லிப்பிஸ் மாவட்டம் (ஆங்கிலம்: Lipis District; மலாய்: Daerah Lipis; சீனம்: 立卑县; ஜாவி: ﻟﻴﭭﻴﺲ ); என்பது மலேசியா, பகாங் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இதன் தலைப் பட்டணம் கோலா லிப்பிஸ். பகாங் மாநிலத்தில் வட மேற்கில் அமைந்து உள்ளது.
பகாங் மாநிலத்தில் மிகப் பழமையான நகரங்களில் கோலா லிப்பிஸ் நகரமும் ஒன்றாகும். கோலாலம்பூரில் இருந்து 171 கி.மீ.; குவாந்தான் நகரில் இருந்து 235 கி.மீ. தொலைவிலும் இந்த நகரம் உள்ளது.[2]
லிப்பிஸ் மாவட்டத்திற்கு மேற்கில் கேமரன் மலை, கிழக்கில் ஜெராண்டுட்; வடக்கில் ரவுப் ஆகிய நகரங்கள் உள்ளன. தவிர கிழக்கில் பேராக் மாநிலம்; வடக்கில் கிளாந்தான் மாநிலம் ஆகியவை எல்லைகளாக உள்ளன.
பொது
பிரித்தானியர்கள் இந்த மாவட்டத்திற்கு வருவதற்கு முன்னதாகவே, மக்கள் இங்கு குடியேறி இருந்தனர். 1887-ஆம் ஆண்டில் ரவுப் நகரில் தங்கம் தோண்டி எடுக்கப் பட்டது. அதனால் கோலா லிப்பிஸ் நகரத்திலும், லிப்பிஸ் மாவட்டத்திலும் மக்கள் குடியேற்றம் அதிகமானது.
கோலா லிப்பிஸ் நகரம் 1898-ஆம் ஆண்டில் இருந்து 1955-ஆம் ஆண்டு வரை 57 ஆண்டுகளுக்கு பகாங் மாநிலத்தின் நிர்வாகத் தலைநகராக இருந்தது. அதன் பின்னர் குவாந்தான் புதிய தலைநகராக தேர்ந்தெடுக்கப்பட்டது.
ஈயம், தங்கம் போன்ற கனிமங்கள் மற்றும் காட்டுப் பொருட்களின் விளைச்சல்களுக்கு லிப்பிஸ் மாவட்டம் பெயர் பெற்றது. லிப்பிஸ் மாவட்டத்தில் 10 முக்கிம்கள் உள்ளன.
தாமான் நெகாரா தேசியப் பூங்கா
இந்த மாவட்டத்தில் மெராப்போ எனும் சிறுநகரம் உள்ளது. அங்கு இருந்து 7 கி.மீ. தொலைவில் சுங்கை ரேலாவ் எனும் இடம் உள்ளது. இந்த இடம்தான் தாமான் நெகாரா எனும் தேசியப் பூங்காவின் நுழைவு இடங்களில் ஒன்றாகும்.
2010-ஆம் ஆண்டு நிலவரப்படி, லிப்பிஸ் மாவட்டத்தில் 74,581 பேர் வசிக்கின்றனர். பெரும்பான்மையாக மலாய் மக்கள் (85.3%); சீனர்கள் 10.5%; இந்தியர்கள் 4%; மற்றவர்கள் 0.2%.
லிப்பிஸ் மாவட்ட இனக்குழுக்கள் (2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு)
இனம்
மக்கள் தொகை
விழுக்காடு
மலாய்க்காரர்கள்
74,694
87.5%
சீனர்கள்
7,630
8.9%
இந்தியர்கள்
2,872
3.4%
மற்றவர்கள்
145
0.2%
மொத்தம்
85,341
100%
மாயா (Mayah) இனத்தைச் சேர்ந்த ஓராங் அஸ்லி மக்களில், மின்டில் மொழி (Mintil language) பேசுபவர்கள் 400 பேர் இந்த லிப்பிஸ் மாவட்டத்தில் உள்ளனர்.[6]
லிப்பிஸ் மாவட்டத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகள்
லிப்பிஸ்மாவட்டத்தில் (Kuala Lipis District) 4 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் 137 மாணவர்கள் பயில்கிறார்கள். 34 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.[7]