யூட்டா கடற்கரை
யூட்டா கடற்கரை (Utah Beach) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஓவர்லார்ட் நடவடிக்கையில் நார்மாண்டி கடற்கரையின் ஒரு பகுதிக்கு வழங்கப்பட்ட குறிப்பெயர். (யூட்டா அமெரிக்க மாநிலங்களில் ஒன்று). நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பிலிருந்த பிரான்சு மீதான நேச நாட்டு கடல் வழி படையெடுப்பு ஜூன் 6, 1944ம் தேதி துவங்கியது. பிரான்சின் நார்மாண்டி கடற்கரைப் பகுதியில் நிகழ்ந்த இப்படையெடுப்புக்கு ஓவர்லார்ட் நடவடிக்கை என்று குறிப்பெயர் இடப்பட்டிருந்தது. படையெடுப்பு நிகழ்ந்த கடற்கரை ஐந்து பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது - யூட்டா, ஒமாகா, கோல்ட், ஜூனோ மற்றும் சுவார்ட். இந்த ஐந்தனுள் மேற்கு முனையில் இருந்ததெ யூட்டா கடற்கரை. போப்வில் நகரத்துக்கும் லா மடிலைன் கிராமத்துக்கும் இடையே அமைந்திருந்த 5 கி.மீ. நீளமுள்ள கடற்கரையே யூட்டா கடற்கரை என்றழைக்கப்பட்டது. ஜெர்மானியர்கள் இதற்கு டபிள்யூ 5 என்று குறிப்பெயரிட்டிருந்தனர். ஜூன் 6ம் தேதி அதிகாலை அமெரிக்க 7வது கோரின் ஒரு பகுதியான 4வது தரைப்படை டிவிசன் யூட்டா கடற்கரையில் தரையிறங்கத் துவங்கியது. இப்படையிறக்கம் நான்கு அலைகளாக நடைபெற்றது. பல படைப்பிரிவுகள் தங்கள் இலக்குகளிலிருந்து விலகி தெற்கே தரையிறங்கின. எனினும் விரைவில் சுதாரித்துக் கொண்டன. ஒமாகா கடற்கரையைப் போல இக்கடற்கரையில் ஜெர்மானிய பாதுகாவல் படைகள் எதுவும் இல்லாததால், எதிர்த்தாக்குதல்கள் நிகழவில்லை. மேலும் ஏற்கனவே வான்வழியாக தரையிறங்கியிருந்த அமெரிக்க 101வது மற்றும் 82வது வான்குடை டிவிசன்கள் நிலப்பரப்பில் ஜெர்மானியப் பாதுகாவல் படைகளுடன் கடும் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். இதனால் ஜெர்மானியப் படைகளால் யூட்டா படையிறக்கத்தைத் தடுக்க முடியவில்லை. ஜூன் 6 இரவுக்குள் சுமார் 23,250 வீரர்களும் 1700 வண்டிகளும் யூட்டாவில் தரையிறங்கி விட்டன. யூட்டா கடற்கரை முழுவதும் நேச நாட்டு கட்டுப்பாட்டில் வந்த பின்னர் 4வது டிவிசன் டூவ் ஆற்று முகத்துவாரத்தருகே அதன் மேற்குக் கரையில் நடந்த நேச நாட்டுத் தாக்குதலில் வலங்கை (right flank) யாக செயல்பட்டது. படங்கள்
மேற்கோள்கள் |
Portal di Ensiklopedia Dunia