரின் தொடக்கத்தில், எச்.எம்.எஸ். பிரின்ஸ் ஆப் வேல்ஸ் (HMS Prince of Wales); மற்றும் எச்.எம்.எஸ். ரிபல்ஸ் (HMS Repulse) எனும் இரு போர்க் கப்பல்கள் மலாயாவின் கிழக்கு கடற்கரை வழியாகக் குவாந்தான் துறைமுகத்திற்குச் செல்லும் போது, ஜப்பானிய விமானங்களின் குண்டு வீச்சுகளுக்கு இலக்காகி தென்சீனக் கடலில் மூழ்கின.[11]
தீபகற்ப மலேசியாவின் கிழக்குக் கரையில் மிக பெரிய நகரமாக குவாந்தான் நகரம் பெயர் பெற்றது. இந்த நகரத்தில் 607,778 மக்கள் குடியிருக்கின்றனர். இந்த நகரம் தென் சீனக் கடற்கரைக்கு அருகாமையில் அமைந்து இருப்பதால், குவாந்தான் மாவட்டம் கடற்கரைகளுக்குப் பிரசித்திப் பெற்றது.
பொருளாதாரம்
குவாந்தான் மாநகரின் முக்கியப் பொருளாதார நடவடிக்கையாக அமைவது சுற்றுலாத் துறையாகும். அடுத்த நிலையில் மீன்பிடித் துறையும் விவசாயமும் முன்னிலை வகிக்கின்றன. அண்மைய காலங்களில் மின்னியல் தொழில்நுட்பத் தொழிற்சாலைகளும் குவாந்தான் நகரில் கட்டப்பட்டு உள்ளன.
கடல்கரைப் பகுதிகள்
பெரும்பாலும் மலைகள், குன்றுகளால் சூழப்பட்ட பகாங் மாநிலத்தில் கடல்கரை ஓரங்களில் பச்சை பசேல் சமவெளிகளைக் காண முடியும். குவாந்தான் நகரம், கடல்கரையோரத்தில் தான் அமைந்துள்ளது. கடல்கரைக்கு அப்பால் சில பவளத் தீவுகளும் உள்ளன. அவற்றுள் குறிப்பிடத்தக்கது தியோமான் தீவு (Pulau Tioman) எனும் தீவாகும்.
கடல்கரை ஓரங்களில் வாழ்பவர்கள் பெரும்பாலும் மீனவர்களாக இருக்கின்றனர். இவர்கள் மீன்களைக் காய வைத்து கருவாடு செய்து வெளியூர்களுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். இங்கு கிடைக்கும் கெரொபோக் லெக்கோர் keropok lekor எனும் ஒரு வகையான கருவாட்டு அடை மலேசியாவில் மிகவும் புகழ்பெற்றதாகும்
தட்பவெப்ப நிலை
குவாந்தானின் தட்ப வெப்ப நிலை வெப்ப மண்டல மழைக்காடு ஆகும். தட்ப வெப்ப நிலையில் அதிகமான மாற்றங்கள் இல்லை.
குவாந்தான் நகரில் 78.5% மலாய் மக்களும், 17.9% சீன மக்களும், 3.3% இந்திய மக்களும் மற்றும் 0.3% மற்ற இனத்தாரும் வாழ்கின்றனர்.
பின் விவரங்கள் மலேசிய புள்ளியியல் துறை 2010-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் அமைந்துள்ளது.
பெக்கான் இனக்குழுக்கள் 2010-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு
இனம்
மக்கள் தொகை
விழுக்காடு
பூமிபுத்ரா
335,599
78.5%
சீனர்
76,525
17.9%
இந்தியர்
14,108
3.3%
மற்றவர்
1,282
0.3%
மொத்தம்
427,514
100%
குவாந்தான் மாவட்டத் தமிழ்ப்பள்ளிகள்
மலேசியா; பகாங்; குவாந்தான் மாவட்டத்தில்(Kuantan District) 3 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் 365 மாணவர்கள் பயில்கிறார்கள். 46 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.
↑primuscoreadmin (19 June 2019). "Profil YDP". Archived from the original on 28 சனவரி 2020. Retrieved 5 ஜூன் 2022. {{cite web}}: Check date values in: |access-date= (help)
↑Dougald J. W. O'Reilly (2007). Early Civilizations of Southeast Asia. Rowman Altamira. ISBN0-7591-0279-1.
↑Geoff Wade (2007). Southeast Asia-China interactions: reprint of articles from the Journal of the Malaysian Branch, Royal Asiatic Society. Malaysian Branch of the Royal Asiatic Society. ISBN967-9948-38-2.